கடந்து விட்ட பழையன குறித்த வியப்பு, பெருமை, ஏக்கம் வெளிப்படும் அழகியல் அமைந்த கதைகள் இந்த தொகுப்பில் உள்ளன.
இந்தியாவை ஆங்கிலேயர்கள் விட்டு சென்று, ஜமீன்தார்கள் விட்டும் விடாமலும் இருந்து கொண்டிருந்த கால கட்டத்தில் அமைந்த கதைகள் இவை.
தனிப்பட்ட ஆசை உணர்வுகள் ஏக்கம் குறித்த அளவில் அமைந்த கதைகள் வாசிக்க சுவாரஸ்யமாக இருந்தாலும் அவை மேலதிகமாக நினைவு கூரத்தக்கதாக இல்லை.
அரசியல் தளத்தில் அமைந்த கதைகளில் இந்தியாவில் அன்று நிலவி வந்த மன்னராட்சியும் இல்லாத மக்களாட்சியும் அமையாத குழப்பமான சூழ்நிலை பதிவாகியிருக்கிறது. ஆனால் குறிப்பிடத்தக்க கதைகளாக அமையவில்லை.
இப்பதிவினை எழுத தூண்டுதலாக அமைந்த கதைகள் நான்கு , புத்தக தலைப்பு கதையான "பிருதிவிராஜனின் குதிரை" , நீரில் மூழ்கிய பள்ளத்தாக்கு", "நிர்வாணம்" மற்றும் "முதலையின் மனைவி" ஆகிய கதைகளே அவை.
நான்கு கதைகளுமே வேறு வேறு தளங்களில் மிகவும் நன்றாக அமைந்து விட்ட கதைகள் - கிட்டத்தட்ட படிமங்களாகவே நினைவு கொள்ளும் படி அமைந்து விட்ட கதைகள்.
பழையது குறித்து பல்வேறு பரிணாமங்களை "பிருதிவிராஜனின் குதிரை" மிக கச்சிதமாக தொட்டு செல்கிறது. அடைத்து வைக்கப்பட்ட ஏக்கமும் பெருமிதமும் கதையின் மைய சரடு.
நீரில் மூழ்கிய பள்ளத்தாக்கு - நவீன இந்தியாவின் பொருளாதார சுய சார்பு வளர்ச்சி பாதையின் துவக்கத்தில் நடந்த கதை, வளர்ச்சி கொண்டு வரும் மாற்றங்கள் குறித்த பல இடங்களை தொட்டு செல்லும் கதை.
"நிர்வாணம்" கதை நம் இந்திய இறை நம்பிக்கையின் ஊற்றையும் தற்செயல் நிகழ்வுகளையும் நுட்பமாக இணைக்கும் கதை.
"முதலையின் மனைவி" கதை மேலை கீழை வாழ்க்கை பார்வைகளை குறித்த நாட்டார் கதைகளின் சாயல் கொண்ட கதை.
நான்கு கதைகளும் எளிதில் நினைவில் கொள்ளத்தக்கவை.இன்னொருவருக்கு திரும்ப கூறுகையில் மனதிற்கு மகிழ்ச்சியையும் உவகையையும் அளிப்பவை.
பெரும்பாலான கதைகளில், கதை மாந்தர்கள் தெய்வமாக பேயாக மிருகமாக உருமாற்றம் அடைவதும், நடந்த நிகழ்வுகள், நிகழாத பிரமைகள் மற்றும் கனவுகள் ஒன்றோடு ஒன்று இணைவதும் கதையின் மையப் புள்ளிக்கு வலு சேர்க்கின்றன.