சுபலா கதிர்வேல், பிரகாஷ் ராஜகோபாலன் தேர்வும் தொகுப்பும் செய்த பாரதியார் கதைகள்
சால்ட் பதிப்பகம் வெளியீடு
யாதும் ஊரே யாவரும் கேளீர்
சுபலா கதிர்வேல், பிரகாஷ் ராஜகோபாலன் தேர்வும் தொகுப்பும் செய்த பாரதியார் கதைகள்
சால்ட் பதிப்பகம் வெளியீடு
முற்றிலும் கைவிடப்பட்ட துயர நிலை குறித்தான சித்திரம் புலப்படும் இடங்களில் நாவல் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியது. குறிப்பாக ராசபாண்டியும் அவனது தாயும் அடுத்து என்ன செய்வது என்று அறியாது துணை எதுவும் இல்லாது கனத்த மௌனத்தோடு ஒருவரை ஒருவர் பார்த்தபடி அரை இருளில் அமர்ந்திருக்கும் சித்திரம். நாவலில் அநேக இடங்களில் ராசபாண்டி உணரும் துயரக்குழி சித்திரத்தின் உச்சம் இந்தப் பகுதி.
கைவிடப்பட்ட நிலையில் உள்ள ராசபாண்டி தனது இந்த நிலைக்கு காரணமான தந்தையை வெறுக்கத் தொடங்குகிறான் . தந்தை குறித்த இனிமையான நினைவுகள் குறித்து குழம்புகிறான் - அதே நேரத்தில் தன் தாயின் பாட்டன் ஆச்சி மற்றும் மீனாட்சியின் சொற்கள் வழி தனக்கான தனி வழியை அமைக்க முயல்கிறான். இரண்டுக்கும் இடையேயான பெரும் போராட்டமே நாவலின் அடிநாதமாக அமைந்திருக்கிறது.வெறுப்பின் முழு தகிப்பையும் மனதினுள் தாங்கமுடியாது, செயல் வடிவிலும் வெறுப்பை வெளிப்படுத்த முடியாது அல்லல் படுகிறான் ராசபாண்டி . நட்சத்திரத்தில் பிரியமானவர்களை காண முடிந்த ராசபாண்டிக்கு நேரில் காணும் தந்தை மீதான தனது வெறுப்பு குறித்து மிகுந்த சஞ்சலம் ஏற்படுகிறது - ஏதோ ஒரு செயலை எதிர்பார்த்து அவன் மனம் முன்னும் பின்னும் விளையாடியபடியே இருக்கிறது.
விளையாட்டிற்கு சுவாரஸ்யம் சேர்க்கும் வண்ணம் நாவலில் ராசபாண்டிக்கும் காட்டின் தன்னிச்சையான நிகழ்வுகளுக்குமான முடிச்சு நன்றாக அமைந்து வந்திருக்கிறது. குறிப்பாக மிருகங்கள் வரும் இடங்கள் நிரம்ப குறிப்புடன் அமைந்திருக்கிறது. ராசபாண்டியின் மனம் நிகழ்வுகளில் முழுகுகையில் மரங்களில் தாவும் குரங்குகள் பற்றிய வரி, சின்னமாயன் மாடுகளுடன் மணிக்கணக்கில் பேசுவது, துயர்க்குழியில் இருக்கும் ராசபாண்டி வாழ்க்கையை ஒரு மதம் பிடித்த யானையுடன் ஒப்பிடுவது, நிர்கதியின் உச்சத்தில் வன மிருகம் ஒன்றை நேருக்கு நேர் அருகாமையில் காணும் இடம், டார்ச் வெளிச்சத்தில் அசையாத ராஜநாகம் குறித்த குறிப்பு, ஒரு கட்டத்தில் ராசபாண்டி தன்னை துயரம் என்னும் தவளைகளின் மீது ஏறி செல்லும் மலைபாம்பாக எண்ணிக் கொள்ளும் இடம், தோல் உதிர்ந்த குரங்கை நேருக்கு நேர் ராசபாண்டி காணும் இடம், யாருக்காகவோ காத்திருந்து மீண்டும் பழத்தை கொத்த தொடங்கும் பறவை என நாவல் நெடுக லயித்து வாசிக்க முடிகிறது
தந்தை மீதான கோபம் தமிழ் நவீன நாவல்களுக்கு புதிதல்ல - துரோகம் தொடர்ந்து வரும் பழி மற்றும் சாபம் தொடர்பான கதைகளும் புதிதல்ல, இந்நாவலின் ஆதார உணர்வு நமக்கு மிகவும் பழக்கமானதே. நம் அர்த்தமற்ற மற்றும் அர்த்தம் மிகுந்த கோபத்தையும் வெறுப்பையும் ராசபாண்டியின் வரிகளில் கண்டுகொள்ளலாம். சுயத்தையே அழிக்க வல்ல வெறுப்பை ராசபாண்டி கண்டு கொள்வதும் அவனை ஆற்றுப்படுத்திய அனைத்து சொந்தங்களின் வார்த்தைகளில் நாம் நமக்கான ஆறுதலை நாம் தேடிக்கொள்ள முடியும். யூமா வாசுகியின் "ரத்த உறவு ", தேவி பாரதியின் " நிழலின் தனிமை" இவ்விரண்டு நாவல்களும் இவ்வகைமையில் வாசிக்க தகுந்த செறிவான நாவல்கள்.
வெறுப்பு கோபம் சார்ந்த எண்ண ஓட்டங்கள் விசித்திரமானவை. அவற்றின் ஊற்றுக்கண் வெறுப்பு தொடங்கிய காரண காரியத்தின் பெயரிலா அல்லது நம் துயரம் மேலும் குழிவிடாமல் இருக்க வெறுப்பு நமக்கான கவசமா என்ற கேள்வி ராசபாண்டி வழியாக நம்மிடம் எழுப்பப்படுகிறது. ஆதார வெறுப்பு எங்கோ சென்று ஒளிந்து கொள்ள நம் மிதமிஞ்சிய கோபமும் வெறுப்பும் தொடர்ந்த எண்ணங்களும் எதை நோக்கி என்று நம் உணர்வது அத்தனை எளிதான ஒன்றல்ல. எண்ணங்களின் அலைக்கழிப்பிற்கு பிறகு நமக்கு அமைவதெல்லாம் செயலுக்கான ஒரு அழைப்பே. விலகி ஓடி இவற்றில் இருந்து நாம் வெளியேற முடியாது. நாவலின் இறுதிப் பகுதி அமைந்திருக்கும் விதத்தை நான் இப்படியே புரிந்து கொள்கிறேன். அனைத்து விதமான முடிவுகளும் சாத்தியமாகும் படியான இறுதிப்பகுதி , சிறிய பதைப்புடன் தான் வாசித்து முடிக்க முடிந்தது. இப்போதைக்கான, நேருக்கு நேர் நம் மிருகங்களை காண, ஒரு ஆற்றுப்படுத்தல், இயற்கை வழி, ராசபாண்டிக்கு வாய்த்திருக்கிறது.
நம் ஆணவம் நொறுங்க
நம் தொடர்ச்சி அறிய
நம் எல்லைகள் புரிய
பூரண ஸ்திதியின் செழுமை உணர
நம் ஆன்மீகம் உயிர்ப்புடன் இருக்க
நம் விழிப்பு குறித்த போதம் தொடர
நம் இருப்பின் சாரம் விளங்க
வாசிக்க வேண்டிய புத்தகம்.
சிவப்பிரகாஷ் அவர்கள் எழுதிய "குரு ", 'பத்து வாயில்கள்' முன்பே வாசித்தது. "அன்றாட யோகி " வாசித்ததும் தோன்றியது..
குரு - பத்து வாயில்கள், திட்டவட்டமான மிகவும் செறிவான உள்ளடக்கம் கொண்ட, ஒரு ஆன்மீக கையேடு போன்ற புத்தகம்.
அன்றாட யோகி - சிவப்பிரகாஷ் அவர்களுடைய தனிப்பட்ட ஆன்மீக அனுபவங்களின் நேரடியான அப்பட்டமான பதிவு. ஆன்மீக சாதனா குறித்தும், அசாதாரண அனுபவங்கள் குறித்தும், குரு சொல்லும் வழியில் செல்வது குறித்தும், குருவுடனான உறவு குறித்த முக்கியத்துவம் குறித்தும், குரு மற்றும் மகான்களின் அற்புத லீலைகள் குறித்தும் கடவுளுடன் உரையாடும் தெய்வ மனிதர்கள் குறித்தும் அமைந்துள்ள புத்தகம்.
குரு, பத்து வாயில்கள் - அனைவருக்குமான தியரி,
அன்றாட யோகி - சிவப்பிரகாஷ் அவர்களின் பிராக்டிகல்.
சிவஞானம், நாலாவது சார் இரு நெடுங்கதைகள் உள்ள புத்தகம்.
சிவஞானம்
பிறப்பு எதை முடிவு செய்யும், வளர்ப்பு எதை முடிவு செய்யும் என்பதை யார் அறிவார்?
நம் தவிப்பு திரிசங்கு,இடைக்கழி.
இரு வெளிச்ச புள்ளிகளுடன் வரும், நாம் செல்ல வேண்டியது என நினைத்து ஏறிய, எதிர் புறம் செல்லும் பேருந்து.
நாலாவது சார்
சம்பந்தம் அற்றது என்று தோன்றும் பல்வேறு நிகழ்வுகளை ஒன்றோடு ஒன்று சம்பந்தபடுத்தி கொள்வது போல் அமைந்த கதை. சாது மிரண்டால், காசி விஸ்வேஸ்வர் சிறிய கிராமத்திற்கே வந்து விடுவார் என்றும் புரிந்து கொள்ளலாம், நுண்மையமான பல அடுக்குகள் கொண்ட கதை, வாசிப்பவர் அவருக்கு தோன்றும் வகையில் நிகழ்வுகளின் ஆரம் கோர்க்க கதை பல தளங்களில் பொருள்படும்.
சில்க் ஸ்மிதா உட்கார ஒரு கல் கதை தொகுப்பு வாசித்தேன்.
முகநூலில் ஏற்கனவே கிட்ட தட்ட அனைத்து கதைகளையும் வாசித்திருந்து எனக்கே வியப்பாக இருந்தது. அந்த அளவிற்கு போகன் சங்கர் பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன் என்று புரிந்தது. செயலி இல்லமால் facebook ID இல்லாமல் தங்கள் facebook பக்கத்தை Chrome browser வழி மட்டுமே பின் தொடர்ந்து அனைத்து கதைகளையும் வாசித்து இருக்கிறேன்.
மீள் வாசிப்பில் பின் வரும் கதைகள் மிகவும் பிடித்திருந்தன.
வெளியேற்றம்
கடவுளின் இல்லம்
புனிதமும் சாதாரணமும்
இம்மானுவேல் காண்டின் ஸ்பூன்
மோகக்கிணறு
மறைந்த புத்தகம்
காலப்பறவை
கதவுகள்
சமிக்கை
புண்ணியகரை
வரி
புறக்கணிப்பு, கோபம், ஆன்மீகம், மன உடைவு, ஆசை, குற்ற உணர்ச்சி, ஞாபகம், இயலாமை, சந்தேகம், நிவர்த்தி, முழுமை - இக்கதைகளை நினைவு கூற வசதியாக இந்த சொற்களை வைத்து கொள்கிறேன். குறுங்கதைகள் கொடுக்கும் முதல் அதிர்ச்சிகள் தாண்டி இந்த வடிவத்தில் வாசகன் நினைவு கூற தக்க முழுமை பார்வை மேல் உள்ள கதைகளில் அமைந்துள்ளதாக நினைக்கிறேன.
ஏனைய கதைகள் சுவாரஸ்ய சம்பவங்களாகவும் திடமான கருத்தாகவும் அமைந்திருக்கின்றன.
பாருகுட்டியின், தீவிர சாமியார்களின் கதைகள் இந்த தொகுப்பில் குறைவு அல்லது அநேகம் இல்லை. அறிவியல் புனைவுகளும் அநேகமாக இல்லை, இளவயதினர் இக்கதைகளில் பெரும்பாலும் வரவில்லை.
மேற்படி குறிப்பிட்ட கதைகளில் போகன் கதைகளின் உண்மையான ஆன்மீகம் வெளிப்படுகிறது. மனக்குழப்பத்திலும், ஆற்றாமையிலும், குற்ற உணர்ச்சியாலும், இயலாமையாலும், ஏக்கத்தாலும், அலைக்கழிக்கப்படுபவன் மேல் ஆசிரியர் செலுத்தும் வெளிச்சம் இந்தக் கதைகள்.
எவரும் தன்னைக் கண்டு கொள்ள, தன் கருணையின் எல்லையை விரிக்க சிறு வாய்ப்பு இந்தக் கதைகள்.
மயல் சுவாரஸ்யமான சரளமான வாசிப்பை அளிக்கும் நாவல்.
மிகவும் ரசிக்க தக்க வேறு வேறு விஷயங்களின் எதேச்சையான தொகுப்பாக இந்த நாவல் அமைந்து விட்டது.
நல்ல உணவு, குறிப்பாக தஞ்சை சைவ உணவு குறித்தான விவரணைகள் ரசிக்கதக்கதாக அமைந்திருக்கிறது. ருசி ஏக்கம், சமையல் பொருட்களின் தேர்வுகள், தயாரிப்பு இவை குறித்தே பெருமளவு விவரணை அமைந்திருக்கிறது. பசி குறித்தும் சுவையற்றதுமான பதார்த்தங்கள் குறித்தும் விவரணை அநேகம் இல்லை.
நாவலின் நாயகன் கிருஷ்ணாவிற்கும் கதையில் வரும் பெண்களுக்குமான உறவுகளின் விவரணை பெரும்பாலும் புறவயமாகவே அமைந்திருக்கிறது.விவரணை மிக சிறப்பாக அமைந்திருந்தாலும் ஆண் பெண் இரு மருங்கிலும் உள்ள ஏக்கத்தையும் ஆசையையும் விட அவர்கள் சந்தித்து அளாவி மகிழ்ந்து குலவும் இடங்களில் புற விவரணைகளே அதிகம் இடம் பெற்று இருக்கின்றன. ஷ்யாமாவால் , நீலாவால் அம்மாவால் பாட்டியால் கிருஷ்ணாவிற்கு என்ன கிடைத்தது என்பதான கவனம் அதிகமாகி - அப்பெண் பாத்திரங்களின் உருவே கிருஷ்ணாவால் வடிக்கப்பட்ட ஒன்றாக அமைந்து விட்டது.
நாயகன் நாவல் தொடங்கும் பொழுதே, சமூகத்தில் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்ற மனிதன், காரியங்களை முடிக்கும் சமர்த்தன், நாவல் முடிகையிலும் இடையின் சிறு இடறலை தவிர இந்த நிலையில் எந்த மாற்றமும் இல்லை - நாயகன் கிருஷ்ணா நமக்கு விவரிக்கும் புதிர் பாதையின் எதேச்சையும், கர்மாவும், பெரியவர்களின் ஆசியும்,பூடகமும், அவன் சந்திக்கும் சவால்களும் ஒரு சாகசத்தை ஒத்தே இருக்கின்றதே ஒழிய ஒரு மெய்மை தேடலாக அமையவில்லை - ஒரு மெய் தேடலுக்கான வலுவான சம்பவங்களும் கதையில் அமையவில்லை.மெய்மை தேடலுக்கான கலை சொற்கள் சில இடங்களில் அமையப்பெற்று இருந்தாலும் அவை பெரும்பாலும் ஒரு தொடர்ச்சியை அளிக்க வில்லை.
நாவலின் சாகசப் பகுதிகளின் புற விவரணைகள் சில இடங்களில் குறிப்பிடும்படியாக இருந்தாலும் அவற்றின் குறியீட்டு தன்மையும் நாயகனின் தேடலுக்கு வலு சேர்க்கும் ஒன்றாக இல்லை. நாயகன் புறத்தே அல்லது அகத்தே ஒரு பொருளை தேடி செல்கையில் நடுவில் வரும் தடைகள் தேடப்படும் பொருளை / விஷயத்தை சுற்றியே அமைந்திருந்தால் நாவலின் வடிவம் கட்டுக்குள் இருந்திருக்கும்.
நாவலின் நாயகன் ஒரு வெற்றியாளன் - உறவு சிக்கல் இல்லாதவன் - பணக்காரன் - குடும்பத்தின் அனுசரணை உள்ளவன் -உணவை ரசித்து உண்பவன் - தன் மனம் இயங்கும் விதம் பற்றிய சித்தம் தெளிந்தவன் - முன்னோர் ஆசி பெற்றவன் - உலகத்து உயிர் அனைத்தும் அவனுக்கு துணை - இவ்வாறு எல்லா ஒருங்கே அமையப்பெற்றவன் - தனக்கு அளிக்கப்பட்ட சாகச கடமையை செவ்வனே முடித்தவன் - இத்தனை நேர்மறை அம்சங்களும் , சஞ்சலமற்ற தன்மையும் கதையின் வீச்சை பெருமளவு குறைக்கிறன.
இருப்பினும் ,நாவல் திறந்த கொள்ளும் இடங்கள் இரண்டு. ஒன்று, நாம் உண்ணும் உணவின் சுவைக்கும் நம் மெய்மைக்கும் நம் பெற்றிருக்கும் குணத்திற்கும் உள்ள சுக்ஷும உறவு பற்றிய அறிவு . இரண்டு, காமத்தை கடக்க நினைக்கையில் மனம் பெண்மையை நோக்கிய தனது எண்ணமாற்றத்தை அடைய வேண்டியதன் தெளிவு. இரு புள்ளிகளையும் சில இடங்களில் கோடிட்டு மட்டும் காட்டி நாவல் நின்று விடுகிறது.
நாவலுக்கு வெளியே - மனிதனை மிகவும் அலைகழிக்க வைக்கும் உணவு தேடலும் காமமும், எதிர்பார்த்த அளவில் மனிதனுக்கு கிடைத்து விட்டால், மெய்மை தேடல் என்ற ஒன்று அவனுக்கு தேவைப்படுமா என்ன ? மரணம் குறித்த நினைவை நல் உணவும் காமமும் விரட்டி விடுமா என்ன ? ஊழின் கரங்களை அவை வெல்லுமா என்ன?