Sunday, December 27, 2020

புது வீடு புது உலகம் - கு அழகிரி சாமி

கு அழகிரிசாமி அவர்களின் இந்த நாவல் முதலில் சுதேசிமித்ரனில் தொடராக வந்து 2018ல் தான் முதல் முறையாக நாவலாக வெளிவந்துள்ளது. மிகக் குறைந்த புற விவரிப்புகளுடன் மன ஓட்டங்களுக்கும் நிகழ்வுகளும் நிறைந்த பெரிய நாவல். குடும்பத்தின் வறிய பொருளாதார சூழல் அழுத்தம் காரணமாக பணம் சம்பாதிக்க சரி மற்றும் தவறான வழிகளுக்கு இடையேயான போராட்டம், தனிப்பட்ட ஒருவனின் லட்சியம் குடும்பத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள், லட்சியவாதத்தின் நடைமுறை செல்லுபடி எனும் தளங்களில் நாவலை பொருத்திப் பார்த்து வாசிக்க வாசகனுக்கு வாய்ப்பிருக்கிறது, நாவலின் இலக்கிய உட்பிரதி குறித்து நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய இம்மூன்றுமே. ஜெயகாந்தன் அவர்களின் அக்னிபிரவேசம் அ சிலநேரங்களில் சில மனிதர்கள் கதையை இணைத்து வாசிக்கத் தகுந்த படைப்பு புது வீடு புது உலகம் - ஜெகே அவர்களின் ஆர்பாட்டமான மொழியில் அமைந்த சிலநேரங்களில் சில மனிதர்கள் நாவலின் முன் சன்னமான குரலில் ஆனால் அதே தளத்தில் அமைந்துள்ளது புது வீடு புது உலகம் நாவல், தனிப்பட்ட ஒருவனின் சுதந்திரத்தை மட்டும் மையப்படுத்தாது சரி தவறு என்ற மனப்போராட்டத்தின் வீச்சையும் , லட்சியவாதம் மீண்டும் மீண்டும் வந்து சீண்டும சலிப்பான இடங்களையும் தொட்டு செல்கிறது.

பாகீரதியின் மதியம் - பா வெங்கடேசன்

https://solvanam.com/2020/09/12/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0/ பாகீரதியின் மதியம் வாசித்து முடிக்கையில் , அவ்வளவு தானா முடிந்து விட்டதா என்று நம்ப முடியாமல் திரும்ப கடைசி அத்தியாயத்தின் சிலப்பக்கங்களை வாசித்தபடியே இருந்தேன் , ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்த நிகழ்வுகளின் சரத்தையும் , அந்த நிகழ்வுகளை சதா உந்தி கொண்டே இருக்கும் கனவுகளின் வலியையும், வசீகரத்தையும் மனதில் பதிய வைக்க முயன்றபடி இருந்தேன்,நாவலின் மைய சரடு என்ன ? நாவலின் முடிவு உணர்த்துவது என்ன ? நாவல் கூற விரும்பும் கருத்துக்கள் என்ன ? போன்ற டெம்ப்லேட் கேள்விகள் மனதில் எழுந்த வண்ணம் இருந்தன. நாவலின் அசாதாரணமான கேன்வாஸ் ஒரு மையத்தில் நாவலை பற்றிய ஒற்றை கருத்தை அடையவிடாது அலைக்கழித்தபடியே இருந்தது., ஒரு பிராமணனுக்கும் திராவிடர் கழகத்தை சேர்ந்தவனுக்குமானா பெரியார் குறித்த ஒரு உரையாடல் (“இறை மற்றும் இறைமை என்பதன் விண்டு சொல்ல முடியாத அனுபவத்தை ஈவெரா தெரிந்து தான் வைத்திருந்தார் ... என்று இவனும் இறையனுபவம் என்று பிதற்றப்படுவதெல்லாமுமே சூழலால் திணிக்கப்பெறும் அறிவின்பாற் பட்டது என்று அவனும் …” ),ஒரு ஓவியனின் வாழ்நாள் படைப்புகளின் சாரத்தை அறியும் முயற்சி, காதலின் உன்மத்த தனிமையை நீடிக்க விரும்பும் உயிர்களின் அவஸ்தை, பெண் விடுதலை குறித்த ஒரு அறைகூவல் , மனித சமூகமாக நாம் தேர்ந்தெடுத்த பாதையை குறித்த ஒரு விசாரம்,( “சமவெளி மனிதர்கள் தந்திரசாலிகள் ... வர்க்கங்களை ஒழிப்பதும் சாதிகளை ஒழிப்பதும் காடுகளை ஒழிக்கும் குற்றவுணர்விலிருந்து தங்களைத் தப்புவித்துக் கொள்ளும் பிரயத்தனமேயன்றி வேறொன்று என்பதாக நான் நினைக்கவில்லை “) அரசியல் கோட்பாடுகள் சூழ்நிலைகள் தனிமனித விருப்பு வெறுப்புகளுடன் இணைந்து உருவாக்கும் விளைவுகள், கலைவெற்றி Vs களசெயல்பாடு என்கிற இரண்டும் விளிம்புநிலை மக்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த ஒரு பார்வை (“நம்பிக்கை களப்பணியென்றால் அவநம்பிக்கை கலையின் ஆதாரம் ) (உலகத்தின் கண்களுக்குக் தன் மக்களின் எந்த முகத்தைக் காண்பிக்க வேண்டுமென்பதை தேர்ந்து கொள்ளும் சுதந்திரமும் அவனுக்கு தேவைப்படுகிறது. உண்மையான கலைஞன் தன் ஜனங்களை ஒரு போதும் கைவிடுவதில்லை என்பதை ஜனங்கள் நம்ப வேண்டும். அழகை மட்டும் தேர்ந்து கொண்டு அவலத்தை அவன் மறைக்கிறானென்பதல்ல அவனுடைய அழகியலின் அடிப்படை, மாறாக எந்த அவலத்தினுள்ளிலிருந்தும் மரணத்தின் விளிம்பிலிருந்தும் ஒரு மின் வெட்டைப் போல மின்னி தெறிக்கும் அழகை இனங்கண்டுகொண்டுவிடும் நிதானம் தான் ஒரு கலைஞனுக்குரிய தகுதியாக அவனுக்குக் கடவுளால் அருளப் பட்டிருக்கிறது என்பது தான் அதன் அர்த்தம்”) கிளைக்கதைகள் கூறும் அற்புதமான கதையாடல்கள், நினைவுகள், என்று பல தரப்பட்ட கோணங்களில் இந்த புதினத்தை நாம் அணுக முடியும். நாவலின் நடை தாண்டவராயன் கதையை போலவே நீண்ட நீண்ட வாக்கியங்கள், முதலில் கொஞ்சம் தடுமாறி ,இழுத்து பற்றுகையில், கடற்கரை குதிரை சவாரி போன்று மிதமான வேகத்தில் சென்றபடி துவங்கிய இடத்திற்கே திரும்ப வந்து, மீண்டும் வெவ்வேறு பாதைகள் பற்றி முற்றிலும் புதியதோர் கனவினை கண்டு நீண்டு கொண்டே சென்ற ஒரு முடிவில்லாத பயணம். விவாதம் -நாவலின் நெடுக வரும் சரடு விவாதத்தன்மை.பல்வேறு இடங்களில் இரு கதாப்பாத்திரங்கள் தங்களுக்குள் உணர்ச்சிகரமான ஆழ்ந்த விவாதங்களில் ஈடுபடத் துவங்குகின்றனர் , நாவலின் விஸ்தாரமான கதைக்களத்தை இந்த உரையாடல்கள் வழி மேலும் நெருங்க முடிகிறது வாசுதேவன் - உறங்காப்புலி பெரியாரை குறித்து விவாதித்தல் , வாசுதேவன் - ஹாலாஸ்யம் பெரியார் குறித்த விவாதம் (“சாதி - உணவு ,உடை, வாழ்முறை ,பாஷை ,சிந்தனை அனைத்திலும் ஒரு தனித்துவத்தை கொடுத்திருக்கிறது , சாதியை இழக்கிறேனென்று ஏன் இத்தனையையும் இழந்து சரித்திரமற்றவனாக வேண்டும் “), வாசுதேவன் - பாகீரதி "பெண்" குறித்து பேசுமிடங்கள், (“திருட்டு எலியை பிடிக்கும் விளையாட்டாகத் தானே எப்போதுமே அமைவது வழக்கம் .... ஆனால் .. அது நேருக்கு நேராக ஒரு புலியை சந்திக்கும் சம்பவமாக இருக்கிறது , அது தைரியமாக அவன் முன் நின்று தன் இருப்பை அறிவிக்கிறது அதற்கான நியாயத்தை சொல்கிறது”)உறங்காப்புலி - சவிதா தேவி பகிர்ந்து கொள்ளும் காதல் நினைவுகள், உறங்காப்புலி - இங்களய்யா உரையாடல்கள் , விபின் பஸ்வான் உறங்காப்புலியிடம் சவிதா தேவி குறித்து கூறுவது , வாசுதேவன் ஓவியர் ஆதிமூலம் சந்திப்பு(“சுருக்கங்களினால் பிடிவாதத்தையும் நிழலினால் தப்பித்தலையும் சட்டையற்ற உடலினால் நினைவுகளோடான நெருக்கத்தையும் கோடுகளினால் மனித நேயத்தையும் அந்த மனித உருவம் வெளிப்படுத்திக் கொண்டிருப்பதாகக் கூறி.”.)என பல குறிப்பிடும்படியான விவாதங்கள் நாவலை அதன் கட்டற்ற கதைகளின் வண்ணங்களை ஒருங்கிணைத்து புரிந்து கொள்ள வாசகனுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது, இல்லையென்றால் அந்த கட்டற்ற கதைகளின் பாதைகளில் அவன் தொலைந்து விடக்கூடும். தருணங்கள்- இன்னவென்று குறிப்பிட்டு சொல்ல முடியாத உணர்வுகள் மற்றும் , பகுத்தறிவு இன்னதென்று வரையறுக்க முடியாத அபூர்வ உணர்வுகள் குறித்து இந்த நாவல் எண்ணிப் பார்க்கிறது, குறிப்பாக காதல். பகுத்தறிவு காதலை வரையறுக்க முயல்கையில் தோல்வியுறுவதாகவே ஆசிரியர் கூறுகிறார்,( “அது வரை அவரால் ஆபாசம் என்று விமர்சிக்கப் பட்டு கொண்டிருந்த புராணங்களிலும் சரித்திரங்களிலும் நிகழ்ந்த எந்த ஒரு மாபெரும் நிகழ்வையும் போலவே திமுக என்கிற ஒரு பெரும் அரசியல் நிகழ்வுக்குக் காரணமாயிருந்த ஒரு மகத்தான காதலின் புதிர்….”) மேலும் அந்த காதல் கிளர்த்தும் பகுத்தறிவால், பைத்தியக்காரத்தனம் என்று வரையறுக்கப்படும் அனைத்து செயல்களையும் அலைச்சல்களையும் மதிப்பான ஒரு இடத்தில வைக்கிறார், காரண காரியங்கள் தாண்டியும் சில விஷயங்கள் ஒருவருக்கு உயிராக இருக்க முடியும் என்றும் , அவ்விஷயங்களுக்காக எத்தகைய எல்லை வரையும் எந்த எதிர்பார்ப்புமின்றி மனிதன் முயல்வான் என்பதையும் கதையின் போக்கில் நாம் உணர்கிறோம்.அந்த தருணங்கள் குறித்து ஒரு வித பயத்துடனும் அனுமானங்களுடனும் கதாபாத்திரங்கள் நினைவு கூறுகின்றன , "இப்படி தான் நினைத்தேன்", என்னை மீறிய ஒரு உணர்வு என்றும் என்றோ நடந்த நிகழ்வுகளை பல வருடங்கள் தாண்டி ஒரு சிறிய தருணம் மீண்டும் கிளறுகையில் கதாபாத்திரங்கள் வார்த்தைகளில் புகலிடம் தேடுவது வியர்த்தம் என்ற முடிவுக்கு வந்து அற்புதம் என்றோ பயங்கரம் என்றோ நினைவு கூறுகின்றனர்.( “மதுபானி ஓவியங்கள் குறித்து - " பார்த்தாயா ஜெமினி .. நாம் பொத்தி பொத்தி பாதுகாத்து வைத்திருக்கும் கலை எத்தனை சாதாரணமாக சளியும் கரிப்புகையும் தீற்றிக்கொள்ளும் சுவர்களில் பெரிய பெரிய பூகம்பங்களைத் தாண்டித் தப்பித்து மூச்சு விட்டு கொண்டிருக்கின்றன பார் என்றார் பில் துரை”),.. (ஜெமினி .. ஆயிரக்கணக்கான புத்தகங்களில் ஒன்றை கூட பிரதிபலிக்காத புத்தம் புதியதான சித்திர புதையலின் முன் சற்றும் எதிர்பாராத வெட்ட வெளியில் திடீரென்று கண் கூச நின்று விட்ட திகைப்பிலிருந்து மீள முடியாதவனாயிருந்தான்”), ( “துஸ்ஸாத் ஓவியங்கள் முன் "அவன் கண் முன் குட்டி சுவர்களில் கரித்துண்டுகளால் இழுக்கப்பட்டிருந்தவை நினைவு தெரிந்த நாளிலிருந்து தன் தகப்பன் முதுகில் வாங்கிய சவுக்கடி தழும்புகளுடன் உடல் நாற நாற மாடுகளை ஒட்டி கொண்டிருந்த வயல்வெளியின் வெறுப்பூட்டும் பச்சை விளைச்சலுக்கு நடுவிலும் வீட்டினுள் இறைந்து கிடைக்கும் உடைசல் மண் கலையங்களின் விளிம்புகளில் ஊர்ந்து கொண்டிருந்த புழுக்களின் எலும்பற்ற உடல்களிலும் , சாணியை தெளித்துத் தெளித்துக் களிம்பேறிப் பிசுபிசுத்துக் கொண்டேயிருந்த மண் தரையின் பச்சை மணத்திலும் அவன் தேடிக் கொண்டேயிருந்த கோடுகளே தான் ") இருமை விளையாட்டு -விஷயங்களை புரிந்து கொள்ள நமக்கு என்றுமே இந்த இருமை கதையாடல்கள் அவசியமான ஒன்றாக இருக்கிறன , கிழக்கு - மேற்கு , பிராமண -பகுத்தறிவு , ஆண்- பெண் , ஆதிவாசி சமூகம் - வேளாள சமூகம், வேளாள சமூகம் - இயந்திர சமூகம், பகுப்பாய்வது - பூரணமாய் உணர்வது காரணம்- விதி , காந்தி – பெரியார் ("அதே வேளையில் சத்தியாகிரகம் , அஹிம்சை, கதர் என்று அந்த கிழவரின் புத்தியிலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக பிறந்து ப்ரவாகமெடுத்துக் கொண்டேயிருக்கும் கற்பனைகளின் நதியில் துரும்பைப் போல் விழுந்து கை நழுவி போய்கொண்டேயிருக்கும் புத்திரர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே கரையில் நின்று புலம்புவதை தவிர வேறெதுவும் செய்யவியலாதவர்களாயிருந்த லட்சக்கணக்கான இந்திய பெற்றோர்களை ப் போலவே ") , காமம் - காதல் , யதார்த்தம் - கனவு , சிறு தெய்வம் - பெருந்தெய்வம் , மேட்டிமை - விளிம்பு நிலை , அஹிம்சை - ஆயுதம் , இயற்கை - வளர்ச்சி; கலைஞன் - களப்பணியாளன் ,இவ்விரு எல்லைகளும் ஒரு மனிதனுக்கு தேவைக்கேற்ப பயன்படும் கதையாடல்களாக இருந்து கொண்டே இருக்கின்றன. இந்த நாவலில் கதாபாத்திரங்கள் ஒரு எல்லையை மட்டும் தங்கள் பார்வையாய் கொண்டிருக்கையில், நிகழ்வகளின் தடம் மற்றும் அவர் தம் கனவுகளின் உந்துதல் கூடிய விரைவிலேயே அவர்களை மறு எல்லையில் மறுக்க இயலாத வண்ணத்தில் நிறுத்தி, அரற்ற வைத்து அழகு பார்க்கிறது. வாசுதேவனிடத்தில் சீறும் உறங்காப்புலி பாகீரதியினிடத்தில் தோற்கிறான், புகழேந்தியிடம் சவடால் விடும் வாசுதேவன் பிறிதொரு தருணத்தில் தனித்து இருக்கையில் தனது கீழ்மை குறித்து திடுக்கிடுகிறான், ஜமீன்தாரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாத இங்கள்ளயா பிறிதொரு காலத்தில் வேறொரு ஜமீன்தாரிடத்து செய்து கொள்ளும் ஒப்பந்தம், காலாதீதமாய் இருந்து வரும் கோடுகளின் வழி பிரபஞ்சம் அறியும் ஜெமினி என்னும் கலைஞன் குறிப்பிட்ட காலத்தின் கேள்விக்கு பதிலளிக்க இயலாத மௌனம் என இரு எல்லைகளில் வாசகனும் தவிக்க விடப்படுகிறான்.( “ஜமீன்தாருடைய பேச்சே தன் மார்பில் தோட்டாவாய்ப் பாய்ந்து விட்டதை போல மயங்கி விழுந்த இங்கள்ளய்யா அதை பற்றி என்ன நினைக்கிறானென்று நம்மிடம் எதையுமே பகிர்ந்து கொள்ளவில்லையென்பதை கவனித்தாயா , என்னுடைய தூரிகைக்கு அது முக்கியம், அந்த மௌனம் என் கித்தானில் ஒரு வண்ணமாக கரைய வேண்டும்” ) கலைஞன் தன் நுண்ணுணர்வின் வழி வர இருக்கும் காலங்களை குறித்த அனுமானங்களை வைக்கிறான். ஜெமினியின் "மிதக்கும் வண்ணங்கள்" என்று அறியப்படும் அந்த கலை உச்சம் சமூகத்தின் சரிவை , கடந்து வந்த மனிதனின் பாதையின் அபாய விளைவை குறித்ததா? , பாவனைகளை சூடியபடி வெறிக்கூத்தாடிய உறங்காப்புலியின் உடம்பில் வாசுதேவன் கண்ட வண்ணக் கலவை ஒரு வேளை " மிதக்கும் வண்ணங்களோ ?", களப்பணியாளனின் வலிந்து சூடிய அந்த பாவனை என்றென்றும் உண்மையை நெருங்கவியலாத ஒரு வறட்டுத்தனத்தின் எல்லையை , குற்ற உணர்வை மட்டுமே தூண்டவல்ல ஒரு செயல்பாட்டை குறிக்கிறதோ? இங்கிருந்து நாம் உறங்காப்புலியின் கனவில் வரும் உருவக கதைக்கு செல்வோமென்றால் , ஆதி இயற்கையை அந்த மாசற்ற நாட்களை , நிலங்களை, போராபுடிமா என்னும் அந்த ஆதிக்கடவுளின் உருவத்தை இக்காலத்திலிருந்து நாம் பின்னோக்கி நமது பொந்திலிருந்து நம்மை ஒரு பூச்சியாக நாமே பாவித்து ,காண்கையில் ஏற்படும் திடுக்கிடல் ஒரு களப்பணியாளனுக்குரியதா , கலைஞனுக்குரியதா ? (“அவையனைத்தும் நிஜமான ஓரறிவு ஈரறிவு ஜந்துக்களல்ல , எப்போதாவது படையல்களோடு தாக்குருக்கு வந்து இருட்டுக்குள்ளிருக்கும் பெரியவளை சம்பிரதாயமாக உற்றுப் பார்த்து விட்டுத் திரும்பி சென்று விட எத்தனித்த மனிதர்கள் தான் அவை,..”) பத்துக்கும் மேற்பட்ட கிளைக்கதைகள் வழி மைய க் கதை செல்கிறது, தனித்து பார்க்கையில் கூடஅந்த கிளைக்கதைகளின் வீச்சு தன்னளவில் முழுமை கொண்டுள்ளது, ஜெமினியின் இளமை கால ஓவிய பயணம், ஜெமினி ஆதிமூலம் அவர்களின் ஓவியம் குறித்த ஸ்திரமான கருத்துக்களை கூறும் இடங்கள்(“ஜெமினியின் முகத்தை மட்டுமே கவனித்தபடி முன் அவர் (ஆதிமூலம் )கடைபிடித்துக் கொண்டிருந்த மௌனத்தில் , ஒரு கலைஞனுக்கு இன்றியமையாத தேவை என்று ஜெமினி கருதிய பெண் தன்மையுடைய ஸ்ருஷ்டிபூர்வமான, கர்வமில்லாமல், சட்டென எதன்மேலும் வியப்படையத் தன்னை அனுமதித்து கொள்ளும் வெகுளித்தனமும் ( அது அறியாமையல்ல) லஜ்ஜையற்ற அபத்தமான புரிதல்களால் வடிவங்களின் சாரத்தை நேரடியாக தொட்டு விடும் தன்னுணர்வற்ற இயல்பான மேதைமையும் இருந்ததாக அவருக்கு தோன்றியிருக்கிறது “) மதுரை இருப்புப்பாதை போராட்டம் குறித்த விசாரணை கதை, சுருளிநாதனின் மொழி போராட்ட கால காதல் கதை (“தனிப்பட்ட உணர்ச்சிகளின் துணையில்லாமல் ஒரு பொதுப் புரட்சியை நடத்தி விட முடியுமா முடியும் என்று இப்போது தோன்றுகிறது , காந்தி அதை செய்தாரென்றும் நான் நம்புகிறேன்”), ஐராவதம் தனது மகள் பாகீரதி மேல் கொண்டிருந்த பாசம் குறித்த கதை, சாம்புவைய்யர் - அரங்கநாதன் நம்பி உரையாடல்கள்,உறங்காப்புலி - பிரமீளா பெயர் விளையாட்டு உறங்காப்புலியின் விசாரணை நாட்கள் ஆகியவை குறிப்பிடும்படியானதாக இருந்தன. இக்கதைகளின் பின்னணியில்1934 பீகார் பூகம்ப சூழல் , சாருமஜும்தார் கால வங்காளம் , திக திமுக பிரிவு காலங்கள், எமெர்ஜென்சி காலகட்டம் என வரலாற்று நிகழ்வுகள் திரைகளாக அமையப்பெற்று பல்வேறு வரலாற்று சாத்தியங்களை நம் கண் முன்னே எழுகின்றன. கட்டற்ற கதைவெளியை, உரையாடல் மற்றும் அற்புத, பயங்கர ,உணர்ச்சிமிகு தருணங்கள் வழி, வரலாறு என்னும் பின்னணி திரை கொண்டு இணைக்க முயன்று, குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றிருக்கிறது "பாகீரதியின் மதியம்". தற்சுட்டும் ஆன்மீகமும் , இடுக்கண் களையும் கையும் , பங்கிட்டாலும் குறையாத அன்பின் விடுதலை ஊற்றும் இணைந்த ஒரு புறப்பாடு நிகழ்ந்திருக்கிறது.