Sunday, December 27, 2020

புது வீடு புது உலகம் - கு அழகிரி சாமி

கு அழகிரிசாமி அவர்களின் இந்த நாவல் முதலில் சுதேசிமித்ரனில் தொடராக வந்து 2018ல் தான் முதல் முறையாக நாவலாக வெளிவந்துள்ளது. மிகக் குறைந்த புற விவரிப்புகளுடன் மன ஓட்டங்களுக்கும் நிகழ்வுகளும் நிறைந்த பெரிய நாவல். குடும்பத்தின் வறிய பொருளாதார சூழல் அழுத்தம் காரணமாக பணம் சம்பாதிக்க சரி மற்றும் தவறான வழிகளுக்கு இடையேயான போராட்டம், தனிப்பட்ட ஒருவனின் லட்சியம் குடும்பத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள், லட்சியவாதத்தின் நடைமுறை செல்லுபடி எனும் தளங்களில் நாவலை பொருத்திப் பார்த்து வாசிக்க வாசகனுக்கு வாய்ப்பிருக்கிறது, நாவலின் இலக்கிய உட்பிரதி குறித்து நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய இம்மூன்றுமே. ஜெயகாந்தன் அவர்களின் அக்னிபிரவேசம் அ சிலநேரங்களில் சில மனிதர்கள் கதையை இணைத்து வாசிக்கத் தகுந்த படைப்பு புது வீடு புது உலகம் - ஜெகே அவர்களின் ஆர்பாட்டமான மொழியில் அமைந்த சிலநேரங்களில் சில மனிதர்கள் நாவலின் முன் சன்னமான குரலில் ஆனால் அதே தளத்தில் அமைந்துள்ளது புது வீடு புது உலகம் நாவல், தனிப்பட்ட ஒருவனின் சுதந்திரத்தை மட்டும் மையப்படுத்தாது சரி தவறு என்ற மனப்போராட்டத்தின் வீச்சையும் , லட்சியவாதம் மீண்டும் மீண்டும் வந்து சீண்டும சலிப்பான இடங்களையும் தொட்டு செல்கிறது.

பாகீரதியின் மதியம் - பா வெங்கடேசன்

https://solvanam.com/2020/09/12/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0/ பாகீரதியின் மதியம் வாசித்து முடிக்கையில் , அவ்வளவு தானா முடிந்து விட்டதா என்று நம்ப முடியாமல் திரும்ப கடைசி அத்தியாயத்தின் சிலப்பக்கங்களை வாசித்தபடியே இருந்தேன் , ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்த நிகழ்வுகளின் சரத்தையும் , அந்த நிகழ்வுகளை சதா உந்தி கொண்டே இருக்கும் கனவுகளின் வலியையும், வசீகரத்தையும் மனதில் பதிய வைக்க முயன்றபடி இருந்தேன்,நாவலின் மைய சரடு என்ன ? நாவலின் முடிவு உணர்த்துவது என்ன ? நாவல் கூற விரும்பும் கருத்துக்கள் என்ன ? போன்ற டெம்ப்லேட் கேள்விகள் மனதில் எழுந்த வண்ணம் இருந்தன. நாவலின் அசாதாரணமான கேன்வாஸ் ஒரு மையத்தில் நாவலை பற்றிய ஒற்றை கருத்தை அடையவிடாது அலைக்கழித்தபடியே இருந்தது., ஒரு பிராமணனுக்கும் திராவிடர் கழகத்தை சேர்ந்தவனுக்குமானா பெரியார் குறித்த ஒரு உரையாடல் (“இறை மற்றும் இறைமை என்பதன் விண்டு சொல்ல முடியாத அனுபவத்தை ஈவெரா தெரிந்து தான் வைத்திருந்தார் ... என்று இவனும் இறையனுபவம் என்று பிதற்றப்படுவதெல்லாமுமே சூழலால் திணிக்கப்பெறும் அறிவின்பாற் பட்டது என்று அவனும் …” ),ஒரு ஓவியனின் வாழ்நாள் படைப்புகளின் சாரத்தை அறியும் முயற்சி, காதலின் உன்மத்த தனிமையை நீடிக்க விரும்பும் உயிர்களின் அவஸ்தை, பெண் விடுதலை குறித்த ஒரு அறைகூவல் , மனித சமூகமாக நாம் தேர்ந்தெடுத்த பாதையை குறித்த ஒரு விசாரம்,( “சமவெளி மனிதர்கள் தந்திரசாலிகள் ... வர்க்கங்களை ஒழிப்பதும் சாதிகளை ஒழிப்பதும் காடுகளை ஒழிக்கும் குற்றவுணர்விலிருந்து தங்களைத் தப்புவித்துக் கொள்ளும் பிரயத்தனமேயன்றி வேறொன்று என்பதாக நான் நினைக்கவில்லை “) அரசியல் கோட்பாடுகள் சூழ்நிலைகள் தனிமனித விருப்பு வெறுப்புகளுடன் இணைந்து உருவாக்கும் விளைவுகள், கலைவெற்றி Vs களசெயல்பாடு என்கிற இரண்டும் விளிம்புநிலை மக்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த ஒரு பார்வை (“நம்பிக்கை களப்பணியென்றால் அவநம்பிக்கை கலையின் ஆதாரம் ) (உலகத்தின் கண்களுக்குக் தன் மக்களின் எந்த முகத்தைக் காண்பிக்க வேண்டுமென்பதை தேர்ந்து கொள்ளும் சுதந்திரமும் அவனுக்கு தேவைப்படுகிறது. உண்மையான கலைஞன் தன் ஜனங்களை ஒரு போதும் கைவிடுவதில்லை என்பதை ஜனங்கள் நம்ப வேண்டும். அழகை மட்டும் தேர்ந்து கொண்டு அவலத்தை அவன் மறைக்கிறானென்பதல்ல அவனுடைய அழகியலின் அடிப்படை, மாறாக எந்த அவலத்தினுள்ளிலிருந்தும் மரணத்தின் விளிம்பிலிருந்தும் ஒரு மின் வெட்டைப் போல மின்னி தெறிக்கும் அழகை இனங்கண்டுகொண்டுவிடும் நிதானம் தான் ஒரு கலைஞனுக்குரிய தகுதியாக அவனுக்குக் கடவுளால் அருளப் பட்டிருக்கிறது என்பது தான் அதன் அர்த்தம்”) கிளைக்கதைகள் கூறும் அற்புதமான கதையாடல்கள், நினைவுகள், என்று பல தரப்பட்ட கோணங்களில் இந்த புதினத்தை நாம் அணுக முடியும். நாவலின் நடை தாண்டவராயன் கதையை போலவே நீண்ட நீண்ட வாக்கியங்கள், முதலில் கொஞ்சம் தடுமாறி ,இழுத்து பற்றுகையில், கடற்கரை குதிரை சவாரி போன்று மிதமான வேகத்தில் சென்றபடி துவங்கிய இடத்திற்கே திரும்ப வந்து, மீண்டும் வெவ்வேறு பாதைகள் பற்றி முற்றிலும் புதியதோர் கனவினை கண்டு நீண்டு கொண்டே சென்ற ஒரு முடிவில்லாத பயணம். விவாதம் -நாவலின் நெடுக வரும் சரடு விவாதத்தன்மை.பல்வேறு இடங்களில் இரு கதாப்பாத்திரங்கள் தங்களுக்குள் உணர்ச்சிகரமான ஆழ்ந்த விவாதங்களில் ஈடுபடத் துவங்குகின்றனர் , நாவலின் விஸ்தாரமான கதைக்களத்தை இந்த உரையாடல்கள் வழி மேலும் நெருங்க முடிகிறது வாசுதேவன் - உறங்காப்புலி பெரியாரை குறித்து விவாதித்தல் , வாசுதேவன் - ஹாலாஸ்யம் பெரியார் குறித்த விவாதம் (“சாதி - உணவு ,உடை, வாழ்முறை ,பாஷை ,சிந்தனை அனைத்திலும் ஒரு தனித்துவத்தை கொடுத்திருக்கிறது , சாதியை இழக்கிறேனென்று ஏன் இத்தனையையும் இழந்து சரித்திரமற்றவனாக வேண்டும் “), வாசுதேவன் - பாகீரதி "பெண்" குறித்து பேசுமிடங்கள், (“திருட்டு எலியை பிடிக்கும் விளையாட்டாகத் தானே எப்போதுமே அமைவது வழக்கம் .... ஆனால் .. அது நேருக்கு நேராக ஒரு புலியை சந்திக்கும் சம்பவமாக இருக்கிறது , அது தைரியமாக அவன் முன் நின்று தன் இருப்பை அறிவிக்கிறது அதற்கான நியாயத்தை சொல்கிறது”)உறங்காப்புலி - சவிதா தேவி பகிர்ந்து கொள்ளும் காதல் நினைவுகள், உறங்காப்புலி - இங்களய்யா உரையாடல்கள் , விபின் பஸ்வான் உறங்காப்புலியிடம் சவிதா தேவி குறித்து கூறுவது , வாசுதேவன் ஓவியர் ஆதிமூலம் சந்திப்பு(“சுருக்கங்களினால் பிடிவாதத்தையும் நிழலினால் தப்பித்தலையும் சட்டையற்ற உடலினால் நினைவுகளோடான நெருக்கத்தையும் கோடுகளினால் மனித நேயத்தையும் அந்த மனித உருவம் வெளிப்படுத்திக் கொண்டிருப்பதாகக் கூறி.”.)என பல குறிப்பிடும்படியான விவாதங்கள் நாவலை அதன் கட்டற்ற கதைகளின் வண்ணங்களை ஒருங்கிணைத்து புரிந்து கொள்ள வாசகனுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது, இல்லையென்றால் அந்த கட்டற்ற கதைகளின் பாதைகளில் அவன் தொலைந்து விடக்கூடும். தருணங்கள்- இன்னவென்று குறிப்பிட்டு சொல்ல முடியாத உணர்வுகள் மற்றும் , பகுத்தறிவு இன்னதென்று வரையறுக்க முடியாத அபூர்வ உணர்வுகள் குறித்து இந்த நாவல் எண்ணிப் பார்க்கிறது, குறிப்பாக காதல். பகுத்தறிவு காதலை வரையறுக்க முயல்கையில் தோல்வியுறுவதாகவே ஆசிரியர் கூறுகிறார்,( “அது வரை அவரால் ஆபாசம் என்று விமர்சிக்கப் பட்டு கொண்டிருந்த புராணங்களிலும் சரித்திரங்களிலும் நிகழ்ந்த எந்த ஒரு மாபெரும் நிகழ்வையும் போலவே திமுக என்கிற ஒரு பெரும் அரசியல் நிகழ்வுக்குக் காரணமாயிருந்த ஒரு மகத்தான காதலின் புதிர்….”) மேலும் அந்த காதல் கிளர்த்தும் பகுத்தறிவால், பைத்தியக்காரத்தனம் என்று வரையறுக்கப்படும் அனைத்து செயல்களையும் அலைச்சல்களையும் மதிப்பான ஒரு இடத்தில வைக்கிறார், காரண காரியங்கள் தாண்டியும் சில விஷயங்கள் ஒருவருக்கு உயிராக இருக்க முடியும் என்றும் , அவ்விஷயங்களுக்காக எத்தகைய எல்லை வரையும் எந்த எதிர்பார்ப்புமின்றி மனிதன் முயல்வான் என்பதையும் கதையின் போக்கில் நாம் உணர்கிறோம்.அந்த தருணங்கள் குறித்து ஒரு வித பயத்துடனும் அனுமானங்களுடனும் கதாபாத்திரங்கள் நினைவு கூறுகின்றன , "இப்படி தான் நினைத்தேன்", என்னை மீறிய ஒரு உணர்வு என்றும் என்றோ நடந்த நிகழ்வுகளை பல வருடங்கள் தாண்டி ஒரு சிறிய தருணம் மீண்டும் கிளறுகையில் கதாபாத்திரங்கள் வார்த்தைகளில் புகலிடம் தேடுவது வியர்த்தம் என்ற முடிவுக்கு வந்து அற்புதம் என்றோ பயங்கரம் என்றோ நினைவு கூறுகின்றனர்.( “மதுபானி ஓவியங்கள் குறித்து - " பார்த்தாயா ஜெமினி .. நாம் பொத்தி பொத்தி பாதுகாத்து வைத்திருக்கும் கலை எத்தனை சாதாரணமாக சளியும் கரிப்புகையும் தீற்றிக்கொள்ளும் சுவர்களில் பெரிய பெரிய பூகம்பங்களைத் தாண்டித் தப்பித்து மூச்சு விட்டு கொண்டிருக்கின்றன பார் என்றார் பில் துரை”),.. (ஜெமினி .. ஆயிரக்கணக்கான புத்தகங்களில் ஒன்றை கூட பிரதிபலிக்காத புத்தம் புதியதான சித்திர புதையலின் முன் சற்றும் எதிர்பாராத வெட்ட வெளியில் திடீரென்று கண் கூச நின்று விட்ட திகைப்பிலிருந்து மீள முடியாதவனாயிருந்தான்”), ( “துஸ்ஸாத் ஓவியங்கள் முன் "அவன் கண் முன் குட்டி சுவர்களில் கரித்துண்டுகளால் இழுக்கப்பட்டிருந்தவை நினைவு தெரிந்த நாளிலிருந்து தன் தகப்பன் முதுகில் வாங்கிய சவுக்கடி தழும்புகளுடன் உடல் நாற நாற மாடுகளை ஒட்டி கொண்டிருந்த வயல்வெளியின் வெறுப்பூட்டும் பச்சை விளைச்சலுக்கு நடுவிலும் வீட்டினுள் இறைந்து கிடைக்கும் உடைசல் மண் கலையங்களின் விளிம்புகளில் ஊர்ந்து கொண்டிருந்த புழுக்களின் எலும்பற்ற உடல்களிலும் , சாணியை தெளித்துத் தெளித்துக் களிம்பேறிப் பிசுபிசுத்துக் கொண்டேயிருந்த மண் தரையின் பச்சை மணத்திலும் அவன் தேடிக் கொண்டேயிருந்த கோடுகளே தான் ") இருமை விளையாட்டு -விஷயங்களை புரிந்து கொள்ள நமக்கு என்றுமே இந்த இருமை கதையாடல்கள் அவசியமான ஒன்றாக இருக்கிறன , கிழக்கு - மேற்கு , பிராமண -பகுத்தறிவு , ஆண்- பெண் , ஆதிவாசி சமூகம் - வேளாள சமூகம், வேளாள சமூகம் - இயந்திர சமூகம், பகுப்பாய்வது - பூரணமாய் உணர்வது காரணம்- விதி , காந்தி – பெரியார் ("அதே வேளையில் சத்தியாகிரகம் , அஹிம்சை, கதர் என்று அந்த கிழவரின் புத்தியிலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக பிறந்து ப்ரவாகமெடுத்துக் கொண்டேயிருக்கும் கற்பனைகளின் நதியில் துரும்பைப் போல் விழுந்து கை நழுவி போய்கொண்டேயிருக்கும் புத்திரர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே கரையில் நின்று புலம்புவதை தவிர வேறெதுவும் செய்யவியலாதவர்களாயிருந்த லட்சக்கணக்கான இந்திய பெற்றோர்களை ப் போலவே ") , காமம் - காதல் , யதார்த்தம் - கனவு , சிறு தெய்வம் - பெருந்தெய்வம் , மேட்டிமை - விளிம்பு நிலை , அஹிம்சை - ஆயுதம் , இயற்கை - வளர்ச்சி; கலைஞன் - களப்பணியாளன் ,இவ்விரு எல்லைகளும் ஒரு மனிதனுக்கு தேவைக்கேற்ப பயன்படும் கதையாடல்களாக இருந்து கொண்டே இருக்கின்றன. இந்த நாவலில் கதாபாத்திரங்கள் ஒரு எல்லையை மட்டும் தங்கள் பார்வையாய் கொண்டிருக்கையில், நிகழ்வகளின் தடம் மற்றும் அவர் தம் கனவுகளின் உந்துதல் கூடிய விரைவிலேயே அவர்களை மறு எல்லையில் மறுக்க இயலாத வண்ணத்தில் நிறுத்தி, அரற்ற வைத்து அழகு பார்க்கிறது. வாசுதேவனிடத்தில் சீறும் உறங்காப்புலி பாகீரதியினிடத்தில் தோற்கிறான், புகழேந்தியிடம் சவடால் விடும் வாசுதேவன் பிறிதொரு தருணத்தில் தனித்து இருக்கையில் தனது கீழ்மை குறித்து திடுக்கிடுகிறான், ஜமீன்தாரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாத இங்கள்ளயா பிறிதொரு காலத்தில் வேறொரு ஜமீன்தாரிடத்து செய்து கொள்ளும் ஒப்பந்தம், காலாதீதமாய் இருந்து வரும் கோடுகளின் வழி பிரபஞ்சம் அறியும் ஜெமினி என்னும் கலைஞன் குறிப்பிட்ட காலத்தின் கேள்விக்கு பதிலளிக்க இயலாத மௌனம் என இரு எல்லைகளில் வாசகனும் தவிக்க விடப்படுகிறான்.( “ஜமீன்தாருடைய பேச்சே தன் மார்பில் தோட்டாவாய்ப் பாய்ந்து விட்டதை போல மயங்கி விழுந்த இங்கள்ளய்யா அதை பற்றி என்ன நினைக்கிறானென்று நம்மிடம் எதையுமே பகிர்ந்து கொள்ளவில்லையென்பதை கவனித்தாயா , என்னுடைய தூரிகைக்கு அது முக்கியம், அந்த மௌனம் என் கித்தானில் ஒரு வண்ணமாக கரைய வேண்டும்” ) கலைஞன் தன் நுண்ணுணர்வின் வழி வர இருக்கும் காலங்களை குறித்த அனுமானங்களை வைக்கிறான். ஜெமினியின் "மிதக்கும் வண்ணங்கள்" என்று அறியப்படும் அந்த கலை உச்சம் சமூகத்தின் சரிவை , கடந்து வந்த மனிதனின் பாதையின் அபாய விளைவை குறித்ததா? , பாவனைகளை சூடியபடி வெறிக்கூத்தாடிய உறங்காப்புலியின் உடம்பில் வாசுதேவன் கண்ட வண்ணக் கலவை ஒரு வேளை " மிதக்கும் வண்ணங்களோ ?", களப்பணியாளனின் வலிந்து சூடிய அந்த பாவனை என்றென்றும் உண்மையை நெருங்கவியலாத ஒரு வறட்டுத்தனத்தின் எல்லையை , குற்ற உணர்வை மட்டுமே தூண்டவல்ல ஒரு செயல்பாட்டை குறிக்கிறதோ? இங்கிருந்து நாம் உறங்காப்புலியின் கனவில் வரும் உருவக கதைக்கு செல்வோமென்றால் , ஆதி இயற்கையை அந்த மாசற்ற நாட்களை , நிலங்களை, போராபுடிமா என்னும் அந்த ஆதிக்கடவுளின் உருவத்தை இக்காலத்திலிருந்து நாம் பின்னோக்கி நமது பொந்திலிருந்து நம்மை ஒரு பூச்சியாக நாமே பாவித்து ,காண்கையில் ஏற்படும் திடுக்கிடல் ஒரு களப்பணியாளனுக்குரியதா , கலைஞனுக்குரியதா ? (“அவையனைத்தும் நிஜமான ஓரறிவு ஈரறிவு ஜந்துக்களல்ல , எப்போதாவது படையல்களோடு தாக்குருக்கு வந்து இருட்டுக்குள்ளிருக்கும் பெரியவளை சம்பிரதாயமாக உற்றுப் பார்த்து விட்டுத் திரும்பி சென்று விட எத்தனித்த மனிதர்கள் தான் அவை,..”) பத்துக்கும் மேற்பட்ட கிளைக்கதைகள் வழி மைய க் கதை செல்கிறது, தனித்து பார்க்கையில் கூடஅந்த கிளைக்கதைகளின் வீச்சு தன்னளவில் முழுமை கொண்டுள்ளது, ஜெமினியின் இளமை கால ஓவிய பயணம், ஜெமினி ஆதிமூலம் அவர்களின் ஓவியம் குறித்த ஸ்திரமான கருத்துக்களை கூறும் இடங்கள்(“ஜெமினியின் முகத்தை மட்டுமே கவனித்தபடி முன் அவர் (ஆதிமூலம் )கடைபிடித்துக் கொண்டிருந்த மௌனத்தில் , ஒரு கலைஞனுக்கு இன்றியமையாத தேவை என்று ஜெமினி கருதிய பெண் தன்மையுடைய ஸ்ருஷ்டிபூர்வமான, கர்வமில்லாமல், சட்டென எதன்மேலும் வியப்படையத் தன்னை அனுமதித்து கொள்ளும் வெகுளித்தனமும் ( அது அறியாமையல்ல) லஜ்ஜையற்ற அபத்தமான புரிதல்களால் வடிவங்களின் சாரத்தை நேரடியாக தொட்டு விடும் தன்னுணர்வற்ற இயல்பான மேதைமையும் இருந்ததாக அவருக்கு தோன்றியிருக்கிறது “) மதுரை இருப்புப்பாதை போராட்டம் குறித்த விசாரணை கதை, சுருளிநாதனின் மொழி போராட்ட கால காதல் கதை (“தனிப்பட்ட உணர்ச்சிகளின் துணையில்லாமல் ஒரு பொதுப் புரட்சியை நடத்தி விட முடியுமா முடியும் என்று இப்போது தோன்றுகிறது , காந்தி அதை செய்தாரென்றும் நான் நம்புகிறேன்”), ஐராவதம் தனது மகள் பாகீரதி மேல் கொண்டிருந்த பாசம் குறித்த கதை, சாம்புவைய்யர் - அரங்கநாதன் நம்பி உரையாடல்கள்,உறங்காப்புலி - பிரமீளா பெயர் விளையாட்டு உறங்காப்புலியின் விசாரணை நாட்கள் ஆகியவை குறிப்பிடும்படியானதாக இருந்தன. இக்கதைகளின் பின்னணியில்1934 பீகார் பூகம்ப சூழல் , சாருமஜும்தார் கால வங்காளம் , திக திமுக பிரிவு காலங்கள், எமெர்ஜென்சி காலகட்டம் என வரலாற்று நிகழ்வுகள் திரைகளாக அமையப்பெற்று பல்வேறு வரலாற்று சாத்தியங்களை நம் கண் முன்னே எழுகின்றன. கட்டற்ற கதைவெளியை, உரையாடல் மற்றும் அற்புத, பயங்கர ,உணர்ச்சிமிகு தருணங்கள் வழி, வரலாறு என்னும் பின்னணி திரை கொண்டு இணைக்க முயன்று, குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றிருக்கிறது "பாகீரதியின் மதியம்". தற்சுட்டும் ஆன்மீகமும் , இடுக்கண் களையும் கையும் , பங்கிட்டாலும் குறையாத அன்பின் விடுதலை ஊற்றும் இணைந்த ஒரு புறப்பாடு நிகழ்ந்திருக்கிறது.

Sunday, July 05, 2020

காளி

நாம் ஆற்றலின் மீது எவ்வளவு நம்பிக்கை வைக்கிறோமோ அதே அளவு தியாக உணர்வுக்கும் இடம் இருக்கிறது என்றுணர்த்திய நாவல் ,

எல்லை கடந்தால் ஆற்றல் ஆணவமாகலாம், தியாகம் எல்லை கடந்தால் தன்னிரக்கம் மற்றும் வெறுப்பை தூண்டலாம். ஆனால் நாம் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும் எல்லைகளை வகுப்பது மானிடனே, இறைவனின் சித்தத்தில் இவற்றுக்கு எல்லை இல்லை.

அளவிட முடியாத பிரபஞ்ச ஆற்றல் எல்லையில்லாத தியாக உணர்வு. சக்தி Vs சிலுவை என்னும் கருத்தாக்கங்களின் நடன மேடை பால் வான் ஹேய்ஸெ எழுதியுள்ள "காளி" என்னும் இந்தப் புதினம். கநாசு வின் நல்ல மொழிபெயர்ப்பு.

மனிதனின் பார்வையை மட்டுமே கணக்கில் கொள்வோமானால் அளவு கடந்த ஆற்றல் சில நேரங்களில் துயர விளைவுகளை ஏற்படுத்தும், அவ்விளைவுகளை கண்டு ஏற்படும் குற்றவுணர்வு, அக்குற்றத்தை சுமக்கும் சிலுவையாக மனதை மாற்றும். இது ஒரு புறம் இருக்க தன் தவறுகளை உணர்ந்த அளவில்லாத ஆற்றல்  குற்றவுணர்வை  காலத்தின் பாரத்தை சுமக்காது தன்னம்பிக்கை குறையாது  தொடர்ந்து வாழ்வை நடத்தி செல்லும்.

Monday, June 29, 2020

தனி வழி - ஆர் ஷண்முகசுந்தரம்


பழங்கனவின் உண்மை

லட்சிய உணர்வுடன் கூடிய இந்த கனவை நீங்களும் கண்டிருக்கக் கூடும் , இயற்கை கேடில்லாத சூழல் , வாஞ்சையான சுற்றம், உடல் உழைப்புடன் கூடிய ஒரு தொழில் , பெரிய கனவுகள் இடம்பெறாத சீரான, ஆதியிலிருந்து இப்படி தான் வாழ்ந்து வருகிறோம் என்ற எண்ணத் தொடர்ச்சியில் மாறாத காலத்தில் இயற்கையுடன் கலந்து இருக்கும் ஒரு கனவு வாழ்வு , கதையின் நாயகன் நாச்சப்பன் கிட்டத்தட்ட இந்த கனவின் அருகில் வாழ்ந்து வருபவன். அந்த கனவு வாழ்வின் அசலில் ஜாதி உண்டு சுரண்டல் உண்டு, அந்த கனவின் சுவடை அழிக்க வல்ல எல்லாம் உண்டு என்றாலும் அந்த கனவிலும் ஒரு நியாயம் உண்டு, நவீனத்தின் ,இயந்திரத்தின் வேகம் அறிய வைக்கும் காலக் கண்ணாடியாகவும் அந்த கனவு தொடர்ந்து கொண்டே இருக்கிறது, நவீன உலகத்தின் பதட்டத்தில் இருந்து விடுபட ஆசையாக அந்தக் கண்ணாடியை எடுத்து நாம் கண்டு அக்கனவினை மீட்டி மகிழலாம்.இந்த தொடர்ச்சியான கனவு வாழ்வில் நவீனமும், இயந்திரமும், வாங்கிக் குவிக்கும் பண்பாடும்,குறுக்கிடுகையில் ஏற்படும் மாற்றங்களை குறித்து,இயல்பான தொனியில் எந்த வித மட்டையடி கருத்துக்களுமின்றி, நாம் அறிந்து கொள்ள இந்நாவலை வாசிக்கலாம்.


தீர்க்கதரிசனம்

இது யதார்த்த பாணி நாவல். நாவல் நடக்கும் காலத்திற்கும் இப்போதைய காலகட்டத்திற்கும் இடையே எழுபது ஆண்டுகள் இடைவெளி. நாவலின் இறுதியில் கதை மாந்தர் எடுக்கும் முடிவுகளாக ஆசிரியர் அமைத்து இருக்கும் விஷயங்கள் தீர்கதரிசனமாக அமைந்து விட்டது , அவ்விஷயங்கள் கொங்கு வட்டாரத்தின் தொழில் முனைப்பிற்கு சான்றாக அமைந்திருக்கிறது. அதே நேரத்தில் அம்முனைப்பின் வெறியின் நிழலில் உள்ள இன்றைய  சூழலியல் யதார்த்தம் முகத்தில் அறைகிறது.

நேரம் குறித்த பிரக்ஞை

மெதுவாக நகர்ந்து செல்லும் காலத்திற்கு கொடுக்கப்பட்ட சாட்டையடி மணிக்கூண்டுகள் எனக் கூறலாம், நொடிக்கு நொடி மக்கள் வாழ்வின் நேரம் குறித்த பிரக்ஞை வளர்வதற்கு நவீனம் தான் காரணமாக இருந்திருக்கிறது, நேரமும் அது குறித்த பதட்டமும் நவீனத்தின் கூடப் பிறந்த குழந்தையாகவே இருக்கிறது, இந்த நேரம் குறித்த பிரக்ஞை இந்த நாவலில் மில் சங்கின் அலறல் என்ற வகையில் பதிவாகி இருக்கிறது, சங்கொலியை தொடர்ந்து சாரை சாரையாக மக்கள் வெளிவரும் அல்லது மில்லுக்கு உள்ளே செல்லும் சித்திரம் மாடர்ன் டைம்ஸ் படத்தில் கண்ட சித்திரம், அப்படம் குறித்து ஒரு திரையிடல் போது ஒருவர் கேட்டார், "படம் வந்து நூறாண்டுகள் ஆகிவிட்டது , அப்போது இருந்ததை விட இப்போது இயந்திர மயம் அதிகமாகி விட்டதே என்று ? "

முதலாளித்துவத்தின் கேள்விகள்

உடல் உழைப்பையும் முதலையும் ஒரு கணித சமன்படாக கருத துவங்கியத்தில் முதலாளிக்கு ம் தொழிலாளிக்கும் எதிர்பாராத சவால்கள் ஏற்பட்டு விட்டன , தொழிலாளியும் இயந்திரமும் ஒன்றாகியதில் ஒருவருக்கொருவர் முடிவுறாத யுத்தம் தொடங்கி நடைபெற்று வருகிறது, முதலாளியின் தன்முனைப்பும் தொழில் ஆர்வமும் வெறும் பணத்தாசையாய் சுருக்கும் உரையாடல் தொழிற்சங்கங்களின் நங்கூரமென ஆகிவிட்டது, மில்லின் அலகாக சேரும் தொழிலாளிக்கு எதிர்வினை ஆற்றும் வாய்ப்பாக  அமையும் வாய்ப்புகள் குறித்து சற்று அறியலாம், ஒன்று இடையறாத அந்த கணக்கு குறித்து முதலாளிகளுடன் பேரம் பேசும் தொழிற்சங்க பிரதிநிதி, இரண்டு அத்தொழிலை பயின்று தானே ஒரு முதலாளி ஆவது, இவ்விரு வாய்ப்புகளின் வார்ப்பாக கருபண்ணனும் கிட்டப்பனும் வருகிறார்கள்.

வரிசை

கநாசு இட்ட நவீன இலக்கிய வரிசையில் ஆர் சண்முகசுந்தரம் அவர்களின் பெயர் இருந்தது, இன்று நவீன இலக்கியம் குறித்து விமர்சகர் எவரும் வரிசை இடுகையில் சண்முகசுந்தரத்தின் பெயர் விடுபடுவதற்கு வாய்ப்பிருக்கிறது,  எழுத்தாளர் எஸ் செந்தில்குமார் கூறி வரும் " பொதுக் குரல் சாதியத்திலிருந்து வராது" என்னும் வரியை நினைவுக்கு கொண்டு வருகிறேன், எளிய புற காட்சிகளோடு   சாதி தவிர்த்து சமூகத்தின் குறுக்கு வெட்டு தோற்றத்தை விவரிக்கும் படைப்புகளை இக்காலத்தில் எவரும் விரும்புவதில்லை, மனம் உறவு சிக்கல் குறித்த தீவிரமான படைப்புகள் , சாதி வட்டார படைப்புகள், வரலாற்று படைப்புகள் முதலியவையே வாசகன் மத்தியில் அதிக கவனம் பெறுகின்றன. சிக்கல் இல்லாத ஆனால் சாதாரண வாழ்வின் கணங்கள் அவதனிப்புகள்  தற்கால இலக்கியத்தில் மிகவும் அரிதாகவே இடம் பெறுகின்றன, "தனி வழி"  அப்படிபட்ட  பொதுப்படைப்பாக அமைந்துள்ளது.


Friday, June 26, 2020

காற்றோவியம் - ரா கிரிதரன்

அன்புள்ள கிரிதரன் அவர்களுக்கு,

காற்றோவியம் புத்தகம் வாசித்தேன், தங்கள் பரந்துப்பட்ட இசை அனுபவம் மிகவும் சிறப்பு , அடிப்படைகள் முதல் சாதனைகள் வரை உங்களுக்கு விஷயம் புரிந்திருக்கிறது, சம கால ஆளுமைகள் குறித்து நீங்கள் எழுத வேண்டும்.

நான் இன்று வரை வெறும் இசை நுகர்வோனாகவே இருந்து வருகிறேன், முதல் அறிமுகம், எஸ்ரா ஒரு கட்டுரையில் "tchaikovsky" waltz of flowers இசை தட்டு ஒன்றை gramaphone வழியாக, ஒரு வாழ்ந்து முடிந்த வீட்டில், கேட்டதை பற்றிக் குறிப்பிட்டிருப்பார், சுவற்றில் மலர்கள் மலர்ந்தது போல் இருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

ஒரு எளிய இலக்கிய வாசகனாகவே இந்தப் புத்தகத்தை வாசித்தேன், மனதுக்கு நெருக்கமானதாக  இருந்தது pau casals மற்றும் zubin mehta கட்டுரைகள், pau casals அந்த மலையடிவார கிராமத்தில் இருந்து கொண்டு போரிலிருந்து தப்பி வரும் மக்களை எதிர் கொண்டு வினவும் சித்திரம் அவர் வாழ்நாள் சாதனையின் குறியீடு போல் அமைந்துவிட்டது , வடிவ தேர்வின் மூலம் zubin mehta குறித்த கட்டுரை மனதை பாதித்தது, குறிப்பாக அவர் தந்தையின் வாசனையை உணரும் தருணங்களை நீங்கள் அமைத்திருக்கும் விதம் இசை பொழிவின் நடுவில் நாம் ரசிக்கும் நிசப்தத்தை நினைவூட்டும் கணங்கள் 

சில கட்டுரைகள் விஷயம் தெரிந்தவர்களுக்கானது , என் தலைக்கு மேலே சென்று விட்டது, நீங்கள் இதற்கு மேல் எளிமையாக்க முடியாது, மீண்டும் படிக்க வேண்டும் 

அன்புடன்
மணிகண்டன்




Monday, June 22, 2020

மனம் - பெரியசாமி தூரன்

அறிமுக நூல்களை படிக்கையில் அடுத்து அடுத்து புதிய கலைச்சொற்கள் தோன்றியபடி இருந்து வாசிப்பவர் மலைத்து போவும் விதமாக அமைந்து இருக்கும் ஆனால் தூரன் அவர்கள் நூல்களில் குறைவான அளவே புதிது புதிதாக கலைச்சொற்கள் வருகின்றன,அதே நேரத்தில் மீண்டும் மீண்டும் அந்த ஒரு கலை சொல் குறித்த விளக்கம் வெவ்வேறு இடங்களில் வந்தபடியே இருக்கிறது. இந்த நடைத்தேர்வின் மூலம் விஷயங்களின் அடிப்படை குறித்த தெளிவான புரிதல் கிடைக்கிறது. 


எளிமையான விளக்கங்களின் இன்னொரு ஆபத்து சிக்கலான நுட்பமான இடங்களை எவ்வாறு விவரிப்பது என்பது ? அத்தகைய இடங்களில் தூரன் விஷயங்கள் அவ்வளவு எளிமை அல்ல என்று வெளிப்படையாக ஒப்பு கொள்கிறார், அதே நேரத்தில் பல்வேறு கோணங்களில் அவ்விஷயம் எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பதை விவரிக்கிறார், " என்று கூறுவாறும் உண்டு" , என்று கூறுவாறும் உண்டு"  என பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவுகளை கோடிட்டு காட்டி  விஷயத்தின் நுட்பங்களை எடுத்துரைக்கிறார்.

விஷயத்தின் தோற்று வாய் குறித்து தொடங்கி மேலும் விவரிக்க அவ்விஷயம் தொடர்ந்து எப்படி பயணப்பட்டு வருகிறது என்பதை கவனமாக பதிவு செய்கிறார் , குறிப்பிட்ட நபரையோ, சாராம்சத்தையோ தூக்கிப் பிடிக்காது, அவ்விஷயம் குறித்த புரிதலில் ஏற்பட்டுள்ள கால வாரியான மாறுதல்கள்,  அவ்விஷயம் குறித்த வெவ்வேறு நபர்களின்  பார்வைகளை குறித்து கூறி அவ்விஷயத்தை முழுமையாக புரிந்து கொள்ள உதவுகிறார்.

எப்படி  மன ஆராய்ச்சி துறையில் ஒரு சிறிய புரிதலை அடைய தொடர் ஆராய்ச்சிகளும், தரவுகள் சேகரித்தலும், பல்வேறு நபர்களின் பங்களிப்பும் கூடி வருகிறது என்பது இந்நூலை வாசிக்கையில் புலனாகிறது.
________

கநாசு " பிராய்ட் கும்பல்" என்று எழுதியதை வாசித்தது நினைவில் இருக்கிறது , இது மனதில் எப்படியோ தங்கி விட்டது, பிராய்ட் குறித்த விட்டேத்தியான மனநிலையை தோற்றுவித்துவிட்டது, தொடர்ந்து டாக்டர் ஷாலினி கூறி வரும் விளக்கங்கள் என்னுள் ஒரு வித ஒவ்வாமையை ஏற்படுத்தியது,  இந்நிலையில் தான் பிராய்ட் கூறிய பெரும்பாலான கருத்துக்கள் தாங்கிய பெ தூரன் அவர்கள் எழுதிய மனம் குறித்த நூல்களை வாசிக்க நேரிட்டது ,இந்த ஒவ்வாமை பாலுணர்வு சார்ந்தது , அனைத்து மன சிக்கல்களுக்கும் பாலுணர்வே அடிப்படை என்பது பிராய்ட் சித்தாந்தம், இங்கே ஒரு சிறிய பெயில் விண்ணப்பம் உண்டு, பாலுணர்வு என்பது காமம் சார்ந்தது மட்டுமல்ல அன்பும் சேர்ந்தது தான் அது என்று பிராய்ட் கூறியதாக தூரன் எழுதி இருப்பது. எனது இந்த ஒவ்வாமை க்கு  வலு சேர்க்கும் விதமாக எந்த அறிவியல் தரப்பு இருப்பதாக நான் முன்னர் அறிந்தத்தில்லை ஆனால் தூரனின் நூல்கள் வழி அட்லெர் மற்றும் யுங் பரிச்சயம் ஆகிறார்கள், archetype யுங் என்று அரைகுறையாக தெரிந்திருந்தாலும் பிராய்ட் அவர்களின் தொடர்ச்சியாய் அட்லெர் மற்றும் யுங் வருகிறார்கள் என்பது இந்நூல் வழியே தெரியவந்தது, பிராய்ட் பாலுணர்வை இன்னொரு வகையில் லிபிடோ என்றும் இத் Id என்றும் கூறுகிறார். யுங் லிபிடோ காம இச்சைகள் மட்டும் நிறைந்த இடம் கிடையாது என்றும் மூதாதையர் சரடு மற்றும் ஆற்றலின் உறைவிடம் என்றும் கருதினார் , இப்படி புரிந்து கொண்டேன் காமம் அல்லாத நடவடிக்கைகள் மூலம் நாம் லிபிடோ வை ஆற்றுப்படுத்த முடியும் இத் ன் இச்சைகளை ஆற்று படுத்த முடியும், 

இவ்விடங்களில் இரு இலக்கிய துணுக்குகள் , தி ஜானகிராமனின் "சக்தி வைத்தியம்" சிறுகதை , சில நாடுகளில் தாயை கண்டே பிள்ளைகள் பாலுணர்வை அறிந்து கொள்ள துவங்குவது குறித்து நான் எங்கோ படித்த ஞாபகம். .இரண்டும் இரு எல்லைகள்.யுங் மற்றும் பிராய்ட் குறித்து புரிந்து கொள்ள இவை உதவும். சக்தி வைத்தியம் கதையில் அடங்காது கத்தி கொண்டே இருக்கும் சிறுவனுக்கு ஓவியத்தை பரிந்துரைத்து லிபிடோவை ஆற்றுப்படுத்தும்  திறமையான ஆசிரியரை , அவரது தாய், ஆசிரியர்த்தனத்தை கணக்கில் கொள்ளாது அவருக்கு சமைக்க தெரியாது என்ற புள்ளியின் வழி எடைபோடுவார் , ஆற்றலின் சக்தியின் வழியை அறியும் வண்ணம் அமைந்த கதை. யுங் இந்தியாவிற்கு வந்திருக்கறார், யோகம் குறித்து அறிந்திருக்கிறார்.

அட்லெர் தாழ்வு மனப்பான்மை என்ற புள்ளியில் இருந்து துவங்குகிறார், வாழ்நாள் தொடங்கிய நாள் முதல் பெற்று கொண்டே இருக்கும் குழந்தை திருப்பி கொடுக்க நினைக்கும் எண்ணத்தை உயர்வு உந்துதல் என்று கூறுகிறார், மனம் கொடுக்கும் உயர்வான இடத்தை விரும்பிகிறது, இவ்விஷயம் குறித்து தூரன் இந்நூலில்  பெரிதாக விளக்கவில்லை ஆனால் அட்லெர் குறித்து தாழ்வு மனப்பான்மை என்னும் நூலை எழுதியுள்ளார்.

அதீத அகத்தை  (Super Ego) என்னும் மனதின் ஒரு பகுதியை போலீஸ் ஆசிரியர்  லட்சியம் என்கிற இடத்தில் வைக்கிறார், லிபிடோவை இத்தை (Id)மிருகங்கள் இடத்திலும் அகத்தை (Ego) நடைமுறை மனதின் இடத்திலும் வைக்கிறார், கூத்தாடும் இத்தும் கண்டிக்கும் அதீத அகமும் அகத்தை ஒரு வழி பண்ணுகின்றன. 

Trance திரைப்படம் இக்கோட்பாடுகளை தொட்டு செல்வதாக திரை விமர்சகர் சுதிஷ் காமத் கூறுகிறார் 

சதா நம் மிருக இச்சைகளை மட்டுமே நினைவுபடுத்தி கொண்டிருக்கும் மன பகுப்பாய்வு முறை  அவை சார்ந்த கலைப்படைப்புகள், உலக நிகழ்வுகள் குறித்த குற்ற உணர்வை தூண்டியபடி இருக்கும் அதீத அகம் என்கிற பிணைப்பு நம் காலத்தில் எப்படியோ அமைந்து விட்டது, இவ்விடத்தில் நாம் நம் மூதாதையர் விதித்துள்ள லட்சியம் குறித்து பேச வேண்டி இருக்கிறது, புலனடக்கம் மன ஓட்டத்தை நிறுத்தும் ஆற்றல் இவையே பூமியில் பிறந்தவர்க்கு இலக்காக லட்சியமாக பெரும்பாலும் கிழக்கில் கூறப்படுகிறது
இச்சைகளை ஆற்றுப்படுத்தி குறைத்து, ஆதி பயம், கவலை , நடைமுறை பொய் மூன்றும் பூச்சியமாகி இருக்கும் இடம் தான் லட்சியமான யோக நிலையா என்று அறிய ஆவலாக உள்ளது.

அடிமனம் மற்றும் மனமும் அதன் விளக்கமும் என்கிற இரு நூல்கள் குறித்த மனப்பதிவு இந்தக்கட்டுரை.

Wednesday, June 17, 2020

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - சி மோகன்





அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,

வணக்கம்

தங்களின் மேற்கண்ட நூலை வாசித்தேன் மிக மிக சிறப்பான அறிமுகமாக இருந்தது. இந்த புத்தகம் கட்டமைந்திருக்கும் விதம் அருமை. முன்பு கூறியவற்றையே அடுத்த அத்தியாயங்களில் சேர்த்து சேர்த்து கூறியிருக்கும் விதம், நவீன ஓவியத்தின் அறிமுக சித்திரம் வாசிப்பவர் மனதில் நன்கு பதிகிறது. இப்போது நான் கூட நவீன ஓவியங்கள் குறித்து நண்பர்களிடம் உதார் விட முடியும் நிற்க. கலைக்கும் கலை தோன்றும் ஊற்றுக்கண் குறித்தும் நீங்கள் அழகாக வரலாற்று பின்புலத்துடன் இணைத்து எழுதியுள்ளீர்கள் .

புகைப்படத்தின் சவாலை எதிர் கொண்டு உள்முகமாக பயணம் தொடங்கினாலும் அது வரை நடந்த புற நிகழ்வுகளையும் கருத்தில் கொண்டு நவீன ஓவியம் பயணப்பட்டு இருக்கிறது - எளிமையான புறப்பொருள் , இயற்கை, மன எழுச்சி, தொன்மங்கள் , சமகால நிகழ்விற்கு எதிர்வினை ,கூட்டு நனவிலி, கனவு,அரூபம் என அகத்தில் தொடங்கி புறத்திற்கு எதிர்வினை ஆற்றி மீண்டும் ஆழ்மனதில் அத்தனை கேள்விகளுக்கும் விடை தேட முயல்கிறது.

ஜாக்சன் பொலாக் இன்று ஒரு நவீன மனிதன் நிற்கும் இடம் என்று நினைக்கிறேன் அப்பெரிய ஆளுமைக்கு வெளிப்பாடு சாத்தியமாகி இருக்கிறது ,சரியாக வெளிப்படுத்த தெரியாத இயலாத நவீன மனிதன் என்ன செய்வான் ?

ஜாக்சன் பொலாக் குறித்து எனக்கு முன்பே தெரியாது. ஆனால் ஏதோ ஒரு வகையில் பழைய விஷயங்களை அறவே தவிர்த்து தனி மனிதன் மட்டும் மதிப்பிடப்படும்  புதிய உலகை நிர்மாணம் செய்த, செய்து கொண்டிருக்கும் அமெரிக்காவின் சித்திரம் வந்தது. கூட்டம் கூட்டமாய் வாழ்ந்த, வாழ்ந்து வரும் நம் சமூகம் தனி மனிதன்  என்ற இந்த கோட்பாட்டிற்கு அளிக்கும் எதிர்வினையே நம் சமகால வரலாறு என்று புரிந்து கொள்ள முயல்கிறேன்.

இங்கே உதாரண புருஷர்கள் குறித்து சொல்லப்படுகிறது வில்லன்கள் குறித்து கூறப்பட்டு வருகிறது ஆனால் அனைவரும் கிட்டத்தட்ட ஒன்று தான் என எந்திரமும் சொல்கிறது அத்வைதமும் சொல்கிறது. இரண்டுக்கும் இடையில் ரசனையான வாழ்வு இருக்கிறது. ஷங்கர் ராமசுப்ரமணியன் சொல்வது போல "கடைசிக்கு முந்திய ஸ்டாப்பில்" இறங்கத் தெரிய வேண்டும் . 

சிறப்பான நூல் - நீங்கள் கூறியிருப்பது போல படிக்கும் வாசகன் மேலும் முன்னெடுத்து செல்ல வேண்டும். நீங்கள் வழிகாட்டியுள்ளீர்கள்.

அன்புடன்,
மணிகண்டன்

Saturday, June 13, 2020

புட்டன்ப்ரூக்ஸ்


சிதைவின் கதை- புட்டன்புரூக்ஸ் 

https://www.jeyamohan.in/133508/



அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம் 

புட்டன்ப்ரூக்ஸ் - எழுதப்பட்டு நூறாண்டுகள் கடந்து விட்டது - கதையின் காலகட்டம் இன்றிலிருந்து ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகள் பிந்தையது - தங்கள் தளத்தில் வந்த கட்டுரையே இந்த நாவலை வாசிக்க தூண்டியது .

வாசித்து முடிக்கையில் ஒரு வித சோகமான சோர்வான மனநிலையை அடைந்தேன், பெரிதாக திருப்பங்கள் எதுவும் இல்லை  , நாடகீய தருணங்கள் சிறிதளவு  கூட இல்லை, கண் முன்னே ஒரு எழுபதாண்டு காலம் நடைபெறுகிறது , கால பிரவாகத்தை, விதியின் கோலத்தை,  ஆசிரியரின் சிறிய அழகிய சொற்றொடர்கள் வழி அடிக்குறிப்புகள் போல் சொல்லியபடி வாசித்து முடித்தேன், வாசித்து முடிக்கையில் இறுதிப்பகுதி மிகவும் பூடகமாகவும் மொத்த நாவலின் மவுடீகத்தை சற்றே நீக்கி வெளிச்சம் பாய்ச்சுவது போலவும் இருந்தது .

தாத்தா தொடங்கி, மகன் பேரன் கொள்ளுப்பேரன் காலம் வரை செல்லும் இந்த நாவல் எந்த ஒரு தனி மனிதனின் தோற்றத்தை விவரிக்க வெகுவாக மெனக்கெடுகிறது , சிறிய ஆடை மடிப்புகள் தொடங்கி , அணிந்திருக்கும் அங்கியின் தரம் என்ன என்பது வரை நிறைய மெனக்கெடல்கள் , மீண்டும் மீண்டும் உடை குறித்து விவரணைகள் வந்த வண்ணம் இருந்தது , புகைப்படம் குறித்தோ , உருவப்படம் குறித்தோ பெரிய குறிப்புகள் இல்லை 

ஏன் இப்படி இக்குடும்பத்தின் வளமை குன்றுகிறது என்ற கேள்விக்கு பதிலாக நாவலின் காலகட்டத்தில் நிகழும் அரசியல் மாற்றம் , இப்பெரும் குடும்பம் அவ்வரசியல் மாற்றத்தை பெருமளவு சரியாக புரிந்த கொள்ளவில்லையோ என்று ஒரு இழை , வழி வழியாக வியாபாரம் செய்து வரும் ஜேர்மன் குடும்பங்கள் யூதர்களுக்கோ இன்னபிற வணிக குடும்பங்களின் ஆதிக்கத்தில் எப்படி சரிந்தன என்று ஒரு இழை, தாத்தாவின் ஆளுமை மகனுக்கு இல்லை , பேரன் அப்பாவை போல் இருந்தாலும் சிறிய பிசிறு , கொள்ளுப்பேரன் முற்றிலும் வேறு வார்ப்பு என்னும் ஆளுமை சிக்கல்கள் என்று ஒரு இழை , விதிவசத்தால் வீட்டின் பெண்கள் துயரறுகையில் குடும்பம் எவ்வாறு சிறிது சிறிதாக வளமை குன்றியதாக ஆகிறது என்னும் ஒரு இழை , 

அனைத்தும் மிகவும் மௌடீகமாகவே சொல்லப்படுகிறது , ஆனால் இரு விஷயங்கள் கொஞ்சம் அடிக்கோடிட்டு சொல்லப்படுகிறது - தாமஸ் - கெர்டா இருவரின் ஆளுமை வேறுபாடுகள் ,தாமஸ் எனக்கு மிகவும் பிடித்த கதாப்பாத்திரம் , தன் ஆளுமையின் எல்லையை உணர்ந்திருந்தான் , கெர்டா உடனான ஆளுமை வேறுபாடுகள் எவற்றையும் சரி செய்ய கூடிய காலம் கடந்தமையை உணர்கிறான், தன் எல்லைக்குட்பட்டதை செய்து முடிக்கிறான் , கெர்டாவின் இசை ஆளுமை கூட மீண்டும் மீண்டும் பயில்விக்கப்பட்ட ஒரு விஷயம் போல எந்திர தன்மையானதாக இருக்கிறது - குட்டி யோஹான் தன் சுபாவம் வழி தந்தையை மறுதலிக்கிறான் , இசை ஆளுமை வழி தன் தாயையும் மறுதலிக்கிறான் - எடுத்தியம்ப இயலாததான துயரத்தை இசை வழி வெளிப்படுத்துகிறான் - நாவலின் மௌடீகம் இந்த இடத்தில சற்றே கலைகிறது

எது வீழ்ச்சி ஒரு எளிய உயிரின் தவிப்பை உணர முடியாத இயந்திரமாக வணிகமும் இசையும் மாறிவிட்டதா ? இயந்திரமும் இசையும் என்ற  புள்ளியில் இருந்தே நாம் குட்டி யோஹனின் பள்ளிக்கூட நாளை அணுக வேண்டும் ஒரு நாள் பள்ளி வகுப்புகளின் அட்டகாசமான விவரிப்புகளுடன் அமைந்துள்ள இப்பகுதி ஒரு அறைகூவல் -  தற்போது வெளிவந்த "சைக்கோ" திரைப்படத்தில் இந்த நாவலின் தாக்கத்தை காணலாம் , 

மதம் தன் பிடிமானத்தை இறுக்குகையில் , அறிவியல் இயந்திரம் எந்த அளவில் கல்வியின் கூறுகளை மாற்றியமைத்திருக்கிறது என்று எண்ணுகையில் மதமும் அறிவியலும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என புலனாகிறது  , பரஸ்பர விடைகள் முரண்கள் இருந்தும்  , ஒரு வித நிச்சயத்தை சார்பாக வைத்து இரண்டுமே வளர்கின்றன , இந்த நிச்சயம் மதம் வழி கல்வி விஷயத்திலும் , அதே நிச்சயம் அறிவியல்  இயந்திரத்தின் அலகாக கல்வியை ஆக்குகிறது , இங்கே குட்டி யோஹான் போன்ற குழந்தையின் அழுகை செசெமி டீச்சரின் குரல் கேட்டவுடன் அடங்குகிறது .நூற்றைம்பது ஆண்டுகள் தாண்டி அத்தனை இசை இயந்திரர்களையும் தாண்டி யோஹனின் குரல் பீத்தோவன் இசை வழி நம்மை வந்தடைகிறது.

இயந்திரங்களின் ஒத்திசைவு மனிதனை ஒரு அலகாக்குகிறது, இசையின் ஒத்திசைவு அம்மனிதனின் வெறுமையை, கண்ணீரை ஓரளவேனும் ஆற்றுப்படுத்துகிறது.

அன்புடன்,
மணிகண்டன் 

இரண்டு தந்தையர்

அன்புள்ள சுந்தர் சருக்கை அவர்களுக்கு,

அன்புள்ள சீனிவாச ராமாநுஜம் அவர்களுக்கு,

வணக்கங்கள்

இரண்டு தந்தையர் நல்லதொரு வாசிப்பு அனுபவமாக இருந்தது ,நன்றி.

மூன்று நாடகங்களையும் இருமைகளின் நடனம் என குறிப்பிட விரும்புகிறேன்  - அறிவுஜீவி Vs சாமான்யர் , கிழக்கு Vs மேற்கு ,வெள்ளையர் vs  ஏனையர், குடும்பம் Vs தனிமனிதன் , அன்பு Vs கட்டுப்பாடு , பழைமை Vs புதுமை , தந்தை vs மகன் , அறிவியல் vs ஆன்மிகம், கூர்மை vs முழுமை , உண்மைகள் vs  பாவனைகள் , அழகு vs அசிங்கம் , பிம்பம் vs நிழல் , லட்சியம் / கனவு   vs செயல்பாடு என வாசகனை ஊஞ்சலாட அழைக்கிறது.

ஹார்ட்டியின் மன்னிப்பு என்பது ஹார்டியின் நியாயப்பாடு என்று மாறியிருக்கிறது.
இது ஹார்டியின் உலகப் பார்வையின் இறுக்கத்தை தெளிவுபடுத்துகிறது.

எல்லா உண்மைகளையும் அறிந்தவராக ஹார்டி இருக்கிறார் 
ஐன்ஸ்டீன்  உண்மையை உணர்ந்திருந்தாலும் ஒப்பு கொள்ள மனம் இல்லாதவராக மாறி விட்டிருந்தார். காந்தி மீண்டும் மீண்டும் மறுபரிசீலனை செய்து சுற்றியிருப்பவர்களை திகைக்க வைக்கிறார். 

ஜானகி தனக்கு எந்தக் குறையும் இல்லை எனக்  கூறுகிறார்
லீசர்ல் தொடர்ந்து தன் தந்தையை குற்றம் சுமத்தியபடியே இருக்கிறாள்
ஹரிலால் தனது பாவனைகளை தானே முன் வந்து களைகிறான்.

மனதுக்கு நெருக்கமானதும் மிகுந்த தத்தளிப்புக்கு உள்ளானது ராமானுஜம் அவர்கள் தான் - தனது மேதைமையை உணர்ந்திருந்தார் - மேதைமை குறித்த அலட்டல் இல்லை - மனைவியின் அன்பிற்காக ஏங்கினார் - தாய் சொல்லை தட்டவில்லை - ஹார்டியின் உறவை மதித்தார் - சாமானியர்களை குறித்து அறிந்திருந்தார் ஆனால் காழ்ப்பு இல்லை - தன் ஆளுமையையும் விட்டுக் கொடுக்காது தான் மனம் பிறழந்தவன் இல்லை எனவும் அதே நேரத்தில் ஹார்டியின் மீது எந்தப்  பழியும் வரவேண்டாம் எனவும் நினைத்தார் - நிறவெறியை கூட தன் தோற்றத்தின் மீதான ஒரு விமர்சனமாக மாற்ற முயன்றார் - இருமைகளின் நடனத்தை அவர் சுமந்தார் - அது தாங்க முடியாததாக இருந்தது.

காந்தி குறித்து ராமானுஜம் அவர்கள் என்ன அபிப்ராயம் வைத்திருந்தார் என்று தெரியவில்லை - இதே போலத் தானே ரயிலிருந்து கீழே தள்ளி விடப்பட்டிருப்பார் காந்தி - அது வரலாற்றை  மாற்றியதை நாம் அறிவோம். நவீனத்தின் எல்லா தத்தளிப்பிற்கும் காந்தியிடம் விடை உள்ளது - நசுக்க முடியாத ஒரு மன எறும்பு. நடந்து கொண்டே இருப்பது ,உள்ளே  ஊர்ந்தபடி அவ்வப்போது சுருக் என்று கடித்தபடி தற்சுட்டி திகைக்க வைப்பது.

 அன்புடன்
மணிகண்டன்

Wednesday, May 20, 2020

My American Uncle - Alain Resnais

My American Uncle , Starts really weird with Montage shots travelling through childhood of 3 different people and at the same time a scientist explaining basic functioning of brain,starts with explaining about brain of an insect inter cut with a wonderful crab moving its pincers as if puzzled by the observation of the voice over saying insect do not have emotions but only reproductive and protective instincts, further moving to mammals who have got an improved brain with the emotive faculty and adding further comes to Man who has got this special associative ability, thus the backdrop is drawn, 3 people 2 He & 1 She, their lives roll on and all three arrive at their adult phase.

A Writer , A Factory Manager and an Actress , Each one have their own equation with their Families and wrestle with idea of breaking from their Family for different reasons - Actress for an independent Life , Writer for political growth and Factory worker for proving his utility to Factory Management, All Three lives inter wine is peculiar Fashion ,A premise originates which we will examine later, Independent Actress is always at loggerheads with who ever she interacts with starts a relationship with Writer only to be separated by that premise, She as a professional dress designer interacts with Factory Manager,who is already challenged by another Manager appointed to work alongside him, She eggs him to perform better in his role, resulting him complete burnout of the Factory Manager,

Actress is the Utopia, believes on the premise that Family will die allowing the individual to Flourish in his Liberty, but rather it did not die. Family provides the necessary cushion for individual achievers to reach their goals,a contradictory but practical occurrence, Family trumps the Utopia that all are equal, Further from the other end of Spectrum we have the Utopia of Machines & Capital causing a man to burn out only to be humanized and saved by his Family's emotional support. Due to Family's Stable support Writer becomes a successful Politician only to wrestle with idea of independent individual , wrestle with Utopia forever.  sums up confidently that this much We Know and we need to move further from here.

My American Uncle stands as a Wonderful Metaphor to Individual Ambition , No One knows if American Uncle succeeded in Life , but there is always a word around about American Uncle.

Sunday, May 17, 2020

விபரீத ராஜ யோகம் - கல்யாணராமன்

"விபரீத ராஜ யோகம் " சிறுகதை தொகுப்பு வாசித்தேன் - புத்தகம் குறித்த எனது சில எண்ணங்களை பின் வருமாறு தொகுத்துள்ளேன்


 நீங்கள்  ஆதவனின் "புதுமைப்பித்தனின் துரோகம் " வாசித்திருக்க கூடும் எவ்ளோ சொன்னாலும் வாசகனின் கிறுக்கு புத்தி மீண்டும் மீண்டும் செய்யும் அற்பத்தனம் இருந்தும் தங்களது பெரும்பாலான சிறுகதைகளின் தன்வரலாற்று தன்மை என்னை அவ்வாறு சிந்திக்க வைத்தது - மன்னிக்கவும்


யோசித்துப் பார்க்கையில் இந்த தன் வரலாற்று தன்மையான உரைநடை  கதைகளில் அபாரமாக கூடி வந்திருக்கிறது சரளமாக காலத்தில் முன்னும் பின்னும் செல்லவும் , நிகழ்ச்சி, அடுத்த நிகழ்ச்சி என அன்றாடத்தையும்  அதே நேரத்தில் என்றும் உள்ளவற்றையும் கோடிட்டு காட்டி , ஒரு சேர வாசிக்கையில் , சுகம் வலி என பிரித்தறிய முடியாத நினைவுகளை மீட்டியபடியே வாசிப்பு அமைந்தது .மற்றுமொரு அழகிய உத்தி சட்டென்று கதைக்கோணம் வேறு ஒரு கதாபாத்திரத்தின் பார்வையில் முடிவது - நன்கு ரசிக்கும்படி இருந்தது.


 தன் வரலாறு என்பதாலோ என்னவோ பழைய கதைகள் என்னும் தொனி அனைத்து கதைகளிலும் இருக்கிறது - சில கதைகளின் ஆதாரமான விஷயங்கள் ( ஜல சமாதி, பிரும்ம ஞானம் , சிரிப்பு, ஒரு பூனையும் சில மழைநாள்களும், பெர்னார்ட் ஷா பிறந்தார்  ) இன்று சிக்கலான விஷயங்கள் அல்ல , நடைமுறையிலும் அவை எளிதாக புரிந்து கொள்ள படுகின்றன


மாறாக  "பிம்பங்கள் மாயைகள் லீலைகள்" , "எதிரி " விபரீத ராஜ யோகம்" , "ஏழாம் பிறை", "கழுத்தைப்பிடி"  போன்ற கதைகளில் வரும் ஸ்தூலமில்லாத விஷயங்களே என்னை வசீகரிக்கின்றன - இந்தக் கதைகளே என்னை மிகவும் கவர்ந்தன.


 தங்கள் கதைகள் தூண்டும் நினைவுகள் மனதை மகிழ்வித்தது , நினைவுகள் என்று மட்டும் சொல்லி பழையது என்று போக்கு காட்டி எனக்கு நானே சமாதானம் சொல்லிக்   கொண்டாலும் " குடும்ப பாரம்" அல்லது  பொதுவாக " பொறுப்பு " என்று சொல்லப்படும் விஷயங்கள் குறித்த உரையாடலாகவும் உங்கள் கதைகள் இருக்கின்றன -


குறிப்பாக முப்பத்தைந்தை தாண்டி உள்ள எனக்கு சாப்பாடு, சினிமா, புத்தகம் தவிர வேறு பெரிய ஆசைகள் இல்லை என்பது எனக்கே சிறு சந்தேகத்துடன் ஒப்பு கொள்ளக் கூடிய ஒன்றாக இருந்தாலும் எனது இந்த   stoic ness ஐ சுற்றி உள்ளவர்கள் உரிய முறையில் டீல் செய்து வருகிறார்கள் - அந்நடவடிக்கை சில நேரங்களில் என் " நானை" துளைத்தும் பல நேரங்களில் என் சாமர்த்திய அமைதியாலும் சில நேரங்களில் என் இயல்பான அமைதியாலும் டயர்ட் ஆகாமல் (சைக்கோ திரைப்படம் ) நாட்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன - தன் வரலாறு முற்றும்.


கதைகளில் உள்ள வெளிப்படையான ஆன்மீக சாய்வு , குறிப்பாக , த்வைதம் , அத்வைதம் மற்றும் சூன்யம்  குறித்த விஷயங்கள் கச்சிதமாக இருக்கிறது - காரண காரியம் குறித்து நீங்கள் பெரிதும் அலட்டிக் கொள்ளாதது மகிழ்ச்சி - அதே நேரத்தில் நிஜத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள்  போல் உள்ளதால் கதைகளின் நம்பக தன்மை கெடவில்லை. 


கதை வரிகளில் " தித்திப்பு"  என்கையில் திஜா வும் "நடிப்பு" என்கையில் ஆதவனும் , இரு ஆசிரியர்களும் நினைவுக்கு வருகிறார்கள்


நல்ல புத்தகம் 

Friday, May 15, 2020

புது பஸ்டாண்ட் - சத்யானந்தன்

சத்யானந்தன் அவர்களின் புது பஸ்டாண்ட் நாவல் குறித்த சில எண்ணங்கள் 

திருவெள்ளறை ராஜா கோபுரம் ஒரு அழகான குறீயீடாக வந்தமைந்துள்ளது - முற்று பெறாத எதோ ஒன்றை , ஒரு சிறு குறையை , மானுடம் சாதிக்க முடியாது எதோ ஒன்றின் விளக்கமாக அமைந்துள்ளது - தொடர்ந்து படித்து கொண்டிருக்கையில் வெவ்வேறு உதிரி சம்பவங்களின் தொகுப்பாக உணர்ந்தேன் ஆனால் ஏதோ ஒரு குறிப்பிட்ட இடத்தில் இப்புதினம் சமகால வாழ்வின் மொத்த சூழலையும்  வாசகன் கண் முன் கொண்டு வந்து நிறுத்த பிரயத்தன பட்டிருப்பது புரிந்ததது.

பழைய பெருமை அதன் ஓட்டுவாரொட்டியாக சாதி X தற்கால இளைஞர்களின் சாதி குறித்த மதிப்பீடுகள் X  குடும்ப உறவுகளில் அதன் தாக்கம் X இயற்கை விவசாயம் குறித்த ஆசை ஆர்வம்  Vs அதன் சாதீய கூறுகள் X அரசியல் அதிகாரத்தின் தின் தடித்தோல் மற்றும் கயமைத்தனம் X விஞ்ஞான தொழில்நுட்பத்தின் கட்டற்ற பாய்ச்சல் X தொழில் நுட்பம் சமூக உறவுகளில் ஏற்படுத்தும் சிக்கல்கள்  என கிட்டத்தட்ட ஒரு 360 டிகிரி பார்வையை கொடுக்க முயன்றுள்ளது, 

நாவலின் இவ்வடிவம் எனக்கு மிகவும் புதியதாக இருந்தது - சாதியும், தொழில்நுட்ப மாற்றமும் தான் இடையறாது நம்மை தொடர்ந்து வந்து கொண்டிருப்பவை - மனிதன் இயந்திரங்களுடன் அதிகம் பழக துவங்கிய பிறகு ஏற்படும் உளைச்சலை சமன் படுத்த பழையதை, இல்லாத ஒரு பழைய பொற்காலத்தை, இயற்கையை நாட முயல்கிறான் என தோன்றுகிறது ,

ஆனால் அந்த பழையதும்  இயற்கையும் நமது நுகர்வு மனப்பான்மையும் ஒன்றுக்கொன்று முரணான இடத்தில் அமைகிறது , குறைந்ததே நல்லது என்கிறது பழையது ஆனால் தொழில் நுட்ப சூழலில் நுகர்வே நாட்டுக்கு நல்லது. நுகர்வும் துறவும் எந்த ஒரு சிந்திக்கும் நவீன மனிதனை அலைக்கழிக்கும் இரு முக்கியமான  விசைகள், பல்வேறு இயங்குவிதிகளின், கற்பனையின், யதார்த்தத்தின், ஸ்தூலம் இல்லாத வரலாற்றின், மாறிக்கொண்டே இருக்கும் தொழில்நுட்பங்களின் ஒரு கோட்டு சித்திரமாக அமைந்ததுள்ளது இந்த நாவல். இரும்பை விஞ்சுமா செயற்கை நுண்ணறிவு? காலம் தான் விடை அளிக்கும்.

Tuesday, April 28, 2020

சிவபுராணம்

சிவபுராணம் - அருண் கார்த்திக் 

சற்றே அலட்சியமாக கடந்து செல்லவே இந்தத் திரைப்படத்தை காண தொடங்கினேன் , ஏனெனில் நான் ஏகமாக பார்வையிட்ட இப்படத்தின் விமர்சனங்களின் ஒற்றை வரிகள்  படத்தை கொண்டாடியது முதல் காரணம். இது அல்ப விஷயம் , இரண்டாவது காரணம், சற்றே ஏற்று கொள்ளக்கூடியது  மரபு தொடர்பாக எடுக்கப்படும் படங்கள்  முற்போக்கின் பாவனையை வலிய புனைந்து மரபின் அத்தனை ஓட்டைகளையும் தொகுத்து தோரணம் கட்டி இவ்வளவு தான் மரபின் மதிப்பு என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க முயலும் படங்கள் - சிவபுராணம் இரண்டாம் வகையில் இல்லை, படம் குறித்த எந்த விமர்சனங்களையும் ஒற்றை விளம்பர வரி தவிர்த்து படிக்கவில்லை , என் எண்ணங்களை தொகுத்து கொள்ளவே மேலும் எழுதுகிறேன்

"பட்டியல்" என்ற விஷயம் இலக்கியத்திலும் , திரைப்படத்திலும் , இசையிலும் முக்கியமாக கருதப்படும் விஷயம் - இந்தப் பட்டியல் ஒருவருடைய தனிப்பட்ட பட்டியலாக இருக்கலாம் அல்லது பிரபலமான ஒருவர் போட்ட பட்டியலாக இருக்கலாம் , அல்லது வாசகர்கள் பொதுவாக ஒப்பு கொள்ளும் முரண்படும் பட்டியலாக இருக்கலாம் - இந்தப் பட்டியல் விஷயம் இப்போது பெரு நிறுவனங்களின் கையில் உள்ளது , குறிப்பாக திரைப்படங்களை பொறுத்தவரை  சராசரி திரைப்படமும் உன்னதமான படைப்புகளும் ஒரே நேரத்தில் ஒரே சட்டகத்தில் பாவத்தில் விவாதிக்கப்படுகின்றன - பெரு நிறுவனங்கள் அசுர வேகத்தில் படங்களை அளிப்பது மட்டுமல்லாது படங்களை கட்டுக்கடங்காது  தொடர்ச்சியாக பார்க்கும் பழக்கத்தை ஊக்குவிக்கின்றன - இந்தப் பழக்கம் எந்த அளவில் நாம் வாசிப்பு தன்மையை ரசனையை மாற்றி அமைத்துள்ளது என்பதே ஒவ்வொரு ரசிகனும் தன்னை தானே கேட்டுக் கொள்ளவேண்டிய கேள்வி

சிவபுராணம் மாணிக்க வாசகர் அருளியது - இந்த திரைப்படத்திற்கும் மாணிக்க வாசகர் பாடியதற்கும் என்ன சம்பந்தம் - முதற் காட்சியில் வீடடையும் நாயகன் தொடங்கி , படத்தின் நெடுகே உள்ள நாயகனின் தனிமை, ஏகாந்தமான இயற்கை காட்சிகள், புத்தகம், படக்காட்சிகள், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள்,பால்த்தேரின் ஆடும் பாம்பு , பக்கத்துக்கு வீட்டுப் பெண் , பைக் சுற்றல், மழை, வெய்யில், கடல், பூனை, நாய்,எறும்பு , உடல்,  என மாறி மாறி வரும் காட்சிகளை அர்த்தப்படுத்தி தொகுக்க கடினமான ஒன்றாக இருக்கிறது - படத்தில் மிகவும் கவர்வது நாயகனின் தனிமை அதுவும் சிறுக சிறுக அவர் தனிமையை பருகுவது அவரது விதிவசத்தால் அல்ல தான் சுய தேர்வால்.

எந்த ஒரு தனிமையும் ஒரு தேடலை நோக்கி இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, அதே நேரத்தில் சிறிய லௌகீக விஷயங்கள் தவிர்த்து, சிவனே என்று இருக்கும் நாயகன், துணை தேடும் விஷயத்தில் ஏற்பட்ட சிறிய சஞ்சலங்கள் , முடிவுகள் தவிர்த்து இலக்கில்லாத ஏகாந்தத்தில் திளைப்பது போன்ற உணர்வை தருகிறது

படத்தின் பீரியட் , சற்றே முப்பது வருடங்கள் பிந்தைய வீடு, ஆனால் சுற்றியும் நவநாகரீக வீடுகள் கொண்ட இடம் ,  கேன் வாட்டர், இருந்தும், உன்னிடம் மயங்குகிறேன் எனத்தொடங்கி ஒரு இனிய மனது என்று முடியும் கலவையான  காலகட்டம் , பழைய பொற்காலத்தின் சாயலை நினைத்து ஏங்கும் ஒரு நவீன மனிதனின் வாழ்வின் ஒரு பகுதியாக இந்தப் படத்தை காண வாய்ப்பிருக்கிறது , படம் நெடுக நாயகன் ஒரு கவிதை புத்தகத்தின் அட்டை வடிவமைப்பில் கவனம் செலுத்த முயல்கிறான், மொத்தத்தில் மிகுந்த abstract ஆக உள்ளபடம் - சில அற்புதமான நிலக்காட்சிகளின் வழி , நாயகனின் தனிமை வழி நாம் அறிந்து கொள்ள சில விஷயங்கள் இருக்கலாம்.பிறவிப் பெருங்கடல் தாண்டி சிவபுரம் அமைந்துள்ளது.

https://mubi.com/films/the-strange-case-of-shiva

Saturday, April 18, 2020

Dasharatham

Read if you have watched the movie,

First Act is a scream, Sky's the Limit for Rajiv, his merriment goes on and on teasing invoking jealousy, joy and curiosity. What an extraordinary  set of dialogues we have when Rajiv leaves the bar,  Simply transforms a banal scene to a philosophical rumination.

Second Act , God s tender hands touches Rajiv, Rajiv & Kariyachan seem inseparable but distinct , Rajiv sees a Life beyond money and tries to win it over with his own might , did he succeed ? Sleeping King and his disciples.

Third Act -Repeat of the First Act but  Rajiv s nonchalance seems gone and Nervousness kicks in. Philosophical mooring is out of question, Rajiv means business, A Life hangs in thread , Such Life can be saved by giving life to another.

Fourth Act -A dilemma which arrives as an inevitable plot point , but in its pitch, it poses an universal question-  Whom a  Woman loves most ? Is it her Son or her Husband ? 

Final Act - Rajiv sheds all his might  turns a beggar, One wonders if it was his choice or his destiny which lead him to this situation  ? Another Universal Question, perhaps god s tender touches returns with Maggie.Perhaps there is a Mother in Pillai who protects and a Father  in Kariyachan who leads you into your meaning for life.

Mohanlal is wonderful in playing the entire arc, haughty rich , carefree , too proud ,too easy on surface but nervous,sure and  naive at times, speaks about money all through but yearns for those elusive things in terms of money, He uses his Rich stature crossing the limits of decency many a times only to realize where lines are drawn throughout , He warns, pleads, apologizes, shouts, cries, laughs, he does not care, he means business , What an extraordinary performance.

Delightful moments 1) Kariachan lying in the vast meadow all alone daydreaming 2) When  Rajiv asks What do you want,Das's Mother plants a earthly kiss on the newborn, 3) Grown up men roll over each other delightfully in Joy sums up how extraordinary the film is. 

Friday, January 31, 2020

Psycho

சைக்கோ திரைப்படம் குறித்த சில எண்ணங்கள் , விமர்சனம் அல்ல.

படம் பார்த்தவர்களுக்கு மட்டும்

படத்தின் முதல் காட்சியிலேயே யார் கொலைகளை செய்கிறார் என்று தெரிந்த பின்னர் முழு ஸ்வாரசியமும் எப்படி கொலையாளி மாட்டிகொள்கிறார் அல்லது கொலையாளியை எப்படி பிடிக்கிறார்கள் என்பது. இது பொதுவான படங்களின் போக்கு. சைக்கோவை  நாம் மேலும் நெருங்கி ரசிக்க இந்த "எப்படி " குறித்த சில எண்ணங்களே இந்தப் பதிவு. வெறும் குறியீடு கண்டுபிடிக்கும் விளையாட்டு மட்டும்மல்ல படம் நெடுகே உள்ள ஒத்திசைவை கண்டு கொள்ளவே இப்பதிவு.

படம் கௌதமன் வாழ்வின் , அவன் புத்தர் ஆவதற்கு முன்னர் நடக்கும் நிகழ்வுகளின் தொகுப்பாக காணலாம் , படத்தில் கௌதமிற்கு துணையாக இருக்கும் ராஜநாயகம்  மற்றும் கமலா , ஒரு பேட்டியில் தாகினியை புத்தராக உருவகிக்கிறார் மிஷ்கின் - படத்தின் இறுதியில் அங்குலியும் மனம் மாறுகிறான். கௌதமனின் பயணமும் நிறைவு பெறுகிறது - அங்குலியை கௌதமனின் மனதின் ஒரு அங்கமாக காண்போமேயானால் தாகினி நாம அடைய வேண்டிய முழுமையை நாம் அனைவரும் புத்தர் ஆகக் கூடிய சாத்தியத்தை புரிந்து கொள்ளலாம் - படத்தின் துவக்கத்தில் " Diamond Sutra " குறித்த வரிகளை இணைத்து புரிந்து கொள்ளலாம்

இங்கிருந்து நாம் முத்துகுமாரனுக்கு செல்லலாம் - கனிவின் மூலம் அங்குலியை எதிர் கொள்கிறான் - இந்த கனிவு அறிவின் வழி வந்தது , இயற்கையானது அல்ல , ஆனால் கனிவு முதல் படி மட்டுமே. கனிவின் பின் கோரமுகம் குறித்து அறிய வேண்டும் என்றால் நாம் கனிவாக இருக்க முயலும் நேரங்களை அசை போடலாம் , சில நேரங்களில் இயல்பாகவும் பல நேரங்களில் கனிவை நாம் வலிந்தே வர வழைக்கிறோம் - கனிவே நாம் கனிவாக இருக்கிறோம் என்னும் அறிவே ஆணவத்தை தருகிறது , இந்த ஆணவமே நமக்கு சிறையாகிறது , விடுதலையை தடுக்கிறது , சிறைக்குள் தலை. தலையில்லா உடல் இதன் நேரெதிர் , அங்குலி வழிபடுவது , வெறும் உடலின் இயக்கத்தை மட்டுமே கவனிக்கையில் உடலும் நமக்கு சிறை. இதுவும் விடுதலையை தடுக்கிறது.  அடுத்தது ராஜநாயகம் அங்குலியை அங்குலி வழியிலேயே எதிர் கொள்ள முயன்று தோல்வி அடைகிறான் . உடலின் வழி .உனக்கு ஆசையே கிடையாதா என்று கமலா  கேட்கையில் உயிரைக் கொடுத்தாவது  உள்ளுறையும் தாகினியை அடைவேன் என்கிறான் கௌதமன்.மத்திம வழி. புலன் வழி தாகினியை உணர தொடங்கி புலன்களை தாண்டி முழுமையை அடைகிறான்.

இறுதியில் கௌதமன் அரவணைக்கையில் அங்குலி புத்தனாகிறான், அங்குலி தன்னுள் உறையும் தாகினியை அதன் முன்னரே மெல்ல உணர தொடங்கியிருந்தான் - கௌதமன் தொடுகை நிறைவாக.

புலன் வழி தாகினியை உணர தொடங்கி புலன்களை தாண்டி முழுமையை அடைகிறான் - இந்த வரி மூலம் நாம் "நீங்க முடியுமா பாடல் படமாக்கப்பட்ட விதம் குறித்து சிலாகிக்கலாம். புலன் வழி அறிய தொடங்கும் ஒருவன் , சிறிது தூரம் வழி நடத்தும் அன்னை ( கமலாவின் தாயார் ) , முந்தைய அறிதலுடம் சிறு மோதலுடன் தொடங்கும் பாடல் , கமலாவின் அறிவுரைகளை தாண்டி புலன்களை தாண்டி அங்குலியை கண்டடைகிறான். திரை அரங்கில் ஒரு பறக்கும் அனுபவம் இந்தப் பாடல். வேகமாக கடக்கும் முயலை நீங்கள் கண்டிருக்க கூடும்.

படத்தின் அடுத்த அடிநாதம் " இயந்திர மயமாக்கல் " - அங்குலி கொலைசெய்யும் முறையில் தொடங்கி அங்குலி சார்ந்துள்ள அனைத்து விஷயங்களிலும் உள்ள இயந்திர இயல்பை மேலும் அறிய முயலலாம் - கொலை செய்வதை நாம் வழக்கமாக காணும் "சைக்கோ" கொலைகாரர்கள் போல ரசித்தோ அல்லது நெருக்கடியிலோ செய்வதில்லை - இயந்திர தனமாக அடுத்தடுத்து தொழிற்கூட தயாரிப்பு  போல தலைகள் விழுந்த வண்ணம் உள்ளது , ஒருவர் தலையை வெட்டி இன்னொருவரிடமும் அவர் தலையை வெட்டி இவரிடம் கொடுக்கும் இயந்திரம் அங்குலி.

அங்குலியின் வார்ப்பு எங்கே தொடங்குகிறது ? கல்வி நிலையங்களில். தவழும் பருவத்திலேயே சாவி கல்விநிலையங்களிடம் சென்று விடுகிறது. அடக்குமுறை சார்ந்த  ஒழுக்க விதிகளும் , இயல்பிற்கு மாறான விஷயங்களின் மீதான பிடிப்பும்  குற்ற உணர்வை தூண்டியபடியே ஒரு ரணமான உயிரை தோற்றுவிக்கின்றன - அந்த குற்ற உணர்விலிருந்து ஒருவன் கற்றுக்கொள்ள அவனுக்கு அன்பும் இறை நம்பிக்கையும் சில நேரங்களில் அந்த குற்ற உணர்வே ( மிஷ்கின்  பேட்டி ) துணையாக இருக்கின்றன - இந்த வகையிலேயே நாம் " Gladiator " காட்சியை புரிந்து கொள்ள முடியும் - மேலதிகமாக கதை களம் நடக்கும் மேட்டுப்பாளையம் சுற்றி உள்ள நம் காலத்து பள்ளிகளை பற்றி நமக்கு தெரியும் - " தேமே என்று இருக்கும் வெள்ளை பன்றியா ? அல்லது "உறுமும் கருப்பு பன்றியா ?" என்பதன் சூட்சுமம் புரியும்.

முடிவாக இசை , ஒத்திசைவான சிம்பொனி இசையால் நிரம்பி வழிகிறது திரை - உச்சமாக அங்குலி இறுதியில் தொழிற் கூடத்தில் தன் கத்தியை வீசியபடி வரும் காட்சி - இயந்திரமயமாக்கம்  பல்வேறு கண்ணிகளின் ஒத்திசைவோடு சேர்ந்து செயல்படும்  ஒரு அமைப்பு தான் -  - சிம்பொனி நமக்கு அளிக்கும் முழுமையை - இயந்திரம் நமக்கு அளிக்கிறதா ? இயந்திரமயமாக்கலின் தவிர்க்க முடியாத உருவகமாக அங்குலி , இருட்டில் கத்தியை வீசியபடி கௌதமனை தேடுகிறான். தேடித் கொண்டிருக்கிறான்.
சகுந்தலை தவற விட்ட மோதிரம் - துஷ்யந்தன் மறந்திருக்கலாம் கௌதமன் நினைவில் வைத்திருக்கிறான்