Monday, June 29, 2020

தனி வழி - ஆர் ஷண்முகசுந்தரம்


பழங்கனவின் உண்மை

லட்சிய உணர்வுடன் கூடிய இந்த கனவை நீங்களும் கண்டிருக்கக் கூடும் , இயற்கை கேடில்லாத சூழல் , வாஞ்சையான சுற்றம், உடல் உழைப்புடன் கூடிய ஒரு தொழில் , பெரிய கனவுகள் இடம்பெறாத சீரான, ஆதியிலிருந்து இப்படி தான் வாழ்ந்து வருகிறோம் என்ற எண்ணத் தொடர்ச்சியில் மாறாத காலத்தில் இயற்கையுடன் கலந்து இருக்கும் ஒரு கனவு வாழ்வு , கதையின் நாயகன் நாச்சப்பன் கிட்டத்தட்ட இந்த கனவின் அருகில் வாழ்ந்து வருபவன். அந்த கனவு வாழ்வின் அசலில் ஜாதி உண்டு சுரண்டல் உண்டு, அந்த கனவின் சுவடை அழிக்க வல்ல எல்லாம் உண்டு என்றாலும் அந்த கனவிலும் ஒரு நியாயம் உண்டு, நவீனத்தின் ,இயந்திரத்தின் வேகம் அறிய வைக்கும் காலக் கண்ணாடியாகவும் அந்த கனவு தொடர்ந்து கொண்டே இருக்கிறது, நவீன உலகத்தின் பதட்டத்தில் இருந்து விடுபட ஆசையாக அந்தக் கண்ணாடியை எடுத்து நாம் கண்டு அக்கனவினை மீட்டி மகிழலாம்.இந்த தொடர்ச்சியான கனவு வாழ்வில் நவீனமும், இயந்திரமும், வாங்கிக் குவிக்கும் பண்பாடும்,குறுக்கிடுகையில் ஏற்படும் மாற்றங்களை குறித்து,இயல்பான தொனியில் எந்த வித மட்டையடி கருத்துக்களுமின்றி, நாம் அறிந்து கொள்ள இந்நாவலை வாசிக்கலாம்.


தீர்க்கதரிசனம்

இது யதார்த்த பாணி நாவல். நாவல் நடக்கும் காலத்திற்கும் இப்போதைய காலகட்டத்திற்கும் இடையே எழுபது ஆண்டுகள் இடைவெளி. நாவலின் இறுதியில் கதை மாந்தர் எடுக்கும் முடிவுகளாக ஆசிரியர் அமைத்து இருக்கும் விஷயங்கள் தீர்கதரிசனமாக அமைந்து விட்டது , அவ்விஷயங்கள் கொங்கு வட்டாரத்தின் தொழில் முனைப்பிற்கு சான்றாக அமைந்திருக்கிறது. அதே நேரத்தில் அம்முனைப்பின் வெறியின் நிழலில் உள்ள இன்றைய  சூழலியல் யதார்த்தம் முகத்தில் அறைகிறது.

நேரம் குறித்த பிரக்ஞை

மெதுவாக நகர்ந்து செல்லும் காலத்திற்கு கொடுக்கப்பட்ட சாட்டையடி மணிக்கூண்டுகள் எனக் கூறலாம், நொடிக்கு நொடி மக்கள் வாழ்வின் நேரம் குறித்த பிரக்ஞை வளர்வதற்கு நவீனம் தான் காரணமாக இருந்திருக்கிறது, நேரமும் அது குறித்த பதட்டமும் நவீனத்தின் கூடப் பிறந்த குழந்தையாகவே இருக்கிறது, இந்த நேரம் குறித்த பிரக்ஞை இந்த நாவலில் மில் சங்கின் அலறல் என்ற வகையில் பதிவாகி இருக்கிறது, சங்கொலியை தொடர்ந்து சாரை சாரையாக மக்கள் வெளிவரும் அல்லது மில்லுக்கு உள்ளே செல்லும் சித்திரம் மாடர்ன் டைம்ஸ் படத்தில் கண்ட சித்திரம், அப்படம் குறித்து ஒரு திரையிடல் போது ஒருவர் கேட்டார், "படம் வந்து நூறாண்டுகள் ஆகிவிட்டது , அப்போது இருந்ததை விட இப்போது இயந்திர மயம் அதிகமாகி விட்டதே என்று ? "

முதலாளித்துவத்தின் கேள்விகள்

உடல் உழைப்பையும் முதலையும் ஒரு கணித சமன்படாக கருத துவங்கியத்தில் முதலாளிக்கு ம் தொழிலாளிக்கும் எதிர்பாராத சவால்கள் ஏற்பட்டு விட்டன , தொழிலாளியும் இயந்திரமும் ஒன்றாகியதில் ஒருவருக்கொருவர் முடிவுறாத யுத்தம் தொடங்கி நடைபெற்று வருகிறது, முதலாளியின் தன்முனைப்பும் தொழில் ஆர்வமும் வெறும் பணத்தாசையாய் சுருக்கும் உரையாடல் தொழிற்சங்கங்களின் நங்கூரமென ஆகிவிட்டது, மில்லின் அலகாக சேரும் தொழிலாளிக்கு எதிர்வினை ஆற்றும் வாய்ப்பாக  அமையும் வாய்ப்புகள் குறித்து சற்று அறியலாம், ஒன்று இடையறாத அந்த கணக்கு குறித்து முதலாளிகளுடன் பேரம் பேசும் தொழிற்சங்க பிரதிநிதி, இரண்டு அத்தொழிலை பயின்று தானே ஒரு முதலாளி ஆவது, இவ்விரு வாய்ப்புகளின் வார்ப்பாக கருபண்ணனும் கிட்டப்பனும் வருகிறார்கள்.

வரிசை

கநாசு இட்ட நவீன இலக்கிய வரிசையில் ஆர் சண்முகசுந்தரம் அவர்களின் பெயர் இருந்தது, இன்று நவீன இலக்கியம் குறித்து விமர்சகர் எவரும் வரிசை இடுகையில் சண்முகசுந்தரத்தின் பெயர் விடுபடுவதற்கு வாய்ப்பிருக்கிறது,  எழுத்தாளர் எஸ் செந்தில்குமார் கூறி வரும் " பொதுக் குரல் சாதியத்திலிருந்து வராது" என்னும் வரியை நினைவுக்கு கொண்டு வருகிறேன், எளிய புற காட்சிகளோடு   சாதி தவிர்த்து சமூகத்தின் குறுக்கு வெட்டு தோற்றத்தை விவரிக்கும் படைப்புகளை இக்காலத்தில் எவரும் விரும்புவதில்லை, மனம் உறவு சிக்கல் குறித்த தீவிரமான படைப்புகள் , சாதி வட்டார படைப்புகள், வரலாற்று படைப்புகள் முதலியவையே வாசகன் மத்தியில் அதிக கவனம் பெறுகின்றன. சிக்கல் இல்லாத ஆனால் சாதாரண வாழ்வின் கணங்கள் அவதனிப்புகள்  தற்கால இலக்கியத்தில் மிகவும் அரிதாகவே இடம் பெறுகின்றன, "தனி வழி"  அப்படிபட்ட  பொதுப்படைப்பாக அமைந்துள்ளது.


Friday, June 26, 2020

காற்றோவியம் - ரா கிரிதரன்

அன்புள்ள கிரிதரன் அவர்களுக்கு,

காற்றோவியம் புத்தகம் வாசித்தேன், தங்கள் பரந்துப்பட்ட இசை அனுபவம் மிகவும் சிறப்பு , அடிப்படைகள் முதல் சாதனைகள் வரை உங்களுக்கு விஷயம் புரிந்திருக்கிறது, சம கால ஆளுமைகள் குறித்து நீங்கள் எழுத வேண்டும்.

நான் இன்று வரை வெறும் இசை நுகர்வோனாகவே இருந்து வருகிறேன், முதல் அறிமுகம், எஸ்ரா ஒரு கட்டுரையில் "tchaikovsky" waltz of flowers இசை தட்டு ஒன்றை gramaphone வழியாக, ஒரு வாழ்ந்து முடிந்த வீட்டில், கேட்டதை பற்றிக் குறிப்பிட்டிருப்பார், சுவற்றில் மலர்கள் மலர்ந்தது போல் இருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

ஒரு எளிய இலக்கிய வாசகனாகவே இந்தப் புத்தகத்தை வாசித்தேன், மனதுக்கு நெருக்கமானதாக  இருந்தது pau casals மற்றும் zubin mehta கட்டுரைகள், pau casals அந்த மலையடிவார கிராமத்தில் இருந்து கொண்டு போரிலிருந்து தப்பி வரும் மக்களை எதிர் கொண்டு வினவும் சித்திரம் அவர் வாழ்நாள் சாதனையின் குறியீடு போல் அமைந்துவிட்டது , வடிவ தேர்வின் மூலம் zubin mehta குறித்த கட்டுரை மனதை பாதித்தது, குறிப்பாக அவர் தந்தையின் வாசனையை உணரும் தருணங்களை நீங்கள் அமைத்திருக்கும் விதம் இசை பொழிவின் நடுவில் நாம் ரசிக்கும் நிசப்தத்தை நினைவூட்டும் கணங்கள் 

சில கட்டுரைகள் விஷயம் தெரிந்தவர்களுக்கானது , என் தலைக்கு மேலே சென்று விட்டது, நீங்கள் இதற்கு மேல் எளிமையாக்க முடியாது, மீண்டும் படிக்க வேண்டும் 

அன்புடன்
மணிகண்டன்




Monday, June 22, 2020

மனம் - பெரியசாமி தூரன்

அறிமுக நூல்களை படிக்கையில் அடுத்து அடுத்து புதிய கலைச்சொற்கள் தோன்றியபடி இருந்து வாசிப்பவர் மலைத்து போவும் விதமாக அமைந்து இருக்கும் ஆனால் தூரன் அவர்கள் நூல்களில் குறைவான அளவே புதிது புதிதாக கலைச்சொற்கள் வருகின்றன,அதே நேரத்தில் மீண்டும் மீண்டும் அந்த ஒரு கலை சொல் குறித்த விளக்கம் வெவ்வேறு இடங்களில் வந்தபடியே இருக்கிறது. இந்த நடைத்தேர்வின் மூலம் விஷயங்களின் அடிப்படை குறித்த தெளிவான புரிதல் கிடைக்கிறது. 


எளிமையான விளக்கங்களின் இன்னொரு ஆபத்து சிக்கலான நுட்பமான இடங்களை எவ்வாறு விவரிப்பது என்பது ? அத்தகைய இடங்களில் தூரன் விஷயங்கள் அவ்வளவு எளிமை அல்ல என்று வெளிப்படையாக ஒப்பு கொள்கிறார், அதே நேரத்தில் பல்வேறு கோணங்களில் அவ்விஷயம் எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பதை விவரிக்கிறார், " என்று கூறுவாறும் உண்டு" , என்று கூறுவாறும் உண்டு"  என பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவுகளை கோடிட்டு காட்டி  விஷயத்தின் நுட்பங்களை எடுத்துரைக்கிறார்.

விஷயத்தின் தோற்று வாய் குறித்து தொடங்கி மேலும் விவரிக்க அவ்விஷயம் தொடர்ந்து எப்படி பயணப்பட்டு வருகிறது என்பதை கவனமாக பதிவு செய்கிறார் , குறிப்பிட்ட நபரையோ, சாராம்சத்தையோ தூக்கிப் பிடிக்காது, அவ்விஷயம் குறித்த புரிதலில் ஏற்பட்டுள்ள கால வாரியான மாறுதல்கள்,  அவ்விஷயம் குறித்த வெவ்வேறு நபர்களின்  பார்வைகளை குறித்து கூறி அவ்விஷயத்தை முழுமையாக புரிந்து கொள்ள உதவுகிறார்.

எப்படி  மன ஆராய்ச்சி துறையில் ஒரு சிறிய புரிதலை அடைய தொடர் ஆராய்ச்சிகளும், தரவுகள் சேகரித்தலும், பல்வேறு நபர்களின் பங்களிப்பும் கூடி வருகிறது என்பது இந்நூலை வாசிக்கையில் புலனாகிறது.
________

கநாசு " பிராய்ட் கும்பல்" என்று எழுதியதை வாசித்தது நினைவில் இருக்கிறது , இது மனதில் எப்படியோ தங்கி விட்டது, பிராய்ட் குறித்த விட்டேத்தியான மனநிலையை தோற்றுவித்துவிட்டது, தொடர்ந்து டாக்டர் ஷாலினி கூறி வரும் விளக்கங்கள் என்னுள் ஒரு வித ஒவ்வாமையை ஏற்படுத்தியது,  இந்நிலையில் தான் பிராய்ட் கூறிய பெரும்பாலான கருத்துக்கள் தாங்கிய பெ தூரன் அவர்கள் எழுதிய மனம் குறித்த நூல்களை வாசிக்க நேரிட்டது ,இந்த ஒவ்வாமை பாலுணர்வு சார்ந்தது , அனைத்து மன சிக்கல்களுக்கும் பாலுணர்வே அடிப்படை என்பது பிராய்ட் சித்தாந்தம், இங்கே ஒரு சிறிய பெயில் விண்ணப்பம் உண்டு, பாலுணர்வு என்பது காமம் சார்ந்தது மட்டுமல்ல அன்பும் சேர்ந்தது தான் அது என்று பிராய்ட் கூறியதாக தூரன் எழுதி இருப்பது. எனது இந்த ஒவ்வாமை க்கு  வலு சேர்க்கும் விதமாக எந்த அறிவியல் தரப்பு இருப்பதாக நான் முன்னர் அறிந்தத்தில்லை ஆனால் தூரனின் நூல்கள் வழி அட்லெர் மற்றும் யுங் பரிச்சயம் ஆகிறார்கள், archetype யுங் என்று அரைகுறையாக தெரிந்திருந்தாலும் பிராய்ட் அவர்களின் தொடர்ச்சியாய் அட்லெர் மற்றும் யுங் வருகிறார்கள் என்பது இந்நூல் வழியே தெரியவந்தது, பிராய்ட் பாலுணர்வை இன்னொரு வகையில் லிபிடோ என்றும் இத் Id என்றும் கூறுகிறார். யுங் லிபிடோ காம இச்சைகள் மட்டும் நிறைந்த இடம் கிடையாது என்றும் மூதாதையர் சரடு மற்றும் ஆற்றலின் உறைவிடம் என்றும் கருதினார் , இப்படி புரிந்து கொண்டேன் காமம் அல்லாத நடவடிக்கைகள் மூலம் நாம் லிபிடோ வை ஆற்றுப்படுத்த முடியும் இத் ன் இச்சைகளை ஆற்று படுத்த முடியும், 

இவ்விடங்களில் இரு இலக்கிய துணுக்குகள் , தி ஜானகிராமனின் "சக்தி வைத்தியம்" சிறுகதை , சில நாடுகளில் தாயை கண்டே பிள்ளைகள் பாலுணர்வை அறிந்து கொள்ள துவங்குவது குறித்து நான் எங்கோ படித்த ஞாபகம். .இரண்டும் இரு எல்லைகள்.யுங் மற்றும் பிராய்ட் குறித்து புரிந்து கொள்ள இவை உதவும். சக்தி வைத்தியம் கதையில் அடங்காது கத்தி கொண்டே இருக்கும் சிறுவனுக்கு ஓவியத்தை பரிந்துரைத்து லிபிடோவை ஆற்றுப்படுத்தும்  திறமையான ஆசிரியரை , அவரது தாய், ஆசிரியர்த்தனத்தை கணக்கில் கொள்ளாது அவருக்கு சமைக்க தெரியாது என்ற புள்ளியின் வழி எடைபோடுவார் , ஆற்றலின் சக்தியின் வழியை அறியும் வண்ணம் அமைந்த கதை. யுங் இந்தியாவிற்கு வந்திருக்கறார், யோகம் குறித்து அறிந்திருக்கிறார்.

அட்லெர் தாழ்வு மனப்பான்மை என்ற புள்ளியில் இருந்து துவங்குகிறார், வாழ்நாள் தொடங்கிய நாள் முதல் பெற்று கொண்டே இருக்கும் குழந்தை திருப்பி கொடுக்க நினைக்கும் எண்ணத்தை உயர்வு உந்துதல் என்று கூறுகிறார், மனம் கொடுக்கும் உயர்வான இடத்தை விரும்பிகிறது, இவ்விஷயம் குறித்து தூரன் இந்நூலில்  பெரிதாக விளக்கவில்லை ஆனால் அட்லெர் குறித்து தாழ்வு மனப்பான்மை என்னும் நூலை எழுதியுள்ளார்.

அதீத அகத்தை  (Super Ego) என்னும் மனதின் ஒரு பகுதியை போலீஸ் ஆசிரியர்  லட்சியம் என்கிற இடத்தில் வைக்கிறார், லிபிடோவை இத்தை (Id)மிருகங்கள் இடத்திலும் அகத்தை (Ego) நடைமுறை மனதின் இடத்திலும் வைக்கிறார், கூத்தாடும் இத்தும் கண்டிக்கும் அதீத அகமும் அகத்தை ஒரு வழி பண்ணுகின்றன. 

Trance திரைப்படம் இக்கோட்பாடுகளை தொட்டு செல்வதாக திரை விமர்சகர் சுதிஷ் காமத் கூறுகிறார் 

சதா நம் மிருக இச்சைகளை மட்டுமே நினைவுபடுத்தி கொண்டிருக்கும் மன பகுப்பாய்வு முறை  அவை சார்ந்த கலைப்படைப்புகள், உலக நிகழ்வுகள் குறித்த குற்ற உணர்வை தூண்டியபடி இருக்கும் அதீத அகம் என்கிற பிணைப்பு நம் காலத்தில் எப்படியோ அமைந்து விட்டது, இவ்விடத்தில் நாம் நம் மூதாதையர் விதித்துள்ள லட்சியம் குறித்து பேச வேண்டி இருக்கிறது, புலனடக்கம் மன ஓட்டத்தை நிறுத்தும் ஆற்றல் இவையே பூமியில் பிறந்தவர்க்கு இலக்காக லட்சியமாக பெரும்பாலும் கிழக்கில் கூறப்படுகிறது
இச்சைகளை ஆற்றுப்படுத்தி குறைத்து, ஆதி பயம், கவலை , நடைமுறை பொய் மூன்றும் பூச்சியமாகி இருக்கும் இடம் தான் லட்சியமான யோக நிலையா என்று அறிய ஆவலாக உள்ளது.

அடிமனம் மற்றும் மனமும் அதன் விளக்கமும் என்கிற இரு நூல்கள் குறித்த மனப்பதிவு இந்தக்கட்டுரை.

Wednesday, June 17, 2020

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - சி மோகன்





அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,

வணக்கம்

தங்களின் மேற்கண்ட நூலை வாசித்தேன் மிக மிக சிறப்பான அறிமுகமாக இருந்தது. இந்த புத்தகம் கட்டமைந்திருக்கும் விதம் அருமை. முன்பு கூறியவற்றையே அடுத்த அத்தியாயங்களில் சேர்த்து சேர்த்து கூறியிருக்கும் விதம், நவீன ஓவியத்தின் அறிமுக சித்திரம் வாசிப்பவர் மனதில் நன்கு பதிகிறது. இப்போது நான் கூட நவீன ஓவியங்கள் குறித்து நண்பர்களிடம் உதார் விட முடியும் நிற்க. கலைக்கும் கலை தோன்றும் ஊற்றுக்கண் குறித்தும் நீங்கள் அழகாக வரலாற்று பின்புலத்துடன் இணைத்து எழுதியுள்ளீர்கள் .

புகைப்படத்தின் சவாலை எதிர் கொண்டு உள்முகமாக பயணம் தொடங்கினாலும் அது வரை நடந்த புற நிகழ்வுகளையும் கருத்தில் கொண்டு நவீன ஓவியம் பயணப்பட்டு இருக்கிறது - எளிமையான புறப்பொருள் , இயற்கை, மன எழுச்சி, தொன்மங்கள் , சமகால நிகழ்விற்கு எதிர்வினை ,கூட்டு நனவிலி, கனவு,அரூபம் என அகத்தில் தொடங்கி புறத்திற்கு எதிர்வினை ஆற்றி மீண்டும் ஆழ்மனதில் அத்தனை கேள்விகளுக்கும் விடை தேட முயல்கிறது.

ஜாக்சன் பொலாக் இன்று ஒரு நவீன மனிதன் நிற்கும் இடம் என்று நினைக்கிறேன் அப்பெரிய ஆளுமைக்கு வெளிப்பாடு சாத்தியமாகி இருக்கிறது ,சரியாக வெளிப்படுத்த தெரியாத இயலாத நவீன மனிதன் என்ன செய்வான் ?

ஜாக்சன் பொலாக் குறித்து எனக்கு முன்பே தெரியாது. ஆனால் ஏதோ ஒரு வகையில் பழைய விஷயங்களை அறவே தவிர்த்து தனி மனிதன் மட்டும் மதிப்பிடப்படும்  புதிய உலகை நிர்மாணம் செய்த, செய்து கொண்டிருக்கும் அமெரிக்காவின் சித்திரம் வந்தது. கூட்டம் கூட்டமாய் வாழ்ந்த, வாழ்ந்து வரும் நம் சமூகம் தனி மனிதன்  என்ற இந்த கோட்பாட்டிற்கு அளிக்கும் எதிர்வினையே நம் சமகால வரலாறு என்று புரிந்து கொள்ள முயல்கிறேன்.

இங்கே உதாரண புருஷர்கள் குறித்து சொல்லப்படுகிறது வில்லன்கள் குறித்து கூறப்பட்டு வருகிறது ஆனால் அனைவரும் கிட்டத்தட்ட ஒன்று தான் என எந்திரமும் சொல்கிறது அத்வைதமும் சொல்கிறது. இரண்டுக்கும் இடையில் ரசனையான வாழ்வு இருக்கிறது. ஷங்கர் ராமசுப்ரமணியன் சொல்வது போல "கடைசிக்கு முந்திய ஸ்டாப்பில்" இறங்கத் தெரிய வேண்டும் . 

சிறப்பான நூல் - நீங்கள் கூறியிருப்பது போல படிக்கும் வாசகன் மேலும் முன்னெடுத்து செல்ல வேண்டும். நீங்கள் வழிகாட்டியுள்ளீர்கள்.

அன்புடன்,
மணிகண்டன்

Saturday, June 13, 2020

புட்டன்ப்ரூக்ஸ்


சிதைவின் கதை- புட்டன்புரூக்ஸ் 

https://www.jeyamohan.in/133508/



அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம் 

புட்டன்ப்ரூக்ஸ் - எழுதப்பட்டு நூறாண்டுகள் கடந்து விட்டது - கதையின் காலகட்டம் இன்றிலிருந்து ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகள் பிந்தையது - தங்கள் தளத்தில் வந்த கட்டுரையே இந்த நாவலை வாசிக்க தூண்டியது .

வாசித்து முடிக்கையில் ஒரு வித சோகமான சோர்வான மனநிலையை அடைந்தேன், பெரிதாக திருப்பங்கள் எதுவும் இல்லை  , நாடகீய தருணங்கள் சிறிதளவு  கூட இல்லை, கண் முன்னே ஒரு எழுபதாண்டு காலம் நடைபெறுகிறது , கால பிரவாகத்தை, விதியின் கோலத்தை,  ஆசிரியரின் சிறிய அழகிய சொற்றொடர்கள் வழி அடிக்குறிப்புகள் போல் சொல்லியபடி வாசித்து முடித்தேன், வாசித்து முடிக்கையில் இறுதிப்பகுதி மிகவும் பூடகமாகவும் மொத்த நாவலின் மவுடீகத்தை சற்றே நீக்கி வெளிச்சம் பாய்ச்சுவது போலவும் இருந்தது .

தாத்தா தொடங்கி, மகன் பேரன் கொள்ளுப்பேரன் காலம் வரை செல்லும் இந்த நாவல் எந்த ஒரு தனி மனிதனின் தோற்றத்தை விவரிக்க வெகுவாக மெனக்கெடுகிறது , சிறிய ஆடை மடிப்புகள் தொடங்கி , அணிந்திருக்கும் அங்கியின் தரம் என்ன என்பது வரை நிறைய மெனக்கெடல்கள் , மீண்டும் மீண்டும் உடை குறித்து விவரணைகள் வந்த வண்ணம் இருந்தது , புகைப்படம் குறித்தோ , உருவப்படம் குறித்தோ பெரிய குறிப்புகள் இல்லை 

ஏன் இப்படி இக்குடும்பத்தின் வளமை குன்றுகிறது என்ற கேள்விக்கு பதிலாக நாவலின் காலகட்டத்தில் நிகழும் அரசியல் மாற்றம் , இப்பெரும் குடும்பம் அவ்வரசியல் மாற்றத்தை பெருமளவு சரியாக புரிந்த கொள்ளவில்லையோ என்று ஒரு இழை , வழி வழியாக வியாபாரம் செய்து வரும் ஜேர்மன் குடும்பங்கள் யூதர்களுக்கோ இன்னபிற வணிக குடும்பங்களின் ஆதிக்கத்தில் எப்படி சரிந்தன என்று ஒரு இழை, தாத்தாவின் ஆளுமை மகனுக்கு இல்லை , பேரன் அப்பாவை போல் இருந்தாலும் சிறிய பிசிறு , கொள்ளுப்பேரன் முற்றிலும் வேறு வார்ப்பு என்னும் ஆளுமை சிக்கல்கள் என்று ஒரு இழை , விதிவசத்தால் வீட்டின் பெண்கள் துயரறுகையில் குடும்பம் எவ்வாறு சிறிது சிறிதாக வளமை குன்றியதாக ஆகிறது என்னும் ஒரு இழை , 

அனைத்தும் மிகவும் மௌடீகமாகவே சொல்லப்படுகிறது , ஆனால் இரு விஷயங்கள் கொஞ்சம் அடிக்கோடிட்டு சொல்லப்படுகிறது - தாமஸ் - கெர்டா இருவரின் ஆளுமை வேறுபாடுகள் ,தாமஸ் எனக்கு மிகவும் பிடித்த கதாப்பாத்திரம் , தன் ஆளுமையின் எல்லையை உணர்ந்திருந்தான் , கெர்டா உடனான ஆளுமை வேறுபாடுகள் எவற்றையும் சரி செய்ய கூடிய காலம் கடந்தமையை உணர்கிறான், தன் எல்லைக்குட்பட்டதை செய்து முடிக்கிறான் , கெர்டாவின் இசை ஆளுமை கூட மீண்டும் மீண்டும் பயில்விக்கப்பட்ட ஒரு விஷயம் போல எந்திர தன்மையானதாக இருக்கிறது - குட்டி யோஹான் தன் சுபாவம் வழி தந்தையை மறுதலிக்கிறான் , இசை ஆளுமை வழி தன் தாயையும் மறுதலிக்கிறான் - எடுத்தியம்ப இயலாததான துயரத்தை இசை வழி வெளிப்படுத்துகிறான் - நாவலின் மௌடீகம் இந்த இடத்தில சற்றே கலைகிறது

எது வீழ்ச்சி ஒரு எளிய உயிரின் தவிப்பை உணர முடியாத இயந்திரமாக வணிகமும் இசையும் மாறிவிட்டதா ? இயந்திரமும் இசையும் என்ற  புள்ளியில் இருந்தே நாம் குட்டி யோஹனின் பள்ளிக்கூட நாளை அணுக வேண்டும் ஒரு நாள் பள்ளி வகுப்புகளின் அட்டகாசமான விவரிப்புகளுடன் அமைந்துள்ள இப்பகுதி ஒரு அறைகூவல் -  தற்போது வெளிவந்த "சைக்கோ" திரைப்படத்தில் இந்த நாவலின் தாக்கத்தை காணலாம் , 

மதம் தன் பிடிமானத்தை இறுக்குகையில் , அறிவியல் இயந்திரம் எந்த அளவில் கல்வியின் கூறுகளை மாற்றியமைத்திருக்கிறது என்று எண்ணுகையில் மதமும் அறிவியலும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என புலனாகிறது  , பரஸ்பர விடைகள் முரண்கள் இருந்தும்  , ஒரு வித நிச்சயத்தை சார்பாக வைத்து இரண்டுமே வளர்கின்றன , இந்த நிச்சயம் மதம் வழி கல்வி விஷயத்திலும் , அதே நிச்சயம் அறிவியல்  இயந்திரத்தின் அலகாக கல்வியை ஆக்குகிறது , இங்கே குட்டி யோஹான் போன்ற குழந்தையின் அழுகை செசெமி டீச்சரின் குரல் கேட்டவுடன் அடங்குகிறது .நூற்றைம்பது ஆண்டுகள் தாண்டி அத்தனை இசை இயந்திரர்களையும் தாண்டி யோஹனின் குரல் பீத்தோவன் இசை வழி நம்மை வந்தடைகிறது.

இயந்திரங்களின் ஒத்திசைவு மனிதனை ஒரு அலகாக்குகிறது, இசையின் ஒத்திசைவு அம்மனிதனின் வெறுமையை, கண்ணீரை ஓரளவேனும் ஆற்றுப்படுத்துகிறது.

அன்புடன்,
மணிகண்டன் 

இரண்டு தந்தையர்

அன்புள்ள சுந்தர் சருக்கை அவர்களுக்கு,

அன்புள்ள சீனிவாச ராமாநுஜம் அவர்களுக்கு,

வணக்கங்கள்

இரண்டு தந்தையர் நல்லதொரு வாசிப்பு அனுபவமாக இருந்தது ,நன்றி.

மூன்று நாடகங்களையும் இருமைகளின் நடனம் என குறிப்பிட விரும்புகிறேன்  - அறிவுஜீவி Vs சாமான்யர் , கிழக்கு Vs மேற்கு ,வெள்ளையர் vs  ஏனையர், குடும்பம் Vs தனிமனிதன் , அன்பு Vs கட்டுப்பாடு , பழைமை Vs புதுமை , தந்தை vs மகன் , அறிவியல் vs ஆன்மிகம், கூர்மை vs முழுமை , உண்மைகள் vs  பாவனைகள் , அழகு vs அசிங்கம் , பிம்பம் vs நிழல் , லட்சியம் / கனவு   vs செயல்பாடு என வாசகனை ஊஞ்சலாட அழைக்கிறது.

ஹார்ட்டியின் மன்னிப்பு என்பது ஹார்டியின் நியாயப்பாடு என்று மாறியிருக்கிறது.
இது ஹார்டியின் உலகப் பார்வையின் இறுக்கத்தை தெளிவுபடுத்துகிறது.

எல்லா உண்மைகளையும் அறிந்தவராக ஹார்டி இருக்கிறார் 
ஐன்ஸ்டீன்  உண்மையை உணர்ந்திருந்தாலும் ஒப்பு கொள்ள மனம் இல்லாதவராக மாறி விட்டிருந்தார். காந்தி மீண்டும் மீண்டும் மறுபரிசீலனை செய்து சுற்றியிருப்பவர்களை திகைக்க வைக்கிறார். 

ஜானகி தனக்கு எந்தக் குறையும் இல்லை எனக்  கூறுகிறார்
லீசர்ல் தொடர்ந்து தன் தந்தையை குற்றம் சுமத்தியபடியே இருக்கிறாள்
ஹரிலால் தனது பாவனைகளை தானே முன் வந்து களைகிறான்.

மனதுக்கு நெருக்கமானதும் மிகுந்த தத்தளிப்புக்கு உள்ளானது ராமானுஜம் அவர்கள் தான் - தனது மேதைமையை உணர்ந்திருந்தார் - மேதைமை குறித்த அலட்டல் இல்லை - மனைவியின் அன்பிற்காக ஏங்கினார் - தாய் சொல்லை தட்டவில்லை - ஹார்டியின் உறவை மதித்தார் - சாமானியர்களை குறித்து அறிந்திருந்தார் ஆனால் காழ்ப்பு இல்லை - தன் ஆளுமையையும் விட்டுக் கொடுக்காது தான் மனம் பிறழந்தவன் இல்லை எனவும் அதே நேரத்தில் ஹார்டியின் மீது எந்தப்  பழியும் வரவேண்டாம் எனவும் நினைத்தார் - நிறவெறியை கூட தன் தோற்றத்தின் மீதான ஒரு விமர்சனமாக மாற்ற முயன்றார் - இருமைகளின் நடனத்தை அவர் சுமந்தார் - அது தாங்க முடியாததாக இருந்தது.

காந்தி குறித்து ராமானுஜம் அவர்கள் என்ன அபிப்ராயம் வைத்திருந்தார் என்று தெரியவில்லை - இதே போலத் தானே ரயிலிருந்து கீழே தள்ளி விடப்பட்டிருப்பார் காந்தி - அது வரலாற்றை  மாற்றியதை நாம் அறிவோம். நவீனத்தின் எல்லா தத்தளிப்பிற்கும் காந்தியிடம் விடை உள்ளது - நசுக்க முடியாத ஒரு மன எறும்பு. நடந்து கொண்டே இருப்பது ,உள்ளே  ஊர்ந்தபடி அவ்வப்போது சுருக் என்று கடித்தபடி தற்சுட்டி திகைக்க வைப்பது.

 அன்புடன்
மணிகண்டன்