Monday, June 21, 2021

பாலை நிலப் பயணம் - செல்வேந்திரன்

கானுயிர், தொல் சின்னங்கள், நிலக்காட்சி, வழிப்பாட்டுத் தலங்கள்,  வரலாற்று தகவல் கள், ஊர் பெயர்கள், குடும்ப பெயர்கள் என ஒட்டுமொத்த அடையாளங்களையும் தெரிந்துக் கொள்ள, நிறைவான வாசிப்பு 

Saturday, June 19, 2021

கூந்தப்பனை- சு வேணுகோபால்

 

2001 ல் வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு, நான்கு சிறுகதைகளையும் இணைத்து என் எண்ணங்களை தொகுத்துக் கொள்ள முயன்றிருக்கிறேன், "கண்ணிகள்" சிறுகதை நான்கு கதைகளுக்கான பொதுவான பின்புலத்தை குறிக்க - "வேதாளம் ஒளிந்திருக்கும்" கதை ஆண்-பெண் டவுன்-கிராமம் இடையேயான இடைவெளி மற்றும் அலைச்சல் குறித்த வாசல்கள் திறக்க, அந்த சிறிய டவுனில் புதிய பொருட்களுக்கும் பொருள்வயின் பிரிவும் ஏற்படுத்தும் பொருந்தாத விளைவுகள் குறித்த "அபாயச் சங்காக" மூன்றாவது கதை, அனைத்தையும் உள்வாங்கி நகரமயமாக்கம் தன்னகத்தே கொண்டுள்ள மலட்டுத்தனத்தை எதிர்கொள்ளக் கூடிய தரிசனத்தை அளிக்கும் தொகுப்பின் சிறந்தக் கதையான கூந்தப்பனை.


ஆண் பெண் உறவுகள் குறித்த நிகழ்வுகளே மூன்றில் நான்கு கதைகளுக்கான அடிப்படையாக அமைந்துள்ளன, கதையின் முடிச்சுகள் வலுவானதாக இருந்தும் அவற்றை வெறும் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காகவும் பாலுணர்வு சார்ந்த அவதானிப்புகளாக மட்டும் காணாது "என்றுமுள்ள ஒன்றின் புதிய அர்த்தமாகக் கருதி, புதிதாக வந்தடைந்துள்ள காலத்தை அந்த அடிப்படை உணர்வுகளின் திரிபுகள்  கொண்டு விளக்குவதையே உட்பிரதியாக வாசிக்க வாய்ப்பிருக்கிறது. 


உடலுழைப்பை பெரிதாக கோராத புதிய பயிர்களின் வருகையால் உருமாறிக் கொண்டே இருக்கும் கிராமம் , புதிய பொருட்களின் வருகையால் உருமாறும் சிறிய டவுண்கள், மேலும் பணம் மேலும் ஆசை என்ற சின்னஞ்சிறு வருகைகள் ஏற்படுத்தும் விவசாயம் Vs பட்டப்படிப்பு என்னும் இருமை நகரமயமாக்கலுக்கு தீனி போட்டபடி இருக்கும் காலகட்டத்தை படம் பிடித்துக்காட்டும் கதைகள் இவை.


தனிமையின் சிக்கலை ஊதிப் பெரிதாக்கி விடை தெரியாது மௌனத்தில் ஆழ முயலும் நவீன நகர போக்கின் எதிரில் மைசூர்பாக் கேட்டு அழும் சிறுவனின் முதுகில் பதிந்த அன்னையின் விரல்கள் காலம் நமக்கு அளித்துள்ள மூதுரை. சிறிய பயணமோ சரியான சொல்லோ கடந்து செல்லுதலோ ,  எப்போதும் நம்மை மீட்டுக் கொண்டே இருக்கிறது. அனைத்திலும் ஒன்றையே காண அனைத்து ஜீவன்களும் ஒன்றின் இன்னொன்று என உணர்கையில் தனிமையும் குற்றஉணர்வும் என்ன செய்து விட முடியும்.

Tuesday, June 15, 2021

வேள்வித்தீ - எம்.வி வெங்கட்ராம்


வேள்வித்தீ எதன் சாட்சியாக இருக்கிறது ? ஸ்தூலமில்லாத விழுமியங்கள் சாட்சியாகவா? அவ்விழுமியங்களை கட்டிக் காக்க போராடும் மனிதர்களின் அகத்தின் நிழலாகவா? இந்த வேள்வித்தீயின் நாக்குகள் எதை நோக்கி நீண்டு செல்கின்றன ? வழி தவறுபவனை சுட்டுரைக்கவோ ? இடித்துக் கூறி வழி நடத்தவோ ? எல்லைகளை வெல்ல முடியாதவனின் கடைசி புகலிடமோ இந்த வேள்வித்தீ ?


குறிப்பிட்ட வயது கடந்த பின்னர் நமக்கும் பணத்துக்கும் ஒரு மானசீக விளையாட்டு துவங்குகிறது, கவனித்து பார்க்கையில் பிகு செய்து அலட்சியம் செய்கையில் முன்னின்று வந்து ஒரு நியாயமான விளையாட்டாக தொடரும் , இதன் நடுவே தேவைக்காக பணம் பணத்துக்கான தேவை என்கிற தான்தோன்றி விளையாட்டும் நம்மை முடிந்தவரை ஆட வைக்கும், இவ்வாட்டத்தின் விதிமுறைகள் படி நாவல் நாயகன் கண்ணன் கடமை, நேர்மை, விசுவாசம், மானம், உழைப்பு முதலிய   விழுமியங்களுடன் தனது விளையாட்டை விளையாடுகிறான், நம் அனைவரையும் போலவே முழு தொழிலாளியாகவும் முடியாது முழு முதலாளியாகவும் முடியாத திரிசங்கு தளத்தில் தனது ஆட்டத்தை நடத்துகிறான் கண்ணன். 


இந்த ஆட்டத்தின் விதியை மாற்ற விழுமியங்களை உரசிப் பார்க்க காலம் என்னும் எதிராளி காய் நகர்த்துகிறான், கண்ணனின் பதில் ஆட்டங்கள்  விதிகளுக்கு உட்பட்டு தானா ? சங்கமிக்கும் கடலில் கலக்கையில் சாக்கடையும் நன்னீரும் ஒன்று போல் தோன்றினாலும் அவை ஒன்றாகுமா? கண்ணனின் குரலில் ஒன்று முடிந்து இன்னொன்று துவங்குகிறதே என்று கேவுகையில் வாசகன் தனக்கான விடையை அறியலாம். வேறொரு தளத்தில் கண்ணன் அடைந்த்திருக்கும் திரிசங்கு நிலையே விழுமியங்கள் குறித்த நமது பார்வையை விஸ்தரிக்க வல்லது. முதலாளி தொழிலாளி இடையே நடக்கும் பேரத்தின் நடுப்புள்ளியைப் போல் தனி ஒருவன் கைக்கொள்ள விழுமிய வேள்வித்தீ சங்கல்பங்களில்  ஏதெனும் உண்டோ ?


சிறிய வழு அல்லது சந்தர்ப்ப சறுக்கல் என்ற உத்தியை தவிர்த்ததன் மூலமும் மேலதிகமாக நம் விழுமியங்களை சோதிக்க இயங்கிக் கொண்டிருக்கும் ஏதோ ஒரு விசை குறித்த அவதானிப்பாகவே இந்த தேர்வைப் புரிந்து கொள்ள முடிகிறது


இவை தவிர நெசவாளர் குடும்பங்களின் பொருளாதார சூழல், குடும்ப வழக்கங்கள் குறித்தும் , 1970 களின் அரசியல் கட்சிகள் குறித்த நுண்பகடிகளும் , நடுத்தர குடும்ப  நிகழ்வுகளின் மென் தருணங்கள் என விரிகிறது நாவல். 


புறமும் அகமும் சரிந்துக் கொண்டே முழுகிக்கொண்டே சென்றாலும் எங்கிருந்தோ முளைக்கும் சமாதானமும் வைராக்கியமும்,  மனிதனால் தாங்க முடியாத ஒன்று என்கிற விஷயம் இல்லவே இல்லை, விதியின் அத்தனை கேள்விகளுக்கும் பதிலாக தன்னையே அளிக்கும் மனிதனை தீண்டிப் பார்க்கும் வேள்வித்தீ.

Sunday, June 13, 2021

கங்காபுரம் - அ வெண்ணிலா

ராஜேந்திர சோழனின் அகமும் புறமும் பற்றி காலப்பயணமாகவும் நிகழ்வுகளின் தொகுப்பாகவும், சோழ சாம்ராஜ்யத்தின் வெற்றி முரசாகவும்  அமைந்து வந்திருக்கும் நூல் கங்காபுரம்


பொன்னியின் செல்வனும் உடையாரும் வாசித்திராத எனக்கு நிறைவான வாசிப்பாகவே அமைந்தது கங்காபுரம், மதுராந்தகன் என்று அழைக்கப்படும் ராஜேந்திரன் தனது தந்தை ராஜராஜனின் போர் வெற்றிகளுக்கு முக்கியமான காரணமாக இருந்தவன், அவனது காலகட்டத்தின் சோழ சாம்ராஜயத்தின் வெற்றிகள், போர் முறைகள், ஆட்சி நிர்வாக அணுகுமுறைகள், கோவில் நிர்வாக அணுகுமுறை, ராஜேந்திரனின் தனிப்பட்ட மனநிலை , அவன் ஆளுமை குறித்த குறிப்புகள் என விரிகிறது கங்காபுரம். 


ராஜராஜன் காலத்தில் சோழ சாம்ராஜ்யம் அடைந்த புகழ்களின் வெற்றிகளின் உச்சம் , வீழ்ச்சி குறித்த தவிர்க்க இயலாத அச்ச உணர்வை நிழலாக பிடித்து வாசகன் நாவலை வாசிக்க துவங்குகிறான். இந்த நிழலிலேயே  துர்சமிக்ஞைகள் தொடர சோழ சாம்ராஜயத்தின் வெற்றி முரசு தொடர்ந்தபடி இருக்கிறது, நாவலின் இறுதியை அடைகையில் அரசன்-இறைவன்  என்கிற இருமை அழியும் தருணமதில் , ராஜேந்திரன் - சோழப்பேரரசன் என்கிற வேற்றுமையை உணர்ந்த ராஜேந்திரன் என்கிற ஆளுமையை நாம் அறிகிறோம், 


ஒரு மார்க்க்சிய முற்போக்கு பிடிப்புகுரிய விவரிப்புகள் , வரலாற்று ஆசிரியரின் கவனம் பெற்ற உப வராலற்று நிகழ்வு தொகுப்புகள் என புனைவு தாண்டிய எல்லைகளை தொட்டாலும் அதையும் தாண்டி நாவலை அர்த்தமுள்ள வாசிப்பாக்குவது ராஜேந்திரனின் ஆளுமை குறித்த ஆசிரியரின் பார்வையே, மத்தவிலாசம் ஹாஸ்ய இணைப்பு அபாரம் ,ஆதித்தியன் தில்லையழகி கதை மனதை தொடுவதாக அமைந்தது. ஒரு கலைஞனின் பார்வையில் சோழ சாம்ராஜ்யத்தின் இரு மாபெரும் அரசர்கள் அவர்களின் தனிப்பட்ட நெறி காரணமாக  விளக்காகவும் அகலாகவும் அமைந்து நூற்றாண்டுகள் தாண்டியும் மனதில் நீங்காத ஒளியை ஏற்படுத்துகின்றனர்.