Wednesday, February 04, 2026

மயல்

மயல் சுவாரஸ்யமான சரளமான வாசிப்பை அளிக்கும் நாவல்.

மிகவும் ரசிக்க தக்க வேறு வேறு விஷயங்களின் எதேச்சையான தொகுப்பாக இந்த நாவல் அமைந்து விட்டது.


நல்ல உணவு, குறிப்பாக தஞ்சை சைவ உணவு குறித்தான விவரணைகள் ரசிக்கதக்கதாக அமைந்திருக்கிறது. ருசி ஏக்கம், சமையல் பொருட்களின் தேர்வுகள், தயாரிப்பு இவை குறித்தே பெருமளவு விவரணை அமைந்திருக்கிறது. பசி குறித்தும் சுவையற்றதுமான பதார்த்தங்கள் குறித்தும் விவரணை அநேகம் இல்லை.

நாவலின் நாயகன் கிருஷ்ணாவிற்கும் கதையில் வரும் பெண்களுக்குமான உறவுகளின் விவரணை பெரும்பாலும் புறவயமாகவே அமைந்திருக்கிறது.விவரணை மிக சிறப்பாக அமைந்திருந்தாலும் ஆண் பெண் இரு மருங்கிலும் உள்ள ஏக்கத்தையும் ஆசையையும் விட அவர்கள் சந்தித்து அளாவி மகிழ்ந்து குலவும் இடங்களில் புற விவரணைகளே அதிகம் இடம் பெற்று இருக்கின்றன. ஷ்யாமாவால் , நீலாவால் அம்மாவால் பாட்டியால் கிருஷ்ணாவிற்கு என்ன கிடைத்தது என்பதான கவனம் அதிகமாகி - அப்பெண் பாத்திரங்களின் உருவே கிருஷ்ணாவால் வடிக்கப்பட்ட ஒன்றாக அமைந்து விட்டது.

நாயகன் நாவல் தொடங்கும் பொழுதே, சமூகத்தில் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்ற மனிதன், காரியங்களை முடிக்கும் சமர்த்தன், நாவல் முடிகையிலும் இடையின் சிறு இடறலை தவிர இந்த நிலையில் எந்த மாற்றமும் இல்லை - நாயகன் கிருஷ்ணா நமக்கு விவரிக்கும் புதிர் பாதையின் எதேச்சையும், கர்மாவும், பெரியவர்களின் ஆசியும்,பூடகமும், அவன் சந்திக்கும் சவால்களும் ஒரு சாகசத்தை ஒத்தே இருக்கின்றதே ஒழிய ஒரு மெய்மை தேடலாக அமையவில்லை - ஒரு மெய் தேடலுக்கான வலுவான சம்பவங்களும் கதையில் அமையவில்லை.மெய்மை தேடலுக்கான கலை சொற்கள் சில இடங்களில் அமையப்பெற்று இருந்தாலும் அவை பெரும்பாலும் ஒரு தொடர்ச்சியை அளிக்க வில்லை.

நாவலின் சாகசப் பகுதிகளின் புற விவரணைகள் சில இடங்களில் குறிப்பிடும்படியாக இருந்தாலும் அவற்றின் குறியீட்டு தன்மையும் நாயகனின் தேடலுக்கு வலு சேர்க்கும் ஒன்றாக இல்லை. நாயகன் புறத்தே அல்லது அகத்தே ஒரு பொருளை தேடி செல்கையில் நடுவில் வரும் தடைகள் தேடப்படும் பொருளை / விஷயத்தை சுற்றியே அமைந்திருந்தால் நாவலின் வடிவம் கட்டுக்குள் இருந்திருக்கும்.

நாவலின் நாயகன் ஒரு வெற்றியாளன் - உறவு சிக்கல் இல்லாதவன் - பணக்காரன் - குடும்பத்தின் அனுசரணை உள்ளவன் -உணவை ரசித்து உண்பவன் - தன் மனம் இயங்கும் விதம் பற்றிய சித்தம் தெளிந்தவன் - முன்னோர் ஆசி பெற்றவன் - உலகத்து உயிர் அனைத்தும் அவனுக்கு துணை - இவ்வாறு எல்லா ஒருங்கே அமையப்பெற்றவன் - தனக்கு அளிக்கப்பட்ட சாகச கடமையை செவ்வனே முடித்தவன் - இத்தனை நேர்மறை அம்சங்களும் , சஞ்சலமற்ற தன்மையும் கதையின் வீச்சை பெருமளவு குறைக்கிறன.

இருப்பினும் ,நாவல் திறந்த கொள்ளும் இடங்கள் இரண்டு. ஒன்று, நாம் உண்ணும் உணவின் சுவைக்கும் நம் மெய்மைக்கும் நம் பெற்றிருக்கும் குணத்திற்கும் உள்ள சுக்ஷும உறவு பற்றிய அறிவு . இரண்டு, காமத்தை கடக்க நினைக்கையில் மனம் பெண்மையை நோக்கிய தனது எண்ணமாற்றத்தை அடைய வேண்டியதன் தெளிவு. இரு புள்ளிகளையும் சில இடங்களில் கோடிட்டு மட்டும் காட்டி நாவல் நின்று விடுகிறது.

நாவலுக்கு வெளியே - மனிதனை மிகவும் அலைகழிக்க வைக்கும் உணவு தேடலும் காமமும், எதிர்பார்த்த அளவில் மனிதனுக்கு கிடைத்து விட்டால், மெய்மை தேடல் என்ற ஒன்று அவனுக்கு தேவைப்படுமா என்ன ? மரணம் குறித்த நினைவை நல் உணவும் காமமும் விரட்டி விடுமா என்ன ? ஊழின் கரங்களை அவை வெல்லுமா என்ன?

Saturday, January 24, 2026

உள்ளே மாட்டிய சாவி

உள்ளே மாட்டிய சாவி சிறுகதை தொகுப்பு வாசித்து முடித்தேன். இந்த  கதைகளில் திரும்பத் திரும்ப வருகின்ற ஒரு சித்திரம் “உலகம்,  அதன் போக்கில், சற்றும் கவலையற்று இயங்கி கொண்டிருப்பதான” சித்திரம். இது தான் கதைகளுக்குள் நுழைவதற்கான முதல் வாசல்.


--

காலத்தின் கணக்கில் , தங்கள் உழைப்பை தங்கள் பங்களிப்பை குறிப்பிடத்தக்க வகையில் செய்த  ஆளுமைகள் குறித்த கதைகள் இவை. அந்த ஆளுமைகளின் பங்களிப்பை நினைவு கூறும் விதமாகவே இந்த கதைகள் அமைந்துள்ளன - அந்த ஆளுமைகளின் அந்தி காலங்களின் மறதி, விரக்தி, இயலாமை புறக்கணிப்பின் ஊடே தாம்  அவர்களின் கடந்த கால பெருஞ்செயல்களை நினைவு கூறுகிறோம்.

--

ஒவ்வொரு கதைகளிலும் ஒரு சின்ன சொற்றொடர் மனதிற்கு மிகவும் நெருக்கமாக அமைந்தது

“உள்ளே மாட்டிய சாவி “ (அது  கவிஞர் சுகுமாரன் அவர்கள் இட்ட தலைப்பு என்று ஆசிரியர் முன்னுரையில் கூறியுள்ளார் அந்த தலைப்பு நல்லபடியாக அமைந்துள்ளதாக மனதில் பட்டது )

“உணர்ச்சிகள் ஏதும் இல்லாத பிரம்மாண்ட இயந்திர பறவையை “

“காட்டில் மரங்களினுடைய நடப்பதை போல புத்தகங்களை பார்த்தவாறு அடுக்குகள் நடுவே உலாவிக் கொண்டிருந்தான் “

“வளைந்த மூங்கில்களே எலும்புகளைப் போல் தோன்றின “

“ஒருவரால் தொடர்ந்து ஏமாற்ற முடியாது அவரிடம் வைக்கும் அவர் மீது நம்பிக்கை அவரை மாற்றும்”

“ஒருவர் பணத்தை எந்திரத்தில் எண்ணி கட்டி மூளையில் அலட்சியமாக எரிந்து கொண்டிருந்தார்

உங்களுக்கு பணம் கொடுத்தவரும் கடன் வாங்கிப் போனாரு”

“பின்னாலிருந்து தேர் பல எறும்புகள் இழுத்துச் செல்லும் பண்டம் போல் இருந்தது”

“இப்பத்தான் போட்ட கன்னுகுட்டி போல் இருக்கிறது என் புகைப்படத்தை தொட்டு முத்தம் கொடுத்தாள் “

--

இந்தக் கதைகளில் தோன்றும் மற்றொரு சித்திரம் நகரமயமாதல். ஒவ்வொரு கதைகளும் மெல்ல முன்பு கண்ட இடங்களெல்லாம் கண் முன்னே காணாமல் போகின்ற ஒரு சித்திரம் வந்து கொண்டே இருக்கிறது. மாற்றம் ஒரு புறம் என்றால் அந்த மாற்றம் சில மக்களை தீண்டவே இல்லை என்பதான இன்னொரு சித்திரமும் வந்து கொண்டே இருக்கிறது. தீண்டவே இல்லை என்றால் அவர்கள் வாழ்வில் முன்பிருந்ததை விட அவர்கள் ஒரு நெருக்கடியான கடினமான ஒரு சூழ்நிலையில் வாழ நேர்ந்ததை இந்த கதைகள் பதிவு செய்கின்றன.

--

தலைக்கசம் கதை பூரண கலை அமைதி பெற்ற கதையாக எனக்கு பட்டது. இந்த கதைகளில் வரும் அதனை நிகழ்வுகளையும் நாம் வரிசைப்படுத்த முயல்கையில் - பின்தோற்றம் -இறப்பு-காதல்-தோற்றம் - படிப்பு-கண்டிப்பு-பழங்குடி-உடல்-படிப்பு-விளையாட்டு-புத்தகம்-தூது-காதல்-புகைப்படம்-கள்-உணவு-சாதி-உடல்- கூட்டு சிரிப்பு-பாகுபாடு-உடல்உழைப்பு - சர்க்கார் வேலை விண்ணப்பம்- காணாமல் போதல்-பின்தோற்றம்-மீள் தேடல்-தலைக்கசம் மாயம் - குடியிருப்பு பிளாட் தோற்றம் என்று வரிசைபடுத்தலாம். நம் சமகால பிரக்ஞையின், மானுடம் கடந்து வந்த பாதையின் தீற்றல்கள் இந்த கதையில் உள்ளன.

Monday, January 12, 2026

பாரபாஸ்

இன்றைய நவீன மனிதனுக்கு இணையாக வைத்து நாம் பாரபாஸை காண முடியும்.இரு புள்ளிகளில் இருந்து பாரபாஸ் சென்று அடைய நினைத்த ஒரே இடம் இயேசு கிறிஸ்து. ஒருவரை ஒருவர் நேசியுங்கள் என்று சொன்ன இயேசு கிறிஸ்து. இன்னொருவரின் பாவத்தின் சுமையை சுமக்க சொல்லும் இயேசு கிறிஸ்து.


மிதமிஞ்சிய களியாட்டங்களை விடுதலை உணர்வு மிகுந்த கொள்ளையனான பாரபாஸுக்கு பதில் கிறிஸ்து சிலுவையை ஏற்று கொள்கையில் பாரபாஸ் தடுமாற துவங்குகிறான் . இது முதற்புள்ளி. இனி அவன் பழைய பாரபாஸ் கிடையாது. கிறிஸ்துவை பின்தொடர்ந்து அவரை பின்தொடர்பவர்களை பின் தொடர்ந்து தனது கேள்விகளாலும் அவர்களது விளக்கங்களாலும் எஞ்சிய மௌனங்களினாலும் கிறிஸ்துவை புரிந்து கொள்ள முயல்கிறான். எவ்வளவும் முயன்றும் அவனால் கிறிஸ்துவை முழுமையாக நம்ப முடியவில்லை - பாரபாஸின் அவநம்பிக்கை கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் எளியவர்களிடம் இருந்து அவனை பிரித்து விடுகிறது. தனது சாத்வீக மனசஞ்சாரங்களில் அவன் அடிக்கடி ஈடுபட்டதால் அவன் தனது பழைய நண்பர்களுக்கும் வேண்டப்படாதவனாக மாறிவிடுகிறான். பாரபாஸ் காணாமல் போகிறான். முதல் புள்ளி முற்றும்.


இரண்டாம் புள்ளி - மீண்டும் தோன்றும் பாரபாஸ் முற்றிலும் வேறு ஒரு சூழலில் இருக்கிறான் - வெளி உலகத்தை காணவே முடியாத சுரங்கத்தில் அடிமையாக இன்னொரு அடிமையுடன் சங்கிலி பிணைப்பில் தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறான். இத்தகைய அடிமை சூழலில் பிணைப்பிலிருக்கும் அடிமையின் நம்பிக்கையை ஒற்றி இயேசு கிறிஸ்து மீண்டும் அவன் வாழ்வில் தோன்றுகிறார். கிறிஸ்துவின் மீட்பு குறித்த அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட தனது இணை அடிமை உடன் இருந்து பாரபாஸ் கிறிஸ்துவை நம்பியும் நம்பாமலும் சுரங்க அடிமை வேலையில் இருந்து மீண்டு, விவசாய அடிமை ஆகி, வீட்டு அடிமை ஆகிறான் - முழுவதுமாக நம்ப முடியாததான தவிப்பு பாரபாஸை அலைக்கழிக்கிறது. மீட்சியையும் இயேசுவின் இன்னொரு வருகையையும் அவன் நம்ப முயல்கிறான் - நம்ப விரும்புகிறான் . ஆனால் முழுவதுமாய் அவனால் நம்ப முடியவில்லை. இத்தகைய தத்தளிப்பான மன நிலையில் இருந்து ஒரு சிறு குழுவின் நடவடிக்கையை பின் ஒற்றி சென்று - கடைசி சிறு ஒளியை கண்டும் காணாமலும் மிகப் பெரிய தீயின் வழியும் கிறிஸ்துவை காண முயன்று இருளில் சென்று மறைந்து விடுகிறான்.

கட்டற்ற களியாட்டம் முதற்புள்ளி.  உழைப்பை உறிஞ்சும் கட்டமைப்பான ஒழுங்கு இரண்டாம் புள்ளி . இவ்விரு புள்ளிகளில் தொடங்கி கிறிஸ்துவை நோக்கி நடக்கையில் நம்பியும் நம்பாமலும் அலைக்கழிப்பில் சிக்குண்டு இருக்கிறான் நவீன பாரபாஸ்.