Wednesday, January 22, 2025

பெரிய மனிதன் - க.நா.சு.

 


அக்கரை சேர பணம் அவசியம் என்பது ஒருவாறு புரிந்து தான் இருக்கிறது, இடையில் வரும் சஞ்சலங்களும் லட்சியங்களும் தீர்வுகளும் பணம் குறித்து அறிந்து கொள்ள உதவுகின்றன.

தனி மனிதன் தொடங்கி மகா பெரிய நாடுகள் வரை பொத்தி பதுக்கி வைக்கப்படும் பணம் அதன் போக்கில் இன்னொரு வழி கண்டு தண்ணீராக ஓடுவதை நாம் பார்த்துக்கொண்டே வருகிறோம். 

பணம் பற்றிய நம் தத்துவ விசாரங்கள் சற்று கலங்கலாகவே இருக்கிறது, பணம் என்றவுடன் நம் மனதில் தோன்றுவது நமது உடனடி தேவைகள், நமது கடன்கள், கூடவே பணம் இருந்தால் நாம் செய்திருக்க கூடிய உதவிகள், பணம் இன்றி நாம் முழுங்கிய அவமானங்கள், பணம் பெற்று தரும் வசதிகள், பணம் என்ற விஷயம் கால ஓட்டத்தில் ஆளுமையாகவோ சொத்தாகவோ பொறுப்பாகவோ அக்கறையாகவோ அன்பாகவோ வெளிப்பட கூடிய பகல் கனவு சாத்தியங்கள், இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று முண்டியடித்து நம் எண்ணங்களை பாதிப்பதால் நம் விசாரம் கலங்கலில் முடிகிறது.

பணம் ஈட்ட நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் பல நேரங்களில் சஞ்சல நிழல்களை தோற்றுவிக்கும் - அப்படியான ஒரு சஞ்சலத்தின் கோட்டு வரைபடம் இந்த குறுநாவல். சஞ்சலம் தீரும் விதமே நாவலின் இறுதிப் புள்ளி. 

நாயகனின் மன சஞ்சலத்தில் தொடங்கி எண்ண கலங்கலின் வழி நாம் பயணித்து இறுதியாக அவரது சஞ்சலம் தீரும்படியாக நாவல் முடிகிறது. சஞ்சலம் உதிர்ந்து தீரும் விதம் வாசகனுக்கு ஏற்க முடியாத ஒன்றாக இருக்கலாம் ஆனால் அவற்றில் இருக்கும் உண்மை கசப்பாகவே இருக்கிறது. நாயகன் மட்டுமல்ல வாசகர்களாகிய நாமும் இவ்வகை தீர்வுகளை சில நேரங்களில் அடைந்திருப்பதே நாம் உணரும் கசப்பிற்கு முக்கியமான காரணம்.

Monday, January 20, 2025

வாராணசி - எம் டி வாசுதேவன் நாயர்

காசியின் செறிவான சில படிமங்களை இணைத்து அமைக்கப்பட்டிருக்கும் நாவல்.  


தனிப்பட்ட மீட்சிக்காக ஏங்கும் கதாநாயகனின் வார்த்தைகளில் அவனது வாழ்க்கை வரலாறு விரிகிறது. தன் செயல்களுக்கு பொறுப்பு ஏற்றும் ஏற்காமலும் தனிமையில் தவிக்கும் நாயகனின் நிலை - நிலை கொள்ளா தொடர் யாத்திரை மேற்கொள்ளும் அவன் ஒரு பார்வையாளனுக்கான இடத்தைப் பெறுகிறான். காமத்தின் குன்றாத தீயின் இயல்பை நெருங்கி அறிந்தவன் இவன். 

மனதில் நிற்கும் இணை கதைகளே காசியின் மொத்த விரிவை நமக்குக் காட்டி தருகிறது. முக்தி பவனின் மேலாளர் ஆகும் ஓம் பிரகாஷ், காசியின் நவீன கால ராஜாவாகும் ராம்லால், புத்தக சுவர்களிடையே தன் வாழ்வை அமைத்துக் கொண்ட நூலகர் சந்திரமௌலி , ஆராய்ச்சியாளர் சுமிதா இவர்களின் இணை கதைகள் என்றும் உள்ள காசியின் நவீன முகங்களாக இந்த நாவலில் அமைந்துள்ளன.

திவோதமன் கதையும் காசிராஜனின் கதைகளும் புராண காசியின் தெய்வக்கதைகளும் காமக்கதைகளும் நாவலுக்கு அழகு சேர்க்கின்றன.

மரணத்தை இயல்பாக்கிய காசி காமத்தையும் அவ்வாறே கருதுகிறது என கொள்ளலாம். 

தத்தளிப்பவர்களுக்கு ஒரு விதமாகவும் தன்னறம் உணர்ந்தவர்களுக்கு வேறு மாதிரியும் காட்சி அளிக்கும் காசி. 

ஆட்டக்காரர்களுக்கு ஒரு மாதிரியும் பார்வையாளர்களுக்கு வேறு விதமாகவும் காட்சி தரும் காசி. 

வெளி உலகத்திற்கு மர்மமும் புதிரும் நிரம்பிய காசி

உள்ளவர்களின் துன்பத்தை ஆற்றுப்படுத்தும் காசி 

பிறவி வாழ்வெனும் துன்பத்தை முடித்து வைக்கும் காசி 

அறிவெனும் அலகால் அளக்க முடியா காசி 

கதைகளும் புராணங்களும் கூறியதில் எஞ்சும் காசி

--

கதையின் வீச்சு குறைவெனினும் சுருங்க சொல்லி இத்தனை வாழ்க்கைகளை பற்றி கூற முடிந்திருப்பதே நாவலின் வெற்றி.

சிற்பி அவர்களின் நல்ல மொழிபெயர்ப்பு.

Wednesday, January 15, 2025

நினைவுகளின் ஊர்வலம்



காசு கஞ்சி குப்பாயம் கள் காமம் என பிரித்து எழுதப்பட்ட சுயசரிதை நினைவு குறிப்புகள். இவ்வாறு பிரித்து இருப்பது நல்லது என்று படுகிறது . ஒன்றின் வழி இன்னொன்று வரும் என்றாலும் அடிப்படையில் இவை வெவ்வேறானவை, ஒன்றை இன்னொன்று நிரப்ப முயன்றாலும் நிரம்பாத ஒன்று நிரம்பாது நிற்கும். 

எம் டி இவற்றை அணுகிய விதத்தில்  நாம் கற்று கொள்ள வேண்டியவை,

- கடும் பற்றாக்குறை நிலவிய தருணங்களில் நாம் வெளிபடுத்த வேண்டிய பெருந்தன்மை, 

-மிஞ்சி கிடைப்பவற்றுள் அமைந்த தேர்வும் ரசனையும் நாமே அமைக்க வேண்டிய பாதையாக தான் இருக்க வேண்டும், 

-மிக குறைவான தேவைகளுடன் நாம் வாழ்ந்து விட முடியும், நாம் செய்ய நினைக்கும் செயலின் ஊக்கத்தில்  முழுகியிருப்பது மட்டுமே நாம் செய்ய வேண்டியது - ஏனையவை காலத்தின் கைகளில் இருக்கும்.கிடைத்த அறைகளில் தங்கி எழுதி கொண்டிருக்கும் எம் டி யின் சித்திரம் என்றும் மனதில் நிற்கும்.

காமம் குறித்த நினைவு குறிப்புகள் இந்த புத்தகத்தில் அநேகம் இல்லை.

2025

 



ஆதிக்குடிமக்களும் ஆல்கஹாலும் (பாகம் 1) - பிரபு தர்மராஜ் 

கெத்சமனி  - பிரிம்யா கிராஸ்வின் 

நினைவுகளின் ஊர்வலம் - எம் டி வாசுதேவன் நாயர் சுயசரிதை குறிப்புகள் - தமிழில் டி எம் ரகுராம் 

வாரணசி - எம் டி வாசுதேவன் நாயர் 

பெரிய மனிதன் - க.நா.சு.

சார்வாகன் கதைகள்

இந்தியா 1944-48 - அசோகமித்திரன்

காண கண் கோடி வேண்டும் - சின்ன அண்ணாமலை

பிருதிவிராஜனின் குதிரை - மனோஜ் தாஸ் , தமிழில் இளம்பாரதி 

காருகுறிச்சியைத் தேடி - லலிதாராம் 

The Survivor Danapani - Gopinath Mohanty 

The Summing up - Somerset Maugham 

முள்ளால் எழுதிய ஓலை - உவேசா