Tuesday, March 29, 2016

மஞ்சள் வெயில் - யூமா வாசுகி

மஞ்சள் வெயில்

காலமும் நினைவுகளும்

இரவும் பகலும், தம் கைகளால் மூடிய வசந்த காலங்கள், விரலிடுக்கின் வழி ஒளி வீச காலச் சக்கரம் பின்னால் சுழன்றது. ஆணாய் பிறந்த எவருக்குமே இப்படிப்பட்ட அனுபவம் வாய்த்திருக்கும். அல்லது இந்தப் பேர் உவகையில் சிக்கிக் களித்த ஒரு தோழனாவது இருக்கக் கூடும். பேசிப் பேசி மாய்ந்து தயங்கி, தவித்து, பித்தேறி, பிரிந்து, உளறி, உற்சாகமாய் கிடந்த நாட்கள் உருண்டோடி மறையும் தருவாயில் நுனி நாக்கில் மீண்டும் ஒரு இனிப்பு, மஞ்சள் வெயில் என்னும் இந்த மலரின் மணம். கவித்துவமான உணர்ச்சிகரமான படைப்பு.

காதல் என்னும் பேருணர்வினை, அதன் தீவிரத்தை, கலை மனங்களால் ஏன் தாங்க முடிவதில்லை? வெள்ளமென பாயும் நினைவின் சொற்களைச் சீராக்கி அடுக்கி வடிகாலாய் கவிதையாக்கி கதையாக்கி தாங்கள் அடைந்த விவரிக்க முடியாத ஆனந்தத்தை எப்படியோ வாசகனுக்கும் கடத்துவதில் இப்படைப்பு வெற்றி கண்டிருக்கிறது.

காதல் எனது, எனது என்று உரிமை கொள்ளாது, காதலி, தோழன், சக மனிதன், சக உயிரினம், இந்தப் பிரபஞ்சம் என மெல்ல விரியும் சாத்தியத்தையும், கலைஞனுக்கு காதல் பற்றிய நுண்புரிதலாய், காதல் என்பது ஒரு பேரன்பின் ஒரு பெரிய கருணையின் எண்ணற்ற கைகளில் ஒன்று என வாசகனுக்கு உணர வைக்கிறது.

இந்தப் படைப்பு சம்பவங்களின் கோர்ப்பாக இல்லாமல், அளவான புற வய சித்தரிப்புகளுடன், பெரும்பாலும் ஒரு காதலனின் உணர்வுகளை தத்தளிப்பை ஏக்கத்தை உணர்த்துவதாக உள்ளது. காதலின் தீவிரம் நிலை பிறழ்ந்து வெறுப்பாக மாறும் சாத்தியமும், எப்படி ஒரு பெருங்கருணையின் பேரன்பின் மடியில் இத்தனை சுய வெறுப்பும் கழிவிரக்கமும் தோன்ற முடியும் என்ற வியப்பும் மேலிடுகிறது. வெறுப்பின் ஊற்றுவாயில் எது, கிடைக்காத ஒரு பொம்மைக்கு ஆசைப்படும் குழந்தையின் உணர்வைப் போன்றதா, காதலில் வெற்றி என்றால் என்ன, தோல்வி என்பது என்ன?

உணர்ச்சிகரமான கொந்தளிப்பான நடையில் எழுதப்பட்டிருந்தாலும் புதினத்தின் அமைப்பில் தெளிவான கட்டமைப்பு இருக்கிறது. பெண்கள் பற்றிய இளைஞரின் கனவுகள் தொடங்கி, காதலின் முதற்கணங்கள், ஏக்கம், வெறுப்பு, பரஸ்பரம், பிரிவு, வலி, மீண்டும் காதல் எனத் துல்லியமாக நகர்ந்து, காதல் நீண்டு பேருணர்வின் சாரம் கண்டு மனம் நிறையும் இடம் வரை அழகு. சிறிய கச்சிதமான படைப்பு. என் காதல், எனது என்று தொடங்கும் புயலில் சிக்கிய படகை பேரன்பின் கரை சேர்ப்பது எது… திருப்பிச் செலுத்த வேண்டிய கடனா, கண்ணியமா? வாழ்வில் தன்னிச்சையாய் வரும் பேரன்புக் காலங்கள், காதல் தருணங்கள், இந்தப் படைப்பின் வழி கண் முன் விரிகிறது, புதிய பொருள் கொள்கிறது.

உன்னைப்பற்றி…

புழுவாய்
உறங்கி
விழித்தபோது
பட்டாம்பூச்சியாக
இருந்தேன்.

அவ்வளவு
காதலுடன்
கனவில்
வந்து முத்தமிட்டது
யார்?

– வீரான் குட்டி (மலையாளம்)

————————–

– மணிகண்டன்
http://mathippurai.com/2015/04/29/manjal-veyil/

No comments: