Sunday, February 02, 2014

அசோகமித்ரனின் "18வது அட்சக்கோடு"

அசோகமித்ரனின் "18வது அட்சக்கோடு" நாவலை யாரோ படமாக எடுத்துவிட்டார்கள். அந்தப் படத்தில் இருந்து சில காட்சிகள்.

காட்சி 1 வயது முதிர்ந்த ஒருவர் புத்தகத்தை நீட்ட இன்னொருவன் வாங்கிக் கொள்கிறான். 

காட்சி 2 ஒடிசலாக உள்ள ஒருவன் சைக்கிளில் விரைகிறான் .மணிகூண்டு, tank bund, திரையரங்கம், மோண்டா மார்க்கெட் பதெஹ் மைதான்,keyes ஹைஸ்கூல், SPG சர்ச்,லான்சர் barracks, நிசாம் காலேஜ், என காட்சி விரைகிறது ஏரிக்கரை அருகே சைக்கிளை நிறுத்தி வேடிக்கைப் பார்க்கின்றான். 

காட்சி 3 எருமை மாடு ஒன்று குரோட்டன்ஸ் செடியை சுவைத்துக் கொண்டிருக்கிறது. எதிர்பாராத அடி ஒன்று விழ மாடு அரண்டு திமிறி ஓடுகிறது. சந்துரு அந்த மாட்டை கையில் பிடித்தபடி வீடு திரும்புகிறான் 

காட்சி 4 சந்துருவும் அவன் நண்பர்களும் டார்சான் படத்தில் வருவது போல் அந்த ஆலமர விழுதுகளில் தொங்கி விளையாடிக் கொண்டிருக்கின்றனர். 

காட்சி 5 சந்துரு அவன் வீடு இருக்கும் ஏரியா முழுவதும் சும்மா நடந்து வந்து கொண்டிருக்கும் போது ஒவ்வொரு வீடாக காண்பிக்கப் படுகிறது. உயரமான வீடுகள், பிள்ளையார் கோவில், மசூதி, சர்ச் மற்றும் கல்லறை மீண்டும் மீண்டும் காண்பிக்கப்படுகிறது. சந்துருவும் அவன் நண்பர்களும் கல்லறையில் ஒவ்வொரு பெயராக படித்த வண்ணம் நடந்து செல்கிறார்கள். 

காட்சி 6 கிரிக்கெட் நெட் ப்ராக்டிஸ் – சந்துரு பேட் செய்யும் போது பவுலர்கள் பந்தைத் தாறுமாறாக வீசுகின்றனர். குறிப்பாக ஒருவன் எல்லாப் பந்துகளையும் சந்துருவின் முகத்துக்கு நேரே வீசுகிறான். இன்னொருவன் குழந்தைக்கு போடுவது போல் உருட்டுகிறான். கேப்டன் சரியாக வீசுகிறான். எந்தப் பந்தையும் சந்துருவால் சரியாக ஆட முடியவில்லை. ஆட்டம் முடியும் வரை ஏனோ தானோ வென்று ஆடி பயிற்சி முடிவில் சந்துரு குழப்பமடைந்தவனாகக் காணப்படுகிறான். 

காட்சி 7 ஒரு பெண் சந்துருவிடம் பேசும் பொது ஏன் முகத்தைப் பார்த்தபடி இருக்கிறாய் என்று கேட்கிறாள் சந்துரு பதில் பேசாது அவள் முகத்தை பார்த்தபடியே இருக்கிறான். பெண்ணின் முகத்தில் ஒரு குறும்பு சிரிப்பு வருகிறது. மேலும் சந்துரு மனதில் உள்ள வெவ்வேறு பெண்கள் முகங்கள் நிழலாக திரையில் வந்து போகிறது. தொடர்ச்சியாக நடு இரவில் ஆலமரத்தடியில் சந்துரு அமர்ந்திருக்கிறான் எதேச்சையாக பக்கத்துக்கு வீட்டுப் பெண்ணும் அங்கு அழுது கொண்டிருக்க சந்துரு கட்டிப் பிடித்து ஆறுதல் சொல்கிறான். 

காட்சி 8 சந்துரு ஒரு எருமை மாட்டின் பின் ஓடுகிறான். மாடு தாறுமாறாக ஓடுகிறது. கூடவே சந்துருவின் தந்தையும் வருகிறார். இறுதியில் ஒரு கிராமத்தை அடைந்து ஒரு ஆளிடம் மாட்டை பத்திரமாகப் பார்த்து கொள்ளும்படி கூறி வீடு திரும்புகிறார்கள். 

காட்சி 9 “இந்தியாவிற்கு சுதந்திரம்” ரேடியோ கொர் கொர் சத்தத்துடன் அறிவிக்கிறது. “அணை அதை சனியன்” என்ற குரல் கேட்டவுடன் ரேடியோ அணைக்கப்படுகிறது. சந்துரு ரேடியோவை மறுபடி திருக “ஆடுவோமே பள்ளு பாடுவோமே” என்று DK பட்டம்மாளின் குரல். 

காட்சி 10 சந்துருவிடம் வளையலை நீட்டுகிறாள் ஒரு பெண். தெரியாமல் அதை கையில் வாங்கியவன் அந்த பெண்ணும் கூட இருந்தவர்களும் சிரித்தது கண்டு வளையலை திரும்ப அளித்து அந்த இடத்தை விட்டு ஓடுகிறான். 

காட்சி 11 மார்க்கெட் அருகே சைக்கிளில் சந்துரு வந்து கொண்டிருக்கும் பொது இருவர் சந்துருவை வழி மறித்து அடிக்கின்றனர் சந்துரு சைக்கிள் அடியில் செல்ல பெரும்பாலான அடி சைக்கிள் மீது விழுகிறது. அப்போது அங்கு வரும் இன்னொரு குழு சந்துருவை அடித்தவர்களை திருப்பித் தாக்குகிறது. சண்டை முற்றிய நேரத்தில், திடீரென காந்தி அவ்விடம் வருகிறார். ஈஸ்வர் அல்லா தேரே நாம் என்று தன் குரலில் பாடுகிறார். சண்டையிட்டவர்கள் செய்வது அறியாது கலைந்து செல்கின்றனர். சட்டென காந்தி மறைகிறார். சந்துரு அந்த இடத்தில சுற்றும் முற்றும் சிறிது நேரம் காந்தியை தேடி களைத்து ரோட்டில் விழுகிறான். 

காட்சி 12 சந்துரு நீளமான சாலையில் சைக்கிளுடன் அடியின் வலியுடன் நடந்து செல்லும் பொது குறுக்கே மூன்று பசு மாடுகள் வருகின்றன. சந்துரு அவற்றை வாஞ்சையோடு பார்த்து அதன் கழுத்துகளை ஒவ்வொன்றாக சொரிந்து கொஞ்சுகிறான். மாடுகள் மகிழ்ச்சியுடன் அதன் கழுத்துகளை நீட்டுகின்றன. 

காட்சி 13 “சந்திரசேகரன்” – தன்னை தான் அழைத்தார்கள் என்றவுடன் குழப்பத்துடன் மேடை ஏறி தடுக்கி விழுந்து எழுந்து பாரதியாரின் “விடுதலை விடுதலை“ பாடல் பாடுகிறான்.கரகோஷம். எல்லோரும் அவனிடம் இந்த பாட்டை பாடச் சொல்லிக்கொடுக்குமாறு சூழ்ந்து கொள்கின்றனர். 

காட்சி 14 அரசு முத்திரையுடன் அழகிய வெளிநாட்டுக் கார் ஒன்று செல்கிறது. அதன் பொருட்டு மற்ற வண்டிகளை விசில் அடித்து நிறுத்துகின்றனர். சந்துரு காரினுள் பார்க்கிறான். யாரும் இருப்பது போல் இல்லை உற்றுப் பார்க்கையில் திரையில் வெண்டைக்காய் வற்றல் காண்பிக்கப் படுகிறது. 

காட்சி 15 சிறுவர்கள் வைத்து விளையாடும் kaleidoscope - உள்ளே வண்ணங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்தும் பிரிந்தும் சிறிய ஜாலம். வகுப்பறை கலைந்து ஒரு குரூப் மாணவர்கள் மட்டும் ஏதோ போராட்ட சம்பந்தமாக பேசுகிறார்கள். மீதி உள்ளவர்கள் இவற்றில் கலக்காமல் தேமே என்று இருந்தனர்.

காட்சி 16 மாணவர்கள் ஊர்வலம் நிற்கிறது. தடியடியும் கண்ணீர் புகையும் ஆரம்பிக்க ஊர்வலகாரர்கள் சிதறி ஓட சந்துரு ஒரு சிறிய சந்தில் நுழைகிறான். போலீஸ் நெருக்குகிறது. சடாரென்று ஒரு குடிசை வீட்டினில் நுழைந்து கதவை சாத்துகிறான். உள்ளே ஒரு கிழவி இருந்தாள். கிழவியின் அருகில் ஷேக்ஸ்பியர் அமர்ந்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டான் . பின்னர் சுதாரித்து நீங்கள் இந்தக் கிழவியை பற்றி ஏதேனும் பாடல் பாட இங்கு வந்தீர்களா என்று கேட்க அதற்கு அவர் என்னிடம் அதற்கான வார்த்தைகள் இல்லை என்று கூறுகிறார். 

காட்சி 17 சந்துரு வீட்டார் அனைவரும் சினிமா சென்று திரும்பி ஒரு ஊர்வலம் போல் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருக்கும் போது “காந்தி இறந்து விட்டார்” என்று ஒருவன் கத்தியபடியே செல்கிறான். மார்கெட்டில் ரேடியோவில் நேருவின் அஞ்சலி உரை. சந்துரு பதட்டமடைந்து பதெஹ் மைதான் சென்று அழுகிறான். குழந்தையை போல் கை கால்களை உதைத்து மண்ணில் உருண்டு, பிரண்டு, புற்களைப் பிராண்டி, குவித்து வைக்கப்பட்டுள்ளக் கற்களை சகட்டுமேனிக்கு வீசி மைதான் குறுக்கே வெறிப் பிடித்தவன் போல் ஓடுகிறான். 

காட்சி 18 சந்துரு தன் கட்டை விரலை கீறி ஒரு பேப்பரில் ரத்தக் கையெழுத்து இடுகிறான். அந்த பேப்பரை வாங்கிக்கொண்டு ஒருவன் தன் வீட்டினுள் சென்று ஒளிந்து கொள்கிறான். சந்துரு எவ்ளோவோ அழைத்தும் வீட்டிலிர்ந்து வெளி வர அவன் மறுத்து விட்டான். அங்கிருந்து மிருகக் காட்சி சாலை சென்று புல் தரையில் உறங்குகிறான். காலேஜ் விடும் நேரம் மாலையில் வழக்கம் போல் வீடு திரும்புகிறான். 

காட்சி 19 இரண்டொருவர் சேர்ந்து பஸ்சில் பெட்ரோலுக்கு பதில் கடலெண்ணெய் ஊற்றுகின்றனர். பஸ் செல்லும் வழியெங்கும் மக்கள் மூக்கை பிடித்தபடி புகையை சகித்துக் கொண்டு நடந்தனர். 

காட்சி 20 வீடெங்கும் சோள ரொட்டி அடுக்கி வைத்தது போல் சந்துரு கனவு காண்கிறான. கனவு கலைந்தவுடன் எழுந்து சாப்பிட உட்காருகிறான். தாயார் அளிக்கும் தட்டிலும் சோள ரொட்டியே இருக்கிறது. 

காட்சி 21 ஆள் அரவமற்ற மார்க்கெட் மற்றும் மெயின் ரோடில் சந்துரு அவன் தந்தையுடன் நடந்து செல்கிறான். ரேஷன் கடையில் விமானத்தில் டாங்கி வந்ததாக ஒருவன் கூறுகிறான். இனிப்பு கடையில் பால்யவயது சந்துரு ஏதோ ஒரு இனிப்பை தந்தை கையில் வாங்குகிறான். வாங்கியவுடன் இள வயது சந்துருவாகி தந்தையுடன் நடந்து வீடு திரும்புகிறார்கள். வீடு திரும்பும் வழி கலவர பூமியாக காட்சி அளிக்கிறது. 

காட்சி 22 கலவரம் ஓய்ந்து சகஜ நிலை. மார்க்கெட்டில் எல்லோரும் ரேடியோ கேட்பதில் கவனமாக இருந்தனர். நிசாமின் உரை. இந்தியாவுடன் இணைகிறோம். ஜனங்கள் உற்சாகமும் படாமல் வருத்தமும் அடையாமல் கலைந்து சென்றனர். சந்துரு வீட்டின் வெளியே வந்து பார்த்த பொது தூரத்தில் ஏதோ எரிவது போல் தெரிந்தது.வீட்டிலிருந்து ஓடி மார்க்கெட் அருகே சென்றான். ஒரு கடையின் பொருட்கள் குவித்து வைத்து தீ வைக்கப்பட் டிருநதது. திடீரென ஒரு கும்பல் ஆயுதங்களுடன் ஓடி வர தப்பிக்க நினைத்த சந்துரு ஒரு வீட்டினுள் நுழைந்தான். வீட்டில் உள்ளவர்கள் சந்துருவிடம் ஒரு சிறுமியை பணயமாக வைத்து தங்களை ஒன்றும் செய்யாமல் இருக்க வேண்டினர். அதிர்ச்சி அடைந்த சந்துரு அவ்வீட்டிலிரிந்து வெளியேறி மீண்டும் தெருவில் ஓடுகிறான்.