Sunday, July 21, 2019

வெல்லிங்டன் - சுகுமாரன்

அன்புள்ள சுகுமாரன் அவர்களுக்கு,

வணக்கம் 

தங்களுடைய வெல்லிங்டன் நாவலை தற்போது வாசித்து முடித்தேன் - நிறைவான வாசிப்பு அனுபவமாக இருந்தது - நாவல் குறித்த எனது மனப்பதிவை பின்வருமாறு தொகுக்க முயல்கிறேன் 

தங்களுடைய நாவல் என்னுடைய பால்ய கால் உணர்வுகளை ஒரு ஒற்றைப் பந்து போல் திரட்டித் தந்தது. வெல்லிங்டன் வழி மேற்கு மாம்பலம் செல்ல முடியும் என்பது மிகுந்த மகிழ்ச்சியாகவும் அதே நேரத்தில் சோகமாகவும் இருந்தது 

புற உலகு அளவு கோல் படி தங்களுக்கே தெரியும் வெல்லிங்டன் க்கும் மேற்கு மாம்பலத்திற்கும் உள்ள தூரம். இருந்தும்,மானசீகமாக ஏகாம்பர பிள்ளைத் தெருவை பெயர்த்து மேற்கு மாம்பலத்தில் வைத்தேன்  - பாபு  கேட்ட பார்த்த செய்த விஷயங்கள் எனக்கே எப்போதோ  இது போல் நடந்தது என கூறிக் கொள்கிறேன் 

அனைத்து பக்கத்துக்கு வீடுகளுக்கும் செல்ல எந்தத் தடையும் இல்லாத பால்ய காலத்தை, யார் வீட்டிலும் உணவருந்தக் கூடிய எளிமையை  , அப்பா அம்மா பாட்டிகளின் கனிவை, பொறாமையை, வீண் பேச்சை, சண்டைகளை, உடலுழைப்பை, அள்ளிப் பதுக்கும் பண்பாட்டை , கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் என் பால்ய நண்பர்களை, கிரிக்கெட் நினைவுகளை எண்ணி மீள்கிறேன் 

அத்தனை கடைகளுக்கு சீட்டாள் போல் ஓடி இன்று மனைவியோ அம்மா வோ கடைக்கு செல்லக் கேட்டால் சீறுகிறேன் ,அத்தனை பேரின் கதையை புரிந்தும் புரியாமலும் கேட்டுக் கொண்டாலும் இப்போது கவனம் இல்லை , கேட்ட கதை தானே என்ற ஒரு வித அலட்சியம், கேட்கும் முன் தீர்வெழுத துடிக்கும் அவசர நாவு, தலைக்குள் இதற்கு மேல் இடமில்லை என்பது போன்ற பாவனை - நாவலின் ஜீவன் இந்த value system குறித்த பின்னோடும் இழையில் இருக்கிறது - நாம் மட்டும் கஷ்டப்படவில்லை , நம்மை சுற்றி உள்ள அனைவரும் நம்மை போலவே தான் என்ற எண்ணம் எனது பால்யத்தில் நான் உணர்ந்த உண்மை.

இந்த விஷயம் இன்று பெருமளவு மாறியிருக்கிறது என எண்ணுகிறேன். நம் தலையை நாம் காப்பாற்றாவிட்டால் யாரவது கொண்டு சென்று விடுவார்கள் என்ற நம்பிக்கையின்மை கூடியிருக்கிறது . தொலைக்காட்சி, ஊடகம் உறுமியபடியே நம் சிறிய கோணல்களை கூராக்குகிறது - தொலைக்காட்சி, ஊடகம் இல்லாது ஏகாம்பர பிள்ளைத் தெருவை பரோடா தெருவை  நினைக்கையில் என்ன ஒரு ஆசுவாசம். நமது தரித்திரத்தை வெள்ளையப்பன் மெல்ல விழுங்குவது போல நமது கனிவை சாமர்த்தியம் மெல்ல விழுங்குகிறது. 

தங்கள் படைப்புத் திறனிற்கு எனது வணக்கங்கள்.

மிக அன்புடன்,
மணிகண்டன் 

No comments: