Tuesday, March 29, 2016

இசையாய் - சந்திரிகா ராஜாராம்

இசையாய்

எளிய அறிமுக நூல்

இசையாய் என்னும் இந்தக் கட்டுரைத் தொகுப்பு ஆழ்வார்கள் தொட்டு எம்.எஸ். வரை ஒரு வித்தியாசமான கலவையாய் பதிமூன்று வெவ்வேறு ஆளுமைகள் குறித்து எழுதப்பட்டுள்ளது. பெரும்பாலும் வாழ்க்கைக் குறிப்புகளும் தகவல்களும் நிறைந்துள்ள இந்தப் புத்தகம் நாளிதழ்களுக்குரிய எளிமையான அறிமுக நடையில் உள்ளது. பாரதியார், பாரதிதாசன், அருணகிரிநாதர், ஆழ்வார்கள், கோபாலக்ருஷ்ண பாரதி, ஆபிரகாம் பண்டிதர், எம்.எல்.வி, எம்.எஸ்., ஸ்வாதி திருநாள், ஜி.என்.பி, எம்.எம். தண்டபாணி தேசிகர், கவிகுஞ்சர பாரதி, க்ஷேத்ரக்ஞர் முதலிய ஆளுமைகள் பற்றிய கட்டுரைத் தொகுப்பு.

தகவல் திரட்டு

இசை பற்றிய எந்த ஒரு நூலாக இருந்தாலும், அதுவும் இசைத் துறையில் அங்கமாய் உள்ள ஒருவர் எழுதும் போது அந்தப் புத்தகத்தில் இசை ரசிப்புத்தன்மை, விமர்சனம், இசை நுட்பத்தின் விவரிப்பு, சுவாரஸ்யமான சம்பவங்கள் என பல தளங்களில் விஷயங்கள் இருப்பது ஒரு நல்ல புத்தகத்திற்கு அழகு. அந்த அளவுகோல்படி இந்தப் புத்தகம் ஓரளவே மேற்கூறிய தளங்களில் அமைந்திருக்கிறது.

பெரும்பாலும் வாழ்க்கைக் குறிப்புகளும் தகவல்களும் விரவி இருக்கின்றன. திருப்புகழ் மற்றும் பாரதிதாசன் பாடல்கள் கட்டுரைகளில் பாடல்களின் ராகங்கள், தாளங்கள் என இசை நுட்பக் குறிப்புகள் ஓரளவு உள்ளன. எம்.எஸ். மற்றும் எம்.எல்.வி கட்டுரைகளில் அவர்கள் வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகள் நன்கு தொகுக்கப்பட்டுள்ளன.

பழக்கப்பட்ட சொற்கள்

ஆளுமைகளின் மேதைமையை எடுத்துச் சொல்ல கட்டுரையில் வழக்கமான அபரிமிதமான புகழ் சொற்கள் கையாளப்பட்டுள்ளன. நேரடியாக ஆசிரியர்க்கு ஏற்பட்ட இசை அனுபவங்கள் பற்றிய விவரணை இல்லை. அவர் தம் கருத்துகளை ஏற்கெனவே பழக்கப்பட்ட சொற்கள் மீது ஏற்றி ஒரு பழக்கப்பட்ட கட்டுரையாக அமைந்துள்ளது. நாம் எதாவது பாடப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறோமோ என்று எண்ண வைக்கும் தொனியில் சில இடங்கள் உள்ளன. நேரடி அனுபவம் சார்ந்து இன்னும் நெருக்கமாக எழுத வாய்ப்புள்ள களம். “In every work of genius we recognize our own rejected thoughts; they come back to us with a certain alienated majesty” – Emerson, Self Reliance.

இலக்கியம் இசை

இசை சம்பந்தப்பட்ட இலக்கிய விஷயங்களை நினைவு கூர்வது பொருத்தமானதாக இருக்கும். ந. பிச்சமூர்த்தியின் பிடில் – வயலினின் ரிஷிமூலம் பற்றிய ஒரு அழகிய கற்பனையை அமைத்திருக்கிறது. சிருஷ்டி சக்தி பற்றிய அவரது இன்னொரு படைப்பு பலூன் பைத்தியம்.

தி.ஜா.வின் மோகமுள் நாம் அனைவரும் நன்கு அறிந்த படைப்பே –
“ரங்கண்ணா மனதையே, உடலையே சங்கீத மயமாக ஆக்கிக்கொண்டிருந்தார். தம்புராவை மீட்டிக்கொண்டே இருக்கும்போது, கிழவி உள்ளே அண்டாவில் நீர் எடுக்க செம்பால் மொள்ளும்போது ஞண் என்று ஒலித்தால், ‘என்னடா ஸ்வரம் அது!’ என்று கேட்பார். உடனே பதில் சொல்லவேண்டும். காக்காய் கத்தல், மாவு மிஷின் கரைதல், தாம்பாளச் சத்தம், கும்பேச்வரன் கோவில் மணி, வாசலில் போகும் குதிரை வண்டியின் ஹார்ன், சைக்கிள் மணி எல்லாவற்றிற்கும் இந்தக் கேள்விதான் எழும். சொல்லிச் சொல்லி இப்போது நமக்கும் அதே வழக்கமாகிவிட்டது. உள்ளே எப்போதும் நிலவிக்கொண்டிருக்கும் ஆதார சுருதிக்கு உலகத்து ஒலியெல்லாம் ஸ்தாயிகளாகவும், ஸ்வரங்களாகவும் கேட்கின்றன.” – தி.ஜா.வின் இசையுலகம்.

ரங்கண்ணாவின் வார்த்தைகளில் “கீர்த்தனம் வந்தா கொஞ்சம் அத்தர் இருந்தாத் தேவலை போலிருக்கும். அப்புறம் எங்க தேவடியா வீடு இருக்குன்னு உடம்பு அலையும். அதுக்கப்புறம் சங்கீதம் பிராணன் எல்லாம் ஒண்ணொண்ணாக் கரையும்.” – மோகமுள் பிறந்த கதை.

இசை ரசனையை வித்தியாசமான முறையில் சொல்லும் கதை ஆ. மாதவனின் “நாயனம்” – தி.ஜா.வின் இசைக் கட்டுரை ஒன்று.

ஆக, தகவல் திரட்டு என்ற முறையில் ஒரு வழக்கமான தொகுப்பாகவும் அதே நேரத்தில் அனுபவம் நுட்பம் ஆகிய தளங்களில் பயணிக்கத் தயங்கும் ஒரு கட்டுரைத் தொகுப்பு.

– மணிகண்டன்

http://mathippurai.com/2015/04/04/isaiyaai/

3 comments:

Buy Contact Lenses said...

What you are spoken communication is totally true. i do know that everyone should say a similar factor, however I simply assume that you simply place it in an exceedingly method that everybody will perceive. i am positive you may reach such a lot of folks with what you've to mention.

Divorce Lawyer Delhi said...

I am extremely impressed along with your writing abilities and also with the format in your blog. Anyway stay up to the excellent high quality writing, it's rare to find a nice weblog like this one these days.

App Development Company Delhi said...

Nice post, things explained in details. Thank You.