Pages

Saturday, July 02, 2022

பூமியெங்கும் பூரணியின் நிழல் - குமாரநந்தன்

பூமியெங்கும் பூரணியின் நிழல் சிறுகதை தொகுப்பு வாசித்தேன்.கதைகளை வாசிக்கையில் தோன்றிய சில...


நாம்  காணவியலாத, புறத்தை விட பன் மடங்கு பல்கி பெருகிக் கொண்டே இருக்கும் அக உலகின் அநேக பரிமாணங்களை உணர்த்தியபடியே செல்லும் கதைகள் இந்த தொகுப்பில் உள்ளன. 

அகம் சுட்டும் விஷயம் அல்லது அகத்தில் தெரிவது அல்லது நம் அகம் தான் என்ன ? , நடந்த நிகழ்வின் நினைவுப் பதிவா ? நடக்காத நம் பகற்கனவா ? ஊருக்கு நாம் கட்டிய வேஷத்தின் மனக் குமுறலா ? நம் வக்கிர ஆசைகளுக்கு ஒரு எளிய வடிகாலா ? நம் குரங்கு மனதின் திடீர் ஆசையா ? குற்றஉணர்வு ஒய்யாரமாக நடை பயிலும் ராஜபாட்டையா ?   சுகமும் துக்கமும் ஒன்றை ஒன்று விரட்டியபடி செல்லும் மேகக் கூட்டமா ? எல்லையில்லா விஷயத்தை வார்த்தையில் சொல்ல முயலும் வலைப்பின்ன உளறலா  ?  நாம் காண்கையில் ஒடிக்கொண்டே நின்று கொண்டிருக்கும் பிரவாக கானலா ? நிரம்பிக்கொண்டே இருக்கும் ஓட்டைப் பாத்திரமா நம் அகம் ? 

கதைகள் உலகில் எளிதில் நுழைய முடிகிறது. எண்ணம் விடு சொல், சொல் விடு செயல், செயல் விடு எண்ணம் என தொடர்புள்ளது போலவும் தொடர்பிலாதது போலவும் போக்கு காட்டும் நம் எண்ணங்களை கதைகள் ஆக்கி இருக்கிறீர்கள். எண்ணத்தை விரட்ட சொல், சொல்லை விரட்ட செயல், செயல் வினை பிரவாகம் நிறுத்த இயலாத பல மடங்கு எண்ணங்களை பல மடங்கு  சொற்களை கொண்டு சேர்க்க, செயல் தடுமாற்றம். 

நதி, மழையை இயக்குபவன், சபிக்கப்பட்ட நிலம் கதைகள் மிகவும் பிடித்திருந்தன. குறிப்பாக மழையை இயக்குபவன் கதை நின்ற இடத்திலேயே மாறிக்கொண்டே இருக்கும் காட்சிகள் எண்ணங்கள் முடிவுகள் என தொகுப்பின் அனைத்து கதைகளின் மென் எதிரொலி போல அமைந்திருந்தது. 

இத்தனை உலகங்கள் கொண்ட ஒரு மனிதன் ஒற்றை உண்மையை தேடுவது இயல்பே ஒரு வேளை ஓட்ட நிறுத்த முயற்சியோ ? 

ஒரு நபர் ஏதோவொரு விஷயம் காரணமாக பிடிக்காத நபர் ஆகி விடுகிறார். அதன் பிறகு அந்த விஷயத்தை வேறெங்கேயும்  வேறு யாரோ வெளிப்படுத்தினாலும் அவ்விஷயம்  நமக்கு முதல் நபரின் சாயலிலேயே காட்சி அளிக்கிறது. 

பிடிக்காத நபர் செய்தவை பாதி, அவர் செய்ததை எண்ணி எண்ணி துன்புறும் இன்பத்தில் அவர் செய்யாததையும் நாம் துல்லியமாக காட்சிப்படுத்தி அல்லது செவிமடுத்து நம் அகத்தை கோபத்தால் நிறைப்போம். அந்நேரத்தில் அந்த பிடிக்காத நபர் நமக்கு தற்சமயம் நல்லதே செய்துக் கொண்டிருந்தாலும் நாம் காட்சிப்படுத்திய அல்லது செவிமடுத்த கற்பனை அத்தனை துல்லியமாக இருக்கும் காரணத்தால், நம் கோபம் பன் மடங்கு அதிகரிக்கும். மனதின் விந்தைகளில் இதுவும் ஒன்று.

No comments:

Post a Comment