Sunday, April 24, 2022

பீடி - தக்க்ஷிலா ஸ்வர்ணமாலி

பீடி - தக்க்ஷிலா ஸ்வர்ணமாலி - தமிழில் எம் ரிஷான் ஷெரிப்


கதை நாயகன் நயனாநந்த நாம் முன் பின் அறியாத நபர். இருப்பினும் மிக இயல்பாக நமக்கு அவனது கதையை கூறத் தொடங்குகிறான், தன் சொந்தக் கதையை துவங்கும் முன் விமர்சகர்களுக்கும் தீவிர வாசகர்களுக்கும் கதைக்குள் அணுகி வர  சிறியதொரு பீடிகை போடுகிறான். "அசர மாட்டோம்" - அந்தப்பக்க பதில். பீடிகை பின்னோடே தனது கதையை கோர்வையாக சொல்லத் தொடங்குகிறான் - இரண்டு அருமையான காதல் கதைகள், ஒரு காத்திரமான குடும்பக் கதை , நண்பன் குறித்த சிறிய கிளைக்கதை என கோர்த்து முழு கதையை கூறி முடிக்கிறான். பீட்சா டாப்பின் போல அரசியல் தத்துவம் உண்டு - அவை முக்கியமில்லை - செறிவான இரு காதல் கதைகளும் நல்லதொரு குடும்பம் உருவாகும் கதையும் தான் மனதைத் தொட்டது.

காதல் கதைகள் இரண்டிலுமே,  பெருக்கெடுத்து செல்லும் மௌனமும் இயற்கையுடன் இயைந்த உடல் உழைப்புமே காதல் மலர, தழைக்க போதுமானதாக  இருக்கின்றது. வேறெந்த சொல்லோ ஸ்தூலமான பொருளோ தேவைப் படாத பிரபஞ்சத்துள் காதலர்கள் சஞ்சரிக்கின்றனர். பரஸ்பரம் காதலை சொல்லக் கூட தேவை இல்லாது இயல்பாய் ஒரு நாள் பொழுது நிலவோ சூரியனோ எழுவது போல் அமைந்த காதல் கதைகள் இவை. அதிக பிரயத்தனம் இன்றி அமைந்த காதல்கள் குறித்த கதைகள் இவை, மௌனமும் அருகாமையும் அலங்காரம் செய்யும் காதல்கள் இவை. 

குடும்பக் கதையில் எனக்கு தெளிந்தவை - இரு வேறு குடும்பங்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் கலந்து முற்றிலும் புதியதொரு குடும்பத்தை நிர்மாணிக்கிறது. இப்புதிய குடும்பம் மேற்சொன்ன காதல்களைப் போலவே மிகக்குறைந்த எதிர்பார்ப்பினை தன் அமைப்பில் கொண்டதாக தன்னை நிர்மாணித்துக் கொள்கிறது.  நெடுநேர மௌனமும் குறைந்த தேவைகளும் இயற்கை சார்ந்த  உடல் உழைப்பும் இக்குடும்பத்தை அலங்கரிக்கின்றன. 

எதிர்பார்பில்லாத காதல் எதிர்பார்பில்லாத குடும்பம் 

நடுவில் நாயகன் நயனாநந்தவிற்கு வேஷங்கள் கட்ட வரும் அழைப்பும் அவ்வேஷங்களின் வியர்த்தம் அவனுக்கு பிடிபடுவதும் சுவாரஸ்யமான  இடை அத்தியாயங்கள். 

நயனாநந்த, காதல் வழியும் குடும்பத்தின் வழியும் குறிப்பிடத்தக்க விடுதலை மனநிலைக்கு செல்கிறான். அவன் சென்று அடைந்திருக்கும் இடம் கவர்ச்சிகரமான ஒன்று, அவன் செய்ய வேலை எதுவும் பெரிதாக இல்லை, தேவையும் குறைவு, அன்பிற்கு பஞ்சமில்லை, தீயவற்றிடம் இருந்து அது சொந்த தாயே ஆயினும் மெல்ல விலக அவன் பழகி இருந்தான், யோசிக்க பல மணி நேரங்கள் அவனுக்கு இருந்தன.  வெளி செய்திகளை அவன் செவிமடுக்க நிறுத்தி கொஞ்சம் காலமாகியிருந்தது, அவன்  நண்பன் வஜ்ரவுடன் பேசியபடியும் காதலியின் அருகாமையிலும் காலத்தைக் கழித்தபடி இருந்து வந்தான். சில நாட்களில் அவன் ஒன்றுமே செய்வது இல்லை. 

எதிர்பார்பில்லாத காதல் எதிர்பார்பில்லாத குடும்பம் எதிர்பார்பில்லாத தனிமனிதன் 

இது சாத்தியமே இல்லாத விஷயம் என்று கூறுபவர்களுக்கு என்னிடம் பதில் இல்லை. நயனாநந்த சிறுவயதில் ஒருமுறை ஊர் மாறியதோடு சரி, சொந்த ஊரிலேயே தான் இருந்து வருகிறான். இது அவனை செயலின்மையின் மதுவிற்கு அடிமையாக்கி விட்டது எனக்கருத வாய்ப்புண்டு,

நயனாநந்த விற்கு சில கஷ்டங்கள் உண்டு ,ஆனால் அவன் சிறு வயதிலிருந்தே தீமையிடம்  நேரடியாக மோதாது தப்பிக்க தெரிந்தவன். மெல்ல கஷ்டங்களை செரிக்கத் தெரிந்தவன். தானாகவும் அவனாகவும் அமைத்ததே இம்மூன்றும்

எதிர்பார்பில்லாத காதல் எதிர்பார்பில்லாத குடும்பம் எதிர்பார்பில்லாத தனிமனிதன் 

நல்ல நாவல். சிங்களத்திலிருந்து தமிழுக்கு ரிஷான் ஷெரிப் நன்றாக மொழிபெயர்ப்பு  செய்துள்ளார். 

No comments: