Tuesday, April 05, 2022

மாயவரம் - சந்தியா நடராஜன்

மாயவரத்தில் பிறந்த, வாழ்ந்த ஆளுமைகள் குறித்த கட்டுரைகள், நினைவுப் பதிவுகள் கொண்ட தொகுப்பு - சந்தியா நடராஜன் எழுதியுள்ளார். 


கட்டுரைகளை வாசிக்கையில் தோன்றிய விஷயங்கள் குறித்து, 


ஒரு ஊருக்கு எது பெருமை சேர்க்கிறது ? இன்று பெருமையாக சாதனையாக பார்க்கப்படும் விஷயங்கள் துவங்கிய விதம், அதற்கான தனி மனித முயற்சிகளை, தியாகங்களை நாம் இன்று எவ்வாறு புரிந்து கொள்கிறோம்? ஒரு தேசத்தின் வரலாற்றை ஊரின் வரலாற்றோடு பொருத்திப் பார்க்க வாய்ப்பாக இருக்கும் விஷயங்கள் குறித்தும் சில வரிகள் இந்தப் பதிவு


புத்தகத்தில் இடம் பெற்றுள்ள குறிப்பிடத்தக்க ஆளுமைகள் குறித்து, 


காவிரி

மாயூரநாதர் 

பரிமள ரங்கநாதர் 

தேரெழுந்தூரில் கம்பர்

தரங்கம்பாடி சீகன்பால்குவின்

மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை

உவேசா அவர்களின் தமிழ் கல்வி 

மாயூரம் வேதநாயகம் பிள்ளை 

மு அருணாச்சலம்

மூவலூர் ராமமிருதம் அம்மையார்

ஜி நாராயணசாமி நாயுடு

கல்கி கிருஷ்ணமூர்த்தி


கட்டுரைகளை வாசிக்கையில் இந்த ஆளுமைகள் குறித்து மேலும் அறிந்து கொள்ள ஆர்வம் எழுகிறது.

இவர்கள் தவிர மாயவரம் அளவில்  அரசியல், இலக்கிய, சமூக இயக்கங்களுக்காக வாழ்வின் பெரும் பகுதியை அர்ப்பணித்த ஆளுமைகள் குறித்த நினைவுக் குறிப்புகளும் இந்நூலில் உள்ளன. 

இந்திய தேசத்தின் சுதந்திர போராட்ட வரலாற்று நிகழ்வுகளின் எதிரொலி மாயவரத்திலும் இருந்தது. மாயவரம் சேர்ந்த தமிழர்கள் காந்தியுடன் தென்னாபிரிக்காவில் உரிமை போராட்டங்களில் பங்கெடுத்துள்ளனர். அதன் நினைவாக இந்தியா வந்தவுடன் காந்தி, தில்லையாடி வந்திறங்கி, தில்லையாடி மண் எடுத்து கும்பிட்டார். சுதந்திர போராட்டம் வலு பெற்ற அதே வேளையில்  விடுதலை வேட்கையையும் தாண்டி,  கள், அந்நியமோகம் - கதர், பெண்ணடிமை, சாதி ஒழிப்பு  என்னும் இன்ன பிற தளங்களில் மாயவரம் நெடுக நடைபெற்ற சீர்திருத்தங்கள், போராட்டங்கள்  குறித்த குறிப்புக்கள் அடங்கிய நூல் இது. குறிப்பாக ஜி நாராயணசாமி நாயுடு அவர்களின் ஆர்ப்பாட்டம் இல்லாத அப்பட்டமான வரிகள், ரத்தம் சிந்தி பெற்ற சுதந்திர வெற்றியை மறக்காமல் இருக்கச் செய்வது. சின்ன அண்ணாமலை அவர்களின் "சொன்னால் நம்ப மாட்டீர்கள்" புத்தகத்திலும் இது போன்ற, சுதந்திர போராட்ட காலம் குறித்த நேரடியான குறிப்புகள் இடம் பெற்றிருக்கும்.  சுதந்திரம் கிடைத்த பின் பல்வேறு சமூக தரப்பின் குரல்களாக சுதந்திர இந்தியாவை வடிவமைத்ததில் திராவிட, கம்யூனிஸ்ட் கட்சிகளின் பங்களிப்பை இக்கட்டுரைகள் வாயிலாக புரிந்து கொள்ளலாம். 

எது பெருமை 

ஒரு ஊருக்கு எது பெருமை ? ஒரு ஆறு,  நீடித்த பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வரும் பண்பாட்டு விஷயங்கள், முதன் முதலில் நடந்தவை, ஆளுமைகளின் தனிப்பட்ட சாதனைகள் மற்றும் தியாகங்கள், வரலாற்று மனிதர்களின் தடம் அவ்வூரில் பதிந்த விதங்கள், அந்த ஊர்களின் விவசாய வியாபார செழிப்பு, வழிப்பாட்டு தளங்களின் தனித்துவம் - என பொதுவாக இவ்விஷயங்களை கூறலாம் - இவை பெரும்பாலும் நேற்றைய விஷயங்கள் -  அவற்றில் இன்றும் நீடிக்கும் சில விஷயங்கள் நாளைக்கும் எடுத்துச் செல்லக் கூடியதாக அமைந்தவை எவை ? 

---

மாயவரம்

இவ்வளவு பெருமை மிக்க ஊர்களிலிருந்து ஏன் வெளியேறினார்கள் 

ஏன் நினைவுகளை வெளியிருந்து தூண்டியபடி ?

நிலவுடைமை பெருமை சுடரின் மையக்கருமையில் சாதியும் தாசிகளும்,

நறும்புனல் காணா  காவிரியைக் கண்டு சிறு முக சுளிப்புடன் செய்யத் தவறியவற்றிற்கு மாமூலான ஒரு முகமன் 

மீண்டும் ஊர் திரும்பி வா என்றும்  வேண்டாம் என்றும் கை அசைக்கும்  உள்ளூர்வாசிகள்

பல கால சுடரின் கருமையை நூற்றாண்டு அரசியல் காந்தி திராவிடம் பொதுவுடைமை இன்னும் சிலர் கண்டு சொன்னவர்களுக்கு நாம் உறுதி அளித்த விஷயங்கள்.

மணிக்கு 120 ல் இரு ஐந்து மணி நேர பாய்ச்சலில் நாம் தொட்டு விட்டு திரும்பும் நம் குல தெய்வங்கள் 

இங்கிலாதது அங்கு அங்கிலாதது இங்கு என்று நாக்கை சுழற்றியபடி புலன்களை விரித்து நாம் அலைபாயும் நேரங்கள் பல நூற்றாண்டு வரும் என்றொரு கணக்குண்டு. நாம் இந்த பெருமை மிக்க  அலைச்சலை நிறுத்த ஒரு வழியுண்டா ? 

நில உடைமை சுடரில் தஞ்சம் புகவா இத்தனை நவீன வேடங்கள் என்று யார் அவர் கேட்பது ? 

கோபுரம் வேண்டாம் பிரகாரம் வேண்டும் என்று நீ கேட்பதில் ஏதோ அர்த்தம் 

சுற்றுப் பிரகாரத்தில் அமர்ந்து இருக்கையில் கேட்கும் நாதஸ்வர நாதம் உன் வீட்டு ஸ்பீக்கரில் குழறும் ரேடியோஹெட் 

தமிழ் வளர்த்த பண்டிதர்கள் கேட்கிறார்கள் எவ்வளவு தமிழ் youtube டைனோசர்கள் 

குந்தேரா " Slowness" என்றார்

இந்த "மெதுவா" வஸ்து அரிதினும் அரிதான ஒரு விடை , ஒரு சாளரம்.

மாயவரம் குறித்து அவர் எழுதிய நாவலா அது என்று இலக்கிய வாசகர் கேட்கிறார். எந்த ஜானர் ?

பழையதையும் புதிதையும் வெட்டி

நம் சோற்றுப் பருக்கைகளால் அட்டைக் கோட்டைகளில் ஒட்டும் எதிர் கால கனவு எனில் "சயின்ஸ் பிக்க்ஷன்"

காலமேனும் மரங்களில் கிளை தோறும் தாவித் தாவி பெருமை  பழங்கள் பறிக்கும் விளையாட்டு எனில் "வரலாற்றுப் படம் "

இப்போதைக்கு, "நடை சாற்றி விடுவார்களாம்" என பைபாஸில் விரையும் மனதின் "இருத்தலிய நாடகம்".

நீங்கள் செல்லும் கோயில் பிரகாரத்தில் "தேமே" என்று ஒருவன் அமர்ந்திருப்பான். நூற்றாண்டு சுற்றிய குழப்பத்தில் இருக்கும் அவனிடம் எதுவும்  கேட்காதீர்கள். அவனுள் உறையும் அத்தனை கேள்விகளுக்கும் மெதுவாய் தான் விடை வரும்.

No comments: