Saturday, January 24, 2026

உள்ளே மாட்டிய சாவி

உள்ளே மாட்டிய சாவி சிறுகதை தொகுப்பு வாசித்து முடித்தேன். இந்த  கதைகளில் திரும்பத் திரும்ப வருகின்ற ஒரு சித்திரம் “உலகம்,  அதன் போக்கில், சற்றும் கவலையற்று இயங்கி கொண்டிருப்பதான” சித்திரம். இது தான் கதைகளுக்குள் நுழைவதற்கான முதல் வாசல்.


--

காலத்தின் கணக்கில் , தங்கள் உழைப்பை தங்கள் பங்களிப்பை குறிப்பிடத்தக்க வகையில் செய்த  ஆளுமைகள் குறித்த கதைகள் இவை. அந்த ஆளுமைகளின் பங்களிப்பை நினைவு கூறும் விதமாகவே இந்த கதைகள் அமைந்துள்ளன - அந்த ஆளுமைகளின் அந்தி காலங்களின் மறதி, விரக்தி, இயலாமை புறக்கணிப்பின் ஊடே தாம்  அவர்களின் கடந்த கால பெருஞ்செயல்களை நினைவு கூறுகிறோம்.

--

ஒவ்வொரு கதைகளிலும் ஒரு சின்ன சொற்றொடர் மனதிற்கு மிகவும் நெருக்கமாக அமைந்தது

“உள்ளே மாட்டிய சாவி “ (அது  கவிஞர் சுகுமாரன் அவர்கள் இட்ட தலைப்பு என்று ஆசிரியர் முன்னுரையில் கூறியுள்ளார் அந்த தலைப்பு நல்லபடியாக அமைந்துள்ளதாக மனதில் பட்டது )

“உணர்ச்சிகள் ஏதும் இல்லாத பிரம்மாண்ட இயந்திர பறவையை “

“காட்டில் மரங்களினுடைய நடப்பதை போல புத்தகங்களை பார்த்தவாறு அடுக்குகள் நடுவே உலாவிக் கொண்டிருந்தான் “

“வளைந்த மூங்கில்களே எலும்புகளைப் போல் தோன்றின “

“ஒருவரால் தொடர்ந்து ஏமாற்ற முடியாது அவரிடம் வைக்கும் அவர் மீது நம்பிக்கை அவரை மாற்றும்”

“ஒருவர் பணத்தை எந்திரத்தில் எண்ணி கட்டி மூளையில் அலட்சியமாக எரிந்து கொண்டிருந்தார்

உங்களுக்கு பணம் கொடுத்தவரும் கடன் வாங்கிப் போனாரு”

“பின்னாலிருந்து தேர் பல எறும்புகள் இழுத்துச் செல்லும் பண்டம் போல் இருந்தது”

“இப்பத்தான் போட்ட கன்னுகுட்டி போல் இருக்கிறது என் புகைப்படத்தை தொட்டு முத்தம் கொடுத்தாள் “

--

இந்தக் கதைகளில் தோன்றும் மற்றொரு சித்திரம் நகரமயமாதல். ஒவ்வொரு கதைகளும் மெல்ல முன்பு கண்ட இடங்களெல்லாம் கண் முன்னே காணாமல் போகின்ற ஒரு சித்திரம் வந்து கொண்டே இருக்கிறது. மாற்றம் ஒரு புறம் என்றால் அந்த மாற்றம் சில மக்களை தீண்டவே இல்லை என்பதான இன்னொரு சித்திரமும் வந்து கொண்டே இருக்கிறது. தீண்டவே இல்லை என்றால் அவர்கள் வாழ்வில் முன்பிருந்ததை விட அவர்கள் ஒரு நெருக்கடியான கடினமான ஒரு சூழ்நிலையில் வாழ நேர்ந்ததை இந்த கதைகள் பதிவு செய்கின்றன.

--

தலைக்கசம் கதை பூரண கலை அமைதி பெற்ற கதையாக எனக்கு பட்டது. இந்த கதைகளில் வரும் அதனை நிகழ்வுகளையும் நாம் வரிசைப்படுத்த முயல்கையில் - பின்தோற்றம் -இறப்பு-காதல்-தோற்றம் - படிப்பு-கண்டிப்பு-பழங்குடி-உடல்-படிப்பு-விளையாட்டு-புத்தகம்-தூது-காதல்-புகைப்படம்-கள்-உணவு-சாதி-உடல்- கூட்டு சிரிப்பு-பாகுபாடு-உடல்உழைப்பு - சர்க்கார் வேலை விண்ணப்பம்- காணாமல் போதல்-பின்தோற்றம்-மீள் தேடல்-தலைக்கசம் மாயம் - குடியிருப்பு பிளாட் தோற்றம் என்று வரிசைபடுத்தலாம். நம் சமகால பிரக்ஞையின், மானுடம் கடந்து வந்த பாதையின் தீற்றல்கள் இந்த கதையில் உள்ளன.

Monday, January 12, 2026

பாரபாஸ்

இன்றைய நவீன மனிதனுக்கு இணையாக வைத்து நாம் பாரபாஸை காண முடியும்.இரு புள்ளிகளில் இருந்து பாரபாஸ் சென்று அடைய நினைத்த ஒரே இடம் இயேசு கிறிஸ்து. ஒருவரை ஒருவர் நேசியுங்கள் என்று சொன்ன இயேசு கிறிஸ்து. இன்னொருவரின் பாவத்தின் சுமையை சுமக்க சொல்லும் இயேசு கிறிஸ்து.


மிதமிஞ்சிய களியாட்டங்களை விடுதலை உணர்வு மிகுந்த கொள்ளையனான பாரபாஸுக்கு பதில் கிறிஸ்து சிலுவையை ஏற்று கொள்கையில் பாரபாஸ் தடுமாற துவங்குகிறான் . இது முதற்புள்ளி. இனி அவன் பழைய பாரபாஸ் கிடையாது. கிறிஸ்துவை பின்தொடர்ந்து அவரை பின்தொடர்பவர்களை பின் தொடர்ந்து தனது கேள்விகளாலும் அவர்களது விளக்கங்களாலும் எஞ்சிய மௌனங்களினாலும் கிறிஸ்துவை புரிந்து கொள்ள முயல்கிறான். எவ்வளவும் முயன்றும் அவனால் கிறிஸ்துவை முழுமையாக நம்ப முடியவில்லை - பாரபாஸின் அவநம்பிக்கை கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் எளியவர்களிடம் இருந்து அவனை பிரித்து விடுகிறது. தனது சாத்வீக மனசஞ்சாரங்களில் அவன் அடிக்கடி ஈடுபட்டதால் அவன் தனது பழைய நண்பர்களுக்கும் வேண்டப்படாதவனாக மாறிவிடுகிறான். பாரபாஸ் காணாமல் போகிறான். முதல் புள்ளி முற்றும்.


இரண்டாம் புள்ளி - மீண்டும் தோன்றும் பாரபாஸ் முற்றிலும் வேறு ஒரு சூழலில் இருக்கிறான் - வெளி உலகத்தை காணவே முடியாத சுரங்கத்தில் அடிமையாக இன்னொரு அடிமையுடன் சங்கிலி பிணைப்பில் தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறான். இத்தகைய அடிமை சூழலில் பிணைப்பிலிருக்கும் அடிமையின் நம்பிக்கையை ஒற்றி இயேசு கிறிஸ்து மீண்டும் அவன் வாழ்வில் தோன்றுகிறார். கிறிஸ்துவின் மீட்பு குறித்த அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட தனது இணை அடிமை உடன் இருந்து பாரபாஸ் கிறிஸ்துவை நம்பியும் நம்பாமலும் சுரங்க அடிமை வேலையில் இருந்து மீண்டு, விவசாய அடிமை ஆகி, வீட்டு அடிமை ஆகிறான் - முழுவதுமாக நம்ப முடியாததான தவிப்பு பாரபாஸை அலைக்கழிக்கிறது. மீட்சியையும் இயேசுவின் இன்னொரு வருகையையும் அவன் நம்ப முயல்கிறான் - நம்ப விரும்புகிறான் . ஆனால் முழுவதுமாய் அவனால் நம்ப முடியவில்லை. இத்தகைய தத்தளிப்பான மன நிலையில் இருந்து ஒரு சிறு குழுவின் நடவடிக்கையை பின் ஒற்றி சென்று - கடைசி சிறு ஒளியை கண்டும் காணாமலும் மிகப் பெரிய தீயின் வழியும் கிறிஸ்துவை காண முயன்று இருளில் சென்று மறைந்து விடுகிறான்.

கட்டற்ற களியாட்டம் முதற்புள்ளி.  உழைப்பை உறிஞ்சும் கட்டமைப்பான ஒழுங்கு இரண்டாம் புள்ளி . இவ்விரு புள்ளிகளில் தொடங்கி கிறிஸ்துவை நோக்கி நடக்கையில் நம்பியும் நம்பாமலும் அலைக்கழிப்பில் சிக்குண்டு இருக்கிறான் நவீன பாரபாஸ்.